முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயை நேர்காணல் சொல்வது என்ன ?
டிடி, ஜேசன் சஞ்சயை கண்டிருந்த நேர்காணலின் மூன்று பகுதிகளையும் இப்போது பார்த்து முடித்தேன். முதல் பகுதி மட்டும் வந்த போதே பையன் தெளிவாக இருக்கார் என்பதை உணர முடிந்தது. அடுத்த இரண்டு பாகங்களிலும் இன்னும் இம்ரசிவ் விஷயங்கள் சஞ்சயிடம் வெளிப்பட்டன.
தமிழக அரசியலில் உங்களின் தந்தை தவிர்க்க முடியாத ஆளுமையாக தற்போது வளர்ந்து இருக்கிறார் , அது குறித்த உங்களின் பார்வை என்கிற கேள்வியை டிடி வைத்ததற்கு, சஞ்சயின் பதில் சிறப்பான ஒன்று.
ஒரு புரட்சி மாதிரியான விஷயத்தை தனது தந்தை செய்திருக்கிறார். அதன் பொருட்டு, தானும் தனது தங்கை மற்றும் அவருடன் சம்மந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே கூடுதல் கவனத்தோடும் பொறுப்போடும் இருக்க வேண்டியதை உணர்ந்திருக்கிறேன் என்றதும், அப்போதான அவரின் உடல்மொழி உள்ளார்ந்து அதனை சொல்வதாக இருந்ததும் ரொம்பவே முதிர்ச்சியான வெளிப்பாடாகவும் மற்றும் பாராட்ட வேண்டிய வளர்ப்பாகவும் இந்த பதில் வழி வெளிப்பட்டார்.
தந்தை மாதிரியே தோற்றம், நெப்போ கிட் வகைமையில் ஹீரோவாக நுழைய எல்லா சந்தர்ப்பங்களும் அவருக்கு இருந்திருக்கும்.. இருந்தும் ஹீரோவாக முயற்சி செய்யாமல் இயக்கத்தை அவர் ஏன் தேர்வு செய்தார் என்று கேள்வி எனக்கெல்லாம் இருந்தது.. அப்படி ஒரு கேள்வியை வைக்காமலேயே இந்த நேர்காணல் முழுக்கவே அதற்கான பதில் விரக்கிடந்துதான் என்னளவில் பெரிய சுவார்ஸ்மாக இருந்தது.

பிடித்த தமிழ் திரைப்படங்களில் ஒவ்வொரு ஜான்ராவுக்கும் ஒரு படம் சொல்லுங்க என ஒரு செக்மெண்ட் வந்தது.. அதில் ஃபேமிலி டிராமா என்கிற வகைக்கு அவர் பஞ்ச தந்திரத்தை சொல்லி, அந்த ஸ்கிரிப்ட் குறித்தே பேசி கிரேசி மோகனை போற்றினார். டிடிதான் கமல் சார் என்று ஹீரோவையும் சொல்லி, சஞ்சயை திசை திருப்பினார். சஞ்சய்க்கு ஸ்கிரிப்ட்டின் மீதும் ரைட்டர்ஸ் மீதுமே பார்வை இருந்திருக்கிறது என்பதை இயல்பாக அறிய தந்த இடம் இது.
போலவே, டீன் ஏஜராக இருந்த போது தமிழ் கிளாசிக் திரைப்படங்கள் பார்க்க ஆரம்பித்ததாகவும், அதில் மகேந்திரனின் படங்களை அவரின் சாய்ஸாக சொல்லி, ‘சினிமாவ விஷுவல் மீடியமா எப்படி பிரசண்ட் பண்றதுன்னு அப்பவே காட்டியிருக்காரு’ என்கிற காரணத்தோடு அவர் சொன்னதிலும்கூட சஞ்சயிடம் ஓர் இயக்குநர் பார்வை அந்த வயதிலேயே இருந்திருக்கிறது என்பதை உணர முடிந்தது.
போலவே, தியேட்டரில் என்ஜாய் செய்து பார்த்த படம் என்று ‘சூது கவ்வும்’ படத்தினை சொல்கிறார்.. இந்தத் தேர்விலேயே ஹீரோயிஸம் தாண்டி ஸ்க்ரிப்ட் பேஸ்ட் திரைப்படங்கள்தான் அவரை பள்ளி நாட்களில் இருந்தே ஈர்த்திருக்கிறது என்பதும், அவர் ஏன் இயக்குநர் கனவுகளை சுமக்கிற ஆளாக இருக்கிறார் என்பதற்கு தொடர்ச்சியாக அவர் சொல்லாமல் சொல்லும் பதிலாகவும் அணுக முடிந்தது.
பாடல்களில் அவரின் ரசனைகூட வித்தியாசமாக இருந்தது. ஆல்பத்துக்காகவே பிடித்த படம் என்றால் எதை சொல்லுவீங்க என்றதற்கு, அவரின் தேர்வு , யுவனின் ‘மூன்று பேர் மூன்று காதல்’ படமாக இருந்தது. இது ஒன்றே போதும் சஞ்சய் எப்படியான ரசனை கொண்டவர் என்பதை அறிய. தான் கேட்கும் பாடல்களிலும் சரி , தான் பார்க்கும் படத்தின் தேர்வுகளிலும் சரி சஞ்சயை சக ரசனைக்காரன் என்கிற கோணத்தில் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. இதன் பொருட்டு அவரின் சிக்மா திரைப்படத்தின் மீது நம்பிக்கையும் கூடுதலாகி இருக்கிறது.
தனது தங்கை உடனான பாண்டிங் குறித்து சொல்கிற ஓர் இடத்தில், “தான் ஒரு முடிவை எடுத்து.. அதை வீட்டில் உள்ளவர்கள் ஏற்க மறுத்தாலோ மாற்றுக் கருத்தை வைத்தாலோ .. பெரியவங்க சொல்றாங்க என தான்கூட யோசிப்பேன்.. ஆனால் தனது தங்கை, என்னுடைய முடிவில் எனக்குத் தெளிவு இருக்கிறது.. நீங்கள்தான் புரிதலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.. மாற வேண்டியது நீங்கள்தான்” என்பது போல தன்னுடைய முடிவில் உறுதியாக நின்று அது சரியான முடிவுதான் என்பதை எல்லோருக்கும் புரிய வைத்துவிடுகிற குவாலிட்டி குறித்து சொன்னது இங்கே வளர்ந்த பலருக்கும் சிறந்த அறிவுரை என்பேன். வயதாகிவிட்டது மட்டுமே அறிவுரை வழங்க தகுதி கிடையாது. ஆனால் இங்கே அது பலருக்கும் புரிவதில்லை.
சஞ்சயியின் உரையாடலில் ஆங்கிலம் சரளமாக புழங்குறது , அந்த வகையில் அவர் ஒரு gen z தலைமுறையின் பிரதியாக தெரிந்தாலும், தமிழிலும் தேர்ந்தெடுத்த சொற்களைப் பேசுகிறார். போலவே, அவரின் உடல்மொழிகளில் தனது தந்தையின் சாயல் தெரிகிற இடங்கள் .. விஜயை அவரின் இருபதுகளில் இருந்து பார்த்து வருகிற தலைமுறைக்கு ஒரு மகிழ்வான காட்சி அனுபத்தையும் தந்தது. சஞ்சயிடம் தந்தையின் சாயல் இயல்பாக வெளிப்படுவதைத்தான் ரசிக்க முடியும்.. ஆனால், விஜயாக தங்களை எண்ணிக்கொண்டு அவரின் இன்ஃளூயன்ஸால் அவரைப் போலவே வெளிப்படும் ஆட்களின் உடல்மொழி ஒவ்வாமையைத்தான் தரும்.
அதே போல, அவருடன் நடித்த ஒரு காரணத்தை வைத்துக்கொண்டே.. தானே சி. எம் ஆகிவிட்ட ரேஞ்சுக்கு பில்டப் விடும் மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் சஞ்சயின் பொறுப்பான பதில்களையும் அவரின் அலட்டல் இல்லாத உடல்மொழிகளையும் பார்த்து எப்படி பேசுவது என கற்றுக்கொண்டால் நலம்.
இறுதியாக, நேர்காணலை முடிக்கும் போது, சிக்மா வெற்றியடைய வாழ்த்துகள் என டிடி சொன்ன போதும்கூட , ஆடியன்ஸின் ஜென்யூன் ஒப்பீனியன் வேண்டும், அதுவே தன்னை வளர்த்துக்கொள்ள உதவும் என்றுதான் சஞ்சய் முடித்தார்.
வாழ்த்துகள் சஞ்சய்..!
உங்களின் இந்தப் பணிவு, இயல்புத்தன்மை, பொறுப்புணர்ச்சி, ரசனை, இவற்றோடுகூடிய திறமையே நீங்கள் எதிர்பார்க்கும் தனித்த அடையாளத்தோடு உங்களை நிலை நிறுத்தும்.
way to go 😍
— அ.பாரி.







Comments are closed, but trackbacks and pingbacks are open.