போர்ச்சுகீசியர்களை எதிர்த்து நின்ற முஸ்லீம் மரைக்காயர்கள் !
இருமேனியை தேடினேன் … இயற்பெயர் அறிந்தேன் ! பாகம் – 07
சங்குத்தொழிலில் மரைக்காயர் பிரிவை சார்ந்த முஸ்லீம்களின் பங்களிப்பு குறித்து கடந்த தொடரில் பார்த்தோம். மரைக்காயர்களைத் தவிர மற்ற முஸ்லீம்களும், பறவர்களும் கூட சங்கு குளிக்கும் தொழிலாளர்களாக இருந்து வருகிறார்கள் என்பதை இந்த தொடரில் பார்க்கலாம்.
ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்த பெரும் வியாபாரிகளாகிய மரைக்காயர்களைத் தவிர மற்ற முஸ்லீம்களும், பறவர்களும் பெரும்பாலும் சங்கு குளிக்கும் தொழிலாளர்களாவே இருந்தனர். பறவர்கள் பெரும்பாலும் முஸ்லீம்களுடன் இணக்கமாகவும், அண்டியும் வாழ்ந்து வந்ததுடன் அவர்களின் சங்குகளைக் கடல் வாணிபத்தில் ஈடுபட்டிருந்த முஸ்லீம் மரைக்காயர்களிடம் விற்றும் வந்தனர். இந்த மரைக்காயர்கள்தான் அன்று கீழக்கரை, காயல்பட்டினம், அதிராம்பட்டினம், காரைக்கால், கேரளா, ஸ்ரீலங்கா கடலோரப் பகுதியில் கொடிகட்டிப் பறந்தனர். நாளடைவில் வசதியான, நாகரிகமான, வெளிநாட்டு வாணிபத் தொடர்புடைய மற்றும் கடல் மார்க்கம் அதிகம் அறிந்த முஸ்லீம்களிடம் சமமாகத் தொழில் நடத்த முடியாமல் பறவர்கள் பின்னடைந்தனர்.

அதனால், முஸ்லீம்கள் மேல் வெறுப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்த சமயம் போர்ச்சுகீசியர்களின் வருகை அவர்களுக்கு உத்வேகத்தை அளித்தது. அன்றைய சூழ்நிலையில் போர்ச்சுகீசியர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் முஸ்லீம்களுக்கு எதிரியாகவே இருந்து வந்தனர். அதற்கு முக்கிய இரண்டு காரணங்கள் உண்டு.
முதல் காரணம் 800 ஆண்டுகள் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகீசின் சில பகுதிகளை ஆண்டு வந்த முஸ்லீம்களை விரட்டியடித்த வெற்றியுடன், தோற்ற முஸ்லீம்களின் உதவியில் பல நாடுகளுக்குக் கடல்வழிப் பயணத்தை அறிந்து, கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கும், மசாலா பொருள்களை வாங்குவதற்கும் புறப்பட்டனர். அன்று ஸ்பெயின் நாட்டை ஆண்ட முஸ்லீம்கள் பெரும்பாலும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆகையால் அவர்களை ‘மூர்’ என்று அழைத்தனர்.
இரண்டாவது காரணம் போர்ச்சுகீசியர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் அவர்களுக்குப் போட்டியாக வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள்முஸ்லீம்கள். ஆகையால் முஸ்லீம்களிடமிருந்து வியாபாரத்தைக் கைப்பற்றப் பறவர்களைத் தூண்டினர். பறவர்களுக்கும் போர்ச்சுகீசிரியரின் உதவி தேவைப்பட்டது. இதன் விளைவு பல ஆயிரம் பறவர்கள் கிறிஸ்துவர்களாக மாற்றப்பட்டார்கள். முஸ்லீம்களின் கடல் வியாபாரம் பாதிக்கப்பட்டது. இந்தியாவின் கடலோரப் பகுதியில் முஸ்லீம்கள் அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த அவலநிலை பிரிட்டிஷ்காரர்களின் வருகைக்குப் பின்தான் குறைய ஆரம்பித்தது.
இந்திய கடலோரங்களில் வியாபார பொருளாக கருதப்படும் கடல் வாழ் சிற்றினமான சங்குகளின் ஐந்து வகைகள் குறித்து அடுத்த தொடரில் பேசுவோம்.
தொடரும் …







Comments are closed, but trackbacks and pingbacks are open.