இரு கழகங்கள் இணைப்பு முயற்சி

0

விழுப்புரம் கலவரப் பகுதிகளை பார்வையிட எம்.பி.க்கள் குழு ஒன்றை டெல்லியிலிருந்து அனுப்பப்படும் என்றார் அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய். அவ்வளவுதான் அன்றைய தமிழகத்தின் முதல்வர் எம்.ஜி.ஆர். பொங்கித் தீர்த்துவிட்டார்.

விழுப்புரம் சம்பவம் தொடர்பாக நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எம்.பி.க்கள் குழு வந்தால் விசாரணை பாதிக்கும் என்றார் எம்.ஜி.ஆர். பிரதமர் மொரார்ஜியும் பின்வாங்கினார்.

2 dhanalakshmi joseph

இதுதான் காரணமா என்று தெரியாது ஆனால் எம்.ஜி.ஆருக்கு மொரார்ஜி மீது அதிருப்தி ஏற்பட்டு விட்டது. அதை வெளியிட காரணமானது சிக்கமல்லூர் தொகுதி இடைத்தேர்தல் அதில் இந்திராகாந்திக்கு தன்னுடைய ஆதரவு உண்டு என்பதை எம்.ஜி.ஆர். அறிவித்தார். அதை எம்.ஜி.ஆர். சொன்னவிதம் எல்லோரையும் பிரமிக்க வைத்தது.
நெருக்கடி நிலையை இந்திராகாந்தி செயல்படுத்தியபோது நாட்டில் கட்டுப்பாடும் ஒழுங்கும் சீராக இருந்தன.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தனது ஆட்சியை முழுமை பெற ஓராண்டு இருந்தபோது ஜனநாயக பண்பை கைவிடாமல் தேர்தலை முன் கூட்டியே நடத்தினார் இந்திரா. இந்திராவை எதிர்த்து போட்டியிட்ட வீரேந்திர பாட்டிலுக்கு தி.மு.க. ஆதரவு. இறுதியில் சிக்கமல்லூர் தேர்தலில் இந்திராவே வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.

- Advertisement -

- Advertisement -

தி.மு.க.- இந்திரா காங்கிரஸ் கூட்டணி இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பினர். தமிழ்நாட்டில் மக்கள் விரோத சக்தியாக விளங்குகின்ற அ.இ.அ.தி.மு.க.வை எதிர்க்க இந்திராகாந்தியுடன் தேர்தல் உடன்பாட்டிற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன என்றார் கருணாநிதி.

அவ்வளவுதான் வெடித்துக்கிளம்பிய எம்.ஜி.ஆர்.
28.08.1979 காரைக்கால் கூட்டத்தில் கருணாநிதிக்கு பதிலடிக்கு கொடுத்தார். கருணாநிதி அவர்களே, உங்கள் கட்சி தொண்டர்களை ஊக்கப்படுத்த எதையும் பேசாதீர். இந்திராவிடம் கூட்டு சேர்ந்தால் ஒரு சவால் விடுகிறேன்.

1977 தேர்தலில் நாங்கள் இந்திராகாந்தியுடன் சேர்ந்து பெற்ற இடத்தை நீங்கள் பெற முடியுமா? முடியாவிட்டால் உங்கள் பெயரை மாற்றிக்கொள்வீர்களா? 35 இடங்களை நாங்கள் பெற்றோம்.

4 bismi svs

நீங்கள் உண்மையான தமிழன், உண்மையான திராவிட தொண்டன் என்றால் அத்தனை இடங்களையும் பிடியுங்கள். மேட்டில் நிறுத்தி உங்களுக்கு மாலை போடுகிறேன். இதை அகங்காரமாக சொல்லவில்லை. கருணாநிதியால் முடியாதது இது.

1971-ல் தி.மு.க.வில் 25 எம்.பி.க்கள் இருந்தனர். அதில் ஒருவரையாவது உங்களால் டெல்லியில் மந்திரியாக்க முடிந்ததா? எம்.ஜி.ஆர். சவால் விட்ட அடுத்த வாரம் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் இணையப்போகின்றன என்றும், அதற்கான நடவடிக்கையில் ஜனதா கட்சியின் பி.ஜி. பட்நாயக் ஈடுபட்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியானது.

இரண்டு கட்சித் தொண்டர்களுக்கும் ஒரே குழப்பம். செய்தியை நிரூபிக்கும் வகையில் பி.ஜி.பட்நாயக் சென்னை வந்தார். கோபாலபுரத்தில் பி.ஜி.-கருணாநிதி சந்திப்பு நடந்தது. பிறகு பி.ஜி.- எம்.ஜி.ஆர். சந்திப்பு நிகழ்ந்தது. மின்னல் வேகத்தில் காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தன.

13.09.1979 அன்று தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள். கீரியும் பாம்புமாக செயல்பட்டுக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் அன்று ஒரே அறையில் சந்தித்தனர்.
அது சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எம்.ஜி.ஆருடன் நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் வந்திருந்தனர். கருணாநிதியுடன் பேராசிரியர் அன்பழகன் வந்திருந்தார். சில நிமிடங்கள் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் பேசிக்கொண்டனர். பின்னர் இருவரும் தனி அறைக்கு சென்றனர். இரண்டு கட்சிகளும் இணைந்த பிறகு பொதுவாக தி.மு.க. என்றே செயல்படலாம்.

பேரறிஞர் அண்ணா உருவம் பொறித்த அதிமுக கொடியே தி.மு.க.வின் கொடியாக இருக்கும் என்பது உட்பட பல விஷயங்கள் பேசப்பட்டன. ஒரு குறிப்பிட்ட தினத்தில் திமுக-அதிமுக செயற்குழு, பொதுக்குழு வெவ்வேறு இடங்களில் கூடி இணைப்பு தீர்மானத்தை நிறைவேற்றலாம் என முடிவானது. அறையில் வெளியே வந்ததும் செய்தியாளர்கள் புகைப்படங்கள் எடுக்க அறைக்குள் அழைக்கப்பட்டனர். வெற்றிமுகத்துடன் பி.ஜி.நாயக் விடைபெற்றார்.

பத்திரிக்கையாளர்களுக்கு நல்ல தீனி. விரைவில் இணைப்பு விழா நடக்கும் என்று ஆரூடங்கள் வந்து கொண்டிருந்தன. அடுத்து என்ன என்று எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். மறுநாள் நடக்க இருந்த வேலூர் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இணைப்பு பற்றி எம்.ஜி.ஆர். மூச்சே விடவில்லை. ஏன் என்று கேட்டார் காவல்துறை அதிகாரி மோகன்தாஸ். என்னுடைய அன்னை இணைப்பு முயற்சி வேண்டாம் என்று உணர்த்திவிட்டார். இதுதான் எம்.ஜி.ஆர். அளித்த பதில்.

-ஹரிகிருஷ்ணன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.