மண்ணச்சநல்லூரில் கதிரவன் உதிப்பதை யாராலும் தடுக்க முடியாது…!
”மண்ணச்சநல்லூரில் கதிரவன் உதிப்பதை யாராலும் தடுக்க முடியாது. ஆயிரம் பேர் வந்தாலும் கதிரவன் மறையாது” என்பதாக குறிப்பிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன் மண்ணச்சநல்லூர் தொகுதியில், கூட்டணி கட்சியின் திமுக வேட்பாளர் சீ.கதிரவன் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
ஏற்கெனவே, மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் குக்கிராமங்கள் தோறும் எம்.எல்.ஏ கதிரவன் தீவிர சுற்றுப்பயணம் செய்து வாக்குகள் சேகரித்து வருகிறார். ஏப்ரல்-15 அன்று நடைபெற்ற பிரச்சாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் எம்.எல்.ஏ கதிரவனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், “பாஜக ஒன்றிய அரசு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. துரோகம் செய்கிறது, ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற வகையில் செயல்பட்டு வருகிறது. மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. டில்லியில் இருப்பது மன்னராட்சி. அது போன்று பாஜக செயல்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்டத்தான் தமிழக முதல்வர் தொடர்ந்து போராடி வருகிறார்.
மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ மீதான சிறப்புகளையும், அவர் மீது மற்றவர்கள் கூறும் அவதூறுகளையும் இங்குள்ள மக்கள் அறிவார்கள். பெயர் கதிரவன், ஓட்டளிக்க வேண்டிய சின்னமும் கதிரவன் தான். ஆயிரம் கைகள் கூடினாலும், கதிரவன் மறைவதில்லை. கதிரவன் உதிப்பதை மறைக்க முடியாது. கதிரவன் இல்லாமல் உலகம் இல்லை.
அந்த அற்புதமான சின்னத்தை கதிரவன் பெற்றிருக்கிறார். அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டியது மண்ணச்சநல்லூர் தொகுதியிலுள்ள அனைத்து மக்களின் கடமை. அவரவர் மனசாட்சியோடு மக்கள் பேசினால், திமுக கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று தான் கூறும். காரணம், 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மனசாட்சியற்றவர்கள் மறுக்கலாம். அதனால், கூட்டணியில் உள்ள வாக்காளர்கள் மட்டுமின்றி, மண்ணச்சநல்லூர் தொகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் மனசாட்சியோடு சிந்தித்து கதிரவனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்” என்று பேசினார்.
அங்குசம் தேர்தல் செய்திக்குழு.









Comments are closed, but trackbacks and pingbacks are open.