திருச்சி விமானநிலையம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மலர்மன்னன் (வயது 42) இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஜூன் மாதம் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் 5-ஜி செல்போன் கோபுரம் அமைத்து பணம் ஈட்டலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. உடனே அந்த செல்போன் எண்ணுக்கு மலர்மன்னன் தொடர்புகொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், செல்போன் டவர் அமைக்க உங்களிடம் சொந்தமாக நிலம் உள்ளதா? என கேட்டுள்ளார். அதற்கு அவர் தனது மனைவி பெயரில் திருச்சியில் நிலம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
உடனே நிலம் தொடர்பானஆவணங்கள் மற்றும் வங்கி விவரங்களை அனுப்பி வைக்குமாறு தெரிவித்தார். பின்னர் செல்போன் நிறுவனம் மூலமாக ரூ.15 லட்சம் முன்பணமாக செலுத்த இருக்கிறோம். அதற்கு ஆவண கட்டணமாக ரூ.2லட்சம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
இதனை நம்பிய மலர்மன்னன் அந்த மர்ம நபர் கொடுத்த வங்கி கணக்குக்கு பல்வேறு தவணைகளாக ரூ.2 லட்சம் வரை அனுப்பி வைத்தார். அதன்பிறகு அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மலர்மன்னன் திருச்சி சைபர்கிரைம் போலீசில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலுச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.