“ஆத்தா.. நான் பாஸாயிட்டேன்” -இதுதான் 16 வயதினிலே படத்தைத் திரையில் பார்த்தவர்கள் கேட்ட முதல் வசனம். ஒரு புதிய இயக்குநர் தன் வருகையை ரசிகர்களுக்குப் பதிவு செய்வதற்காக எழுதப்பட்ட, ‘சென்ட்டிமென்ட்’டான வசனம் இது என்றாலும், அதைக் காட்சிப்படுத்திய விதத்தில், சமூகத்தின் எண்ண ஓட்டத்தை-மனிதர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார் இயக்குநர் பாரதிராஜா.
அந்த வசனத்தைப் பேசுபவர் கதாநாயகி மயிலு. சின்னஞ்சிறு கிராமத்தில் பள்ளிக்கூடத்திற்குச் சென்று, பத்தாம் வகுப்பு தேறிய மாணவியின் குரல் அது. பெண்களை இந்தளவுக்குப் படிக்க வைத்தால், அதிகம் படிச்ச மாப்பிள்ளைக்கு எங்கே போறது? என்று ஊரில் உள்ளவர்கள் கேட்கின்ற காலம். ஆனால், மயிலுக்கு ஆசை மாப்பிள்ளையைத் தேடுவதல்ல. ஒரு டீச்சர் ஆக வேண்டும் என்பதுதான். அதை அவள் கற்பனை செய்வதை நமக்கு கண்முன் காட்சியாக வைத்திருப்பார் இயக்குநர்.
பெண் கல்விக்கான முக்கியத்துவத்தை சமுதாயம் மெல்ல உணரத் தொடங்கிய நிலையில், தன் முதல் படத்தின், முதல் வசனமாக, பெண் குரலில், “ஆத்தா.. நான் பாஸாயிட்டேன்” என்று சொல்ல வைத்தவர் பாரதிராஜா. அடுத்து வந்த அவரது படங்களான கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, புதுமைப் பெண், முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களிலும் பெண் கதாபாத்திரங்களுக்கு அவர் தந்த முக்கியத்துவத்தை, மீண்டும் அந்தப் படங்களைப் பார்க்கும்போது உணரலாம்.
தன் இளம் வயதில் பார்த்த கிராமங்களை மனதில் அப்படியே உறைய வைத்துக் கொண்ட மனிதர் அவர். அவர் படம் எடுத்த காலங்களில் கிராமங்கள் எவ்வளவோ மாறியிருந்தன. ஆனால், தன்னுள் உறைந்திருந்த பால்ய கால கிராமத்தை செல்லுலாய்டு சித்திரங்களாக்கிய கலைஞன் அவர். கிராமத்துவாசிகளின் உணர்ச்சிகளையும், ஒட்டுமொத்த கிராமத்துக்கானத் தன்மையையும் ஒருசேர அவரது படங்களில் காண முடியும். கிராமங்கள் வளர்ந்திருந்தாலும் இந்த உணர்வுகள்ள இன்றும் அப்படியே தான் இருக்கின்றன என்பதையே அவரது திரைப்படங்கள் வெளிப்படுத்தின.
பாசாங்கற்ற வெள்ளந்தி உள்ளமும், சாதி உறவுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் பிடிவாதமும் கலந்த கிராமத்து வாழ்க்கையைப் பல படங்களில் பாரதிராஜா அப்பட்டமாகக் காட்டியிருக்கிறார். நடிகர் திலகம் சிவாஜிக்கு இளமையான மேக்கப் போட்டு, பிரபுவுக்கு அவரை அண்ணனாக நடிக்க வைத்துக் கொண்டிருந்த இயக்குநர்களுக்கு நடுவே, சிவாஜியின் வயதை அப்படியே காட்டி, அந்த மனசுக்குள்ளும் ஒரு காதல் அரும்புவதை ரசிகர்களின் உணர்வுடன் கலக்கச் செய்த ‘முதல் மரியாதை’க்குரிய இயக்குநர் அவர். இந்திய அளவில் பேசப்படும் சத்யஜித்ரே போன்ற இயக்குநர்களுக்கு சற்றும் குறைவில்லாதத் திறமையாளர் தமிழ் மண்ணின் பாரதிராஜா.
ஒரு கவர்ச்சிப் பாட்டுக்கு ஆடுவதற்காக ஒவ்வொரு படத்திலும் சில்க் ஸ்மிதா அவசியம் என்றிருந்த சீசனில், அவரைக் குடும்பப் பாங்கான வேடத்தில் சேலை கட்டிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து உயர்ந்து நின்றார் இயக்குநர் இமயம். உள்ளுக்குள் கலைத்தாகம் கொண்ட மகத்தான கலைஞனால்தான் இத்தகைய மாற்றங்களைக் கொண்டு வர முடியும். பல நடிகர்-நடிகைகளை அறிமுகப்படுத்தியதுடன், ஏற்கனவே புகழ்பெற்ற நடிகர்களையும் சிறப்பாக இயக்கிய திறமை அவருக்குரியது.
காலம் மாறிய நிலையில், இளம் இயக்குநர்கள் நிறைந்த அவையில், “நானும் இப்படி ஒரு படம் எடுத்துக் காட்டுகிறேன்” என்று அவர் காட்டிய அந்த வீம்பில், உணர்வுகளால் சாகாத ஒரு கலைஞன் வெளிப்பட்டான். ஆரம்பகாலத்தில், இவருக்கு கிராமப்புறங்களைத்தான் தெரியும் என்று திரையுலகம் விமர்சித்தபோது, அதற்கு மாறாக சிவப்பு ரோஜாக்கள், டிக்..டிக்..டிக்.., ஒரு கைதியின் டைரி போன்ற திரில்லர் வகைப் படங்கள், என் உயிர்த் தோழன் போன்ற மாநகரத்தின் எளிய மனிதர்களுடன் கலந்த அரசியலைப் பேசும் படங்கள் என்று தன் பரிமாணங்களை விரிவுபடுத்திப் பல படங்களைத் தந்த வீம்புக்காரர் அவர்.
பாரதிராஜாவும் இளையராஜாவும் இரட்டைப் பிறவிகளோ என்று நினைக்கிற அளவுக்கு 1980களின் நடுப்பகுதி வரை அவர்களின் திரைப்பயணம் தொடர்ந்தது. அந்த ‘காம்போ’வின் பாடல்கள் எவர்க்ரீன் ஹிட். அதன் பின்னர் தேவேந்திரன், அம்சலேகா ஆகியோருடன் பயணித்து, அதன்பின் கிழக்குச் சீமையிலே படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து, அவரிடமிருந்து கிராமத்து மெட்டுகளில் அற்புதமானப் பாடல்களைக் கொண்டு வந்தவர். இசையைப் போலவே, ஒளிப்பதிவிலும் திரைமொழியின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் பாரதிராஜா நேர்த்தியானவர். நிவாஸ், கண்ணன் எனப் பல ஒளிப்பதிவாளர்கள் அவருக்காகவே வாய்த்தனர்.
ஸ்டுடியோக்களுக்குள் முடங்கியிருந்த சினிமாவை, ஊர்களுக்குள் கொண்டு வந்தவர் என்ற பெருமை பாரதிராஜாவுக்கு உண்டு. கிராமத்துக் காட்சி என்றால் கிராமங்களுக்கே சென்று ஆறு, வயல், மலை, பொட்டல்வெளி ஆகியவற்றில் படப்பிடிப்பு நடத்துவது அவர் வழக்கம். படம் எடுப்பதற்காக அவர் கிராமங்களுக்கு சென்றது மட்டுமல்ல, கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ர்களின் நெஞ்சில் நம்பிக்கையை விதைத்து, அவர்களை சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களுக்குள் கொண்டு வந்து, இயக்குநராக்கியதும் பாரதிராஜாதான்.
பாரதிராஜாவிடம் நேரடியாக உதவி இயக்குநராக, கதாசிரியர்களாக இருந்தவர்கள் பட்டியல் நீளமானது. அவரது தாக்கத்தால் சினிமாவுக்கு வந்த படைப்பாளர்களின் பட்டியல் அதைவிட நீளமானது. இப்போதிருக்கும் தமிழ்த் திரையுலகில் பலரும் பாரதிராஜா பரம்பரைதான். இது வேறு எந்த இயக்குநருக்கும் கிடைக்காத பெருமை. படைப்புகளால் ரசிகர்களை மட்டுமல்ல, புதிய படைப்பாளர்களையும் கொண்ட மரணமில்லாத மகத்தான கலைஞன் இயக்குநர் பாரதிராஜா.
— கோவி.லெனின்







Comments are closed, but trackbacks and pingbacks are open.