மாமனிதனுக்கு புகழஞ்சலி !
பொதுச் சுகாதார மருத்துவப் பணியில் ஈடு இணையில்லா சேவைப் புரிந்த மருத்துவர் பெ. குகானந்தம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளான (24.06.2026) அவரின் இலட்சியப் பயணத்தை தொடர உறுதியேற்போம்!
சாலையோர மக்களின் பசியை உணர்ந்தார் ஒரு மருத்துவர். கண்ணியமிக்க உணவு மூன்று வேளையும் யாரிடமும் யாசிக்காமல் பசியாற “அம்மா உணவகம்” உதயமானது. அத்தகைய உணவகத்திற்கு அடித்தளமிட்டவர்தான் மருத்துவர் பெ. குகானந்தம்.
இறந்த பின்பு உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 21 வழிவகுக்கிறது.
இறந்த உடலுக்கு உறுதி செய்யப்படும் கண்ணியம், உடலை அடக்கம் செய்யும், ஏரியூட்டும் பணிகளை மேற்கொள்பவருக்கு கிடைப்பதில்லை.

இந்த நிலையை மாற்றி, சுடுகாடு வெட்டியான் என்ற சொல் ஒழித்து, மயான உதவியாளர் எனும் அரசுப் பணியிடம் உதயமானது. அத்தகையப் பணியிடம் உருவாகக் காரணமானவர்தான் மருத்துவர் பெ. குகானந்தம்.
மிக வேகமாக பரவும் வாய்ப்பிருந்த தொற்று நோய்களை தடுப்பூசி போட்டு மட்டுமே தடுத்துவிட முடியாது.
நோய் உருவாகும் தோற்றுவாயில் அதை தடுக்க வேண்டும் எனும் அறிவியல் அணுகுமுறையை அரசு உணரச் செய்து, தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உரிய மருந்துகள், உரிய பாதுகாப்பு, சாலைகள், உழைக்கின்ற மக்கள் நெருக்கமாக வாழும் குடியிருப்பு பகுதிகளில் உரிய சுகாதார நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் சென்னை மாநகரை மூன்று பெரும் தோற்று நோய் பாதிப்பில் இருந்து காத்தார் ஒரு பெரும் மருத்துவ அறிஞர். அவர்தான் மருத்துவர் பெ. குகானந்தம்.
மருத்துவப் பரிசோதனை, பகுப்பாய்வு, படம் எடுத்தல் (ஸ்கேன், எம்ஆர்ஐ) போன்றவற்றால் நோய்யின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்க முடியாது. நோயின் தோற்றுவாய் அறிந்துக் கொள்ளலாம் மருத்துவம் பார்க்க இயலாது.
மக்களின் வாழ்விடம், வாழ்நிலை, வாழும் சூழல் ஆகியவை தூய்மையாக இல்லை என்றால் அதுவே மக்களைத் தொற்றும் நோய்களுக்கான காரணிகளாக அமையும்.
வீதியில் இயல்பாக நடக்க வேண்டும், நடைபாதையில் வாழும் மக்களிடம் பேச வேண்டும், போதுமான சுகாதார வசதிகள் இருக்கின்றனவா என்று ஆராய வேண்டும், இவற்றை ஒரு மருத்துவர் செய்ய முற்பட்டால் மட்டுமே மக்கள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதை தனது நடவடிக்கைகளின் மூலம் உணர்த்தினார் ஒரு மருத்துவர். அவர்தான் மருத்துவர் பெ. குகானந்தம்.
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்” எனும் திருக்குறளுக்கு மிகச் சிறந்த உதாரணமாக வாழ்ந்தது மட்டுமல்லாமல், “மிகவும் எளியவராகிய என் சகோதரர்களான இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” எனும் விவிலிய வசனத்திற்கு சாட்சியாக இருந்து அமரரானவர் மக்கள் மருத்துவர் அய்யா பெ. குகானந்தம் அவர்கள்.
மருத்துவர் பெ. குகானந்தம் அவர்களின் வாழ்க்கை நமக்கான பாடம்.
மருத்துவர் பெ. குகானந்தம் அவர்களின் இலட்சியப் பயணத்தை தொடர நாம் உறுதியேற்போம்
Dr. P. Kuganantham’s life is an inspiration, a lesson for us to learn and practice.
என்றும் நிலைத்திருக்கும் மருத்துவர் பெ. குகானந்தம் அவர்களின் புகழ்.
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை







Comments are closed, but trackbacks and pingbacks are open.