பக்கத்துவீட்டுக்காரரின் மனைவியுடன் கள்ளக்காதல்: 4 குழந்தைகளின் தந்தை படுகொலை
பக்கத்துவீட்டுக்காரரின் மனைவியுடன் கள்ளக்காதல்:
4 குழந்தைகளின் தந்தை படுகொலை
பக்கத்துவீட்டுக்காரரின் மனைவியுடன் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக தஞ்சாவூர் அருகே நான்கு குழந்தைகளின் தந்தை வெட்டிக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக அவரது பக்கத்துவீட்டுக்காரர் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் துருசுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குருநாதன். வயது 25. இவர் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சித்ரா. வயது 22. இத்தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள்.
குருநாதனின் பக்கத்து வீட்டுக்காரர் வீரையன். வயது 38. விவசாய கூலித் தொழிலாளி. வீரையனுக்கு வீரச்செல்வி என்ற மனைவி, ஒரு மகள், 3 மகன்;கள் என நான்கு குழந்தைகள் உள்ளனர்.
குருநாதன் திருப்பூரில் பணிபுரிந்துவந்த நிலையில், ஏற்கெனவே நான்கு குழந்தைகளுக்கு தந்தையான வீரையனுக்கும் சித்ராவுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த குருநாதன் அவர்களிருவரையும் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவர்களிருவரும் கள்ளத் தொடர்பை விடவில்லை எனத் தெரிகிறது. இதைத் தொடரந்து, வீரையனை கொலை செய்ய முடிவு செய்தார் குருநாதன்.
அதன்படி, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் வீரையன் அவரது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது வீட்டின் மீது குருநாதனும் அவரது கூட்டாளிகள் இருவரும் சேர்ந்து சரமாரியாக கல்லெறிந்துள்ளனர்.
கல்லெறிந்தது யார் என்பதை அறிய கதவைத் திறந்து வெளியே வந்த வீரையனை குருநாதனும் அவரது கூட்டாளிகளும் கட்டை மற்றும் அரிவாளால் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த வீரையனை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆயினும், அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று பிற்பகல் பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, செங்கிப்பட்டி காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள குருநாதன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடிவருகின்றனர்.