ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் : முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம்
ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் : முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம்
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான வைத்தியலிங்கம் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்தியலிங்கம், செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், ‘ரஜினி அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம்,’ என்றார்.
“அவர் அரசியலுக்கு வரட்டும். வரவேற்கிறோம். யாரும் (இதுபோன்று) செயல்திட்டங்களை வகுத்து வந்தாலும் அதை வரவேற்பது தமிழர் பண்பாடு,” எனக் கூறிய வைத்தியலிங்கம், “அவர் (ரஜினி) கட்சி ஆரம்பிக்கட்டும். அதன்பிறகு எனது நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன்,” என்றார்.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தமிழக முதல்வர் மீது தொடர்ந்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறிவருவது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அவர் (ராஜா) மீதான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தற்போது மேல்விசாரணை நடைபெற்று வருகிறது. முதலில் அவர் அதை சந்தித்துவிட்டு வரட்டும். அதன்பின்னர் அவர் ஊழலைப் பற்றி பேசட்டும்,” என்றார் வைத்தியலிங்கம்.