கலைமகள் சபா : நிலத்தை பாய் மாதிரி சுருட்டிகிட்டு யாரும் ஓட முடியாது !
திருச்சியில் ஜூன்-13 அன்று, கலைமகள் சபா தனிநபர் ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சிறப்பு அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப முன்னிலையில் நடைபெற்ற கலைமகள் சபா உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டத்தில், கோயம்புத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் அறிவழகன் பல்வேறு கருத்துகளை விரிவாகவே பதிவு செய்திருந்தார்.
அவரை அங்குசம் சார்பில் நேர்காணல் செய்திருந்தோம். ”என்னுடைய அப்பா, அம்மா, அக்கா எல்லோரும் கலைமகள் சபாவின் உறுப்பினர்கள்தான். வழக்கறிஞராக இருக்கிற எனக்கே என்ன நடக்குதுன்னு தெரியல. அங்குசம் யூடியூப் சேனலை பார்த்துதான் நானே தெரிஞ்சுகிட்டேன். அப்போ, இந்த தகவல் எல்லாம் எந்த அளவுக்கு மக்களை போய் சேரலைனு புரிஞ்சிக்கனும்.
வழக்குல சிக்கினப்போ 5 இலட்சம் சொச்சமாக இருந்த கலைமகள் சபாவின் உறுப்பினர்கள் இப்போது எப்படி 6 இலட்சம் உறுப்பினர்களாக ஆனாங்க? 1992 ஆம் ஆண்டில் கலைமகள் சபாவின் சார்பில் வெளியான கண்ணிமை என்கிற புத்தகத்தில் 100 கோடிக்கும் மேல டெபாசிட் இருக்குனு பதிவு செய்திருக்காங்க. அதை பத்தி இப்போ யாரும் பேச மாட்றாங்க.

இடையில் ஜாயிண்ட் ரிசீவர்ஸ்னு போட்டு அவங்க ஒரு 870 ஏக்கர் கலைமகள் சபாவின் நிலங்களை உறுப்பினர்களோட அனுமதியே இல்லாம வித்திருக்காங்க. வித்த பணம் 75 கோடியை டெபாசிட் பன்னியிருக்கோம்னு சொல்றாங்க. அப்புறம் 40% அளவுக்கு கட்டுன பணத்தை 1.5 இலட்சம் பேருக்கு பிரிச்சி கொடுத்திட்டோம்னு சொல்றாங்க. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, இங்கே ஜாயிண்ட் ரிசீவர்ஸ் நியமிச்சதே தப்பு.
பைலா படி எங்களுக்கு நிலமா வேணும்னு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்த நிலையில், இடத்தை வித்து பணமாக கொடுக்க யார் முடிவெடுப்பது? 13,500 ஏக்கர் நிலங்கள் இருக்கிறது. இதுகுறித்து முடிவெடுக்க ஒரு எக்ஸ்பெர்ட் கமிட்டியை போடுங்க. முதலில் உறுப்பினர்களின் தகுதியை தீர்மானிங்க.
“நாம நிலத்தில்தான் முதலீடு செய்றோம். யாரும் பாய் மாதிரி சுருட்டிட்டு போய்விட முடியாது”னு அன்னைக்கு ஜான் சொன்னாரு. அத நம்பிதான் முதலீடு செய்தோம். ஆறு இலட்சம் உறுப்பினர்கள் இருக்கிற இடத்துல, வெறும் ஆயிரம் பேர் கூடினா பத்தாது. அதனாலதான், கலைமகள் சபா மெம்பர்ஸ் வெல்பேர் அண்ட் ப்ரொடெக்சன் டிரஸ்ட்னு ஆரம்பிச்சிருக்கிறேன். உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, அவர்களின் கருத்துக்களையும் கேட்டு, நீதிமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் இத்தகையை முயற்சியை எடுத்து வருகிறேன்.” என்பதாக தெரிவிக்கிறார், வழக்கறிஞர் அறிவழகன்.
முழுமையான நேர்காணலை காண
யாரையும் கேட்காமல் ஏன் நிலத்தை விற்கிறார்கள் ? கலைமகள் சபா வழக்கு !
— வே.தினகரன்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.