திருச்சி பொன்மலையில் தீ விபத்து! மரங்கள் எரிந்து சாம்பல்!
திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் ஆலயம் அருகே தைலத்தோப்பு என்கிற காட்டுப்பகுதி உள்ளது. இதன் அருகே அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றும் உள்ளது. இந்தப் பகுதியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பொன்மலை ரயில்வே பணிமனையில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் நீண்ட நேரம் அவர்கள் வரவே இல்லை பின்னர் தமிழக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அவர்கள் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் இருந்து தீயணைப்புத் துறை அதிகாரி லியோ ஜோசப் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் அங்கு உள்ள பெரிய பெரிய மரங்கள் எரிந்து நாசமானது. இதனால் அப்பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இது போன்ற தீ விபத்துக்கள் பொன்மலை பகுதிகளில் அடிக்கடி ஏற்படுவதாகவும் இது சம்பந்தமாக ரயில்வே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வருவதில்லை எனவும் ஆனால் ரயில்வே சார்ந்த ஏதாவது விளையாட்டு போட்டிகள், நிகழ்ச்சிகள் நடந்தால் அங்கு தண்ணீர் தெளிப்பதற்கு மட்டும் தீயணைப்பு வாகனத்தை பயன்படுத்துவதாகவும் அப்பகுதியை சேர்ந்த ரயில்வே ஊழியர்களும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.
மேலும், பொதுமக்கள் தகவல் அளித்தும் தீ விபத்தை கண்டு கொள்ளாமல் சம்பவ இடத்திற்கே வராத ரயில்வே தீயணைப்புத் துறையினர் மீது ரயில்வே ஊழியர்கள், பொதுமக்கள் குற்றச்சாட்டு.
இதுபோன்று அடுத்த முறை ரயில்வே தீயணைப்புத்துறை கண்டுகொள்ளாமல் இருந்தால் ரயில்வே பணிமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.