இந்த முறையும் இவர்களது கருத்துக்கணிப்பு அப்படித்தான் இருக்கிறது !
நான் இதுவரைப் பார்த்த பல கருத்துக்கணிப்புகள் ஏதாவது ஒரு கட்சி சார்புடையவர்களால்தான் நடத்தப்பட்டதாக இருந்தது.
அந்த கட்சி சாயம் அந்தக் கருத்துக்கணிப்பை செய்து, அதை ப்ரசன்ட் செய்கிறவர் உபயோகிக்கும் சொற்களில் பட்டவர்த்தனமாகத் தெரியும்.
உதாரணம் ரங்கராஜ் பாண்டே, JVC Sriram போன்றவர்கள். ரங்கராஜ் பாண்டே பேசும்போது மோடி என்ற பெயரைக் கேட்டதுமே மக்கள் மெய்சிலிர்த்து, புளகாங்கிதம் அடையத் தொடங்கிவிட்டார்கள் என்பது போலப் பேசுவார்.
ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்தபோது ஒரு ப்ரசன்டேஷன் செய்தார். அதில் ரஜினிக்கு 15 சதவீதம் ஆதரவு என்று ஆரம்பித்து, பத்து நிமிடங்களில் அவரை முதலமைச்சர் ஆக்கினார். “அவர் அந்தப் பதவியை ஏற்பாரான்னுதான் தெரியல?” என்று கேள்வி கேட்டு நம்மை திகைப்பில் ஆழ்த்தினார். பார்த்த எனக்கு அண்ணாமலை படத்தில் சைக்கிளில் பாலூற்றும் ரஜினி ஒரு பாட்டு முடிவடைகையில் ஹோட்டல் அதிபர் அளவுக்கு பணக்காரர் ஆன சீன் கண்களில் வந்து போனது.

JVC ஶ்ரீராம் அடித்து சொல்லுவார் “இனிமே இங்க பாஜகதான். “15 தொகுதி கன்ஃபர்ம். ஒரு அஞ்சு கொஞ்சம் இழுபறி. அதுலயும் ஸ்லைட் எட்ஜ் பாஜகவுக்குதான்” என்று சொல்லி தமிழிசை, அண்ணாமலை இருவரையும் கன்ஃபர்ம்ட் மத்திய அமைச்சர் ஆக்கினார்.
இந்த முறையும் இவர்களது கருத்துக்கணிப்பு அப்படித்தான் இருக்கிறது. இதில் “நாம எப்பவுமே சரியா சொல்லுவோம். நம்ம கணிப்பு 90-95 பர்சன்ட் கரெக்ட்டா வந்திருக்கு” என்று யாரும் பழைய வீடியோவை கிண்ட மாட்டார்கள் என்கிற தைரியத்துடன் பாண்டே சொல்லுவார்.
இந்த முறை நான் பார்த்ததில் ஓரளவு பார்க்கக்கூடியதாக, கட்சி சார்பு பூச்சு வெளியே தெரியாமல் இருந்தது தந்தி டிவிதான். அதன் கிருஷ்ணமூர்த்தி நேர்மையுடன் நிலவரத்தை சொல்கிறார். குறைந்தது 3% எட்ஜ் இல்லாவிட்டால் இழுபறியில் போடுகிறார். ஹரிஹரன் – அசோகவர்ஷினி இருவரும் கலகலப்பாக தொகுத்தளிக்கிறார்கள். அவர்களுக்கு பல தொகுதிகளைப் பற்றியும், வேட்பாளர்களைப் பற்றியும் நல்ல knowledgeம் இருக்கிறது.
இன்று ஆதன் யூட்யூப்பின் கருத்துக்கணிப்புப் பார்த்தேன். சென்னையைப் பற்றி மட்டும். ஆதன் திமுக ஆதரவு ஊடகம் என்பது மாதேஷ் காரணமாக என் கருத்து. அதனால் கொஞ்சம் ஸ்கெப்ட்டிக்கலாகவே பார்த்தேன்.
இவர்கள் வித்தியாசமாக சென்ற சட்டமன்ற தேர்தல் வாக்குகள், சட்டமன்ற தொகுதி வாரியான 2024 பாராளுமன்றத் தேர்தல் வாக்குகள் இவற்றை எடுத்துக்காட்டி, அத்துடன் கருத்துக்கணிப்பின் முடிவைக் காட்டினார்கள். பிரசன்ட் செய்த இரண்டு இளைஞர்களும் நல்ல விவரம் அறிந்து, சேகரித்துப் பேசுகிறவர்களாக இருந்தார்கள். ஒருதலைபட்சமாக பேசவில்லை.
பலரும் மறந்த, கவனிக்காத ஒரு விஷயத்தை இவர்களது ப்ரசன்டேஷன் வாட்டியது. பல urban தொகுதிகளில் 2021 தேர்தலில் மக்கள் நீதி மய்யம் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளைப் பெற்றிருந்தது. தவெக பெறும் வாக்குகளில் பல அந்த வாக்காளர்களிடம் இருந்தும் (திமுக, அதிமுக, நாதக தவிர) வரும் என்பதை ஆதனர்கள் காட்டினார்கள்.
அவர்களது கணிப்புப்படி சென்னையில் 14/16 திமுக வசம் என்று தெரிகிறது. பல தொகுதிகளில் சென்னையில் TVK இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்பது தெரிகிறது.
நான் ஆவலோடு பார்த்தது இரண்டு தொகுதிகள். எங்கள் வேளச்சேரி. அடுத்து மயிலாப்பூர்.
வேளச்சேரி காங்கிரஸ் வெல்லும் என்றார்கள். மயிலையில் தமிழிசை தோல்வி காணுவார் என்றார்கள்.
மே 4 தெரிந்துவிடும். அதற்குப்பின் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக விஜய் உடைய தவெக இருக்கும் என்று தெரிகிறது. ஆனால், அது தொடர்ந்து வளர்வது விஜய் எத்தனை கடின உழைப்பைப் போடுகிறார் என்பதைப் பொறுத்த விஷயம். எனக்கு அதிக நம்பிக்கையில்லை. அவரது வாக்குகள் நீண்டகால அடிப்படையில் சீமானுக்கு உதவலாம். அல்லது அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினால் அவருக்கு.
— சத்யமூர்த்தி ராமானுஜம்








Comments are closed, but trackbacks and pingbacks are open.