தூர்ந்துவிடும் நிலையில் ஏரி! காசு பார்த்த கழகங்கள்! பரிதாபத்தில் விவசாயிகள் !
தஞ்சை மாவட்டம், தஞ்சாவூர் – பூதலூர் பேருந்து வழித்தடத்தில் அமைந்துள்ளது கள்ளப் பெரம்பூர் ஏரி. 639 ஏக்கர் விஸ்தீரனத்தில் அமையப்பெற்ற இந்த ஏரியின் மூலம் கள்ளப்பெரம்பூர், சித்திரக்குடி, ராயத்தூர் போன்ற 10 கிராம விவசாயிகள் பயனடைந்து 2262 ஏக்கர் அளவுக்கு விவசாயம் நடைபெறுகின்றது.
ஆனால், அ.தி.மு.க. ஆட்சியிலும் தி.மு.க. ஆட்சியிலும் இந்த ஏரியை தூர்வார பலகோடிகள் ஒதுக்கப்பட்டும் முறையாக இப்பணிகள் செய்யப்படவில்லை. குறிப்பாக 2020 – 2021 ஆம் ஆண்டு 92 இலட்சமும்; 2023-2-24 ஆம் ஆண்டு 4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் வேலைகள் சரிவர செய்யவில்லை.
மேலும், 9 மதகுகள் உள்ள ஏரியில் 1.25 மில்லியன் லிட்டர் நீரை சேமிக்க முடியும். இந்த ஏரியை முறையாக தூர்வாரி பராமரித்தால் மூன்று போகம் விவசாயம் செய்யலாம் என்ற நிலையில், இப்படி ஒரு அவலம் விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.
கள்ளப்பெரம்பூர் ஏரிக்கு நீர்வரத்து கச்சமங்கலம் என்ற ஊரில் உள்ள வெண்ணாற்றில் இருந்து பிரியும் ஆனந்த காவேரி என்ற ஆற்றில் ஒரு வழியும், கல்லணைக் கால்வாய் இருந்து நீர், கோனாவரி வழியாக ஒரு வழியும் மூலம் பாசனம் நடைபெறுகின்றது. இவ்வளவும் ஒருங்கே அமையப்பெற்ற இந்த ஏரியை முறையாக தூர்வாரிட மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும் வேளாண்துறை அமைச்சருமான வினோத் ரவி முயற்சி எடுப்பாரா? விவசாயிகளின் அல்லல் தீர்ப்பாரா?
தஞ்சை க.நடராசன்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.