திருச்சி மேயர் வேட்பாளராக களம் இறங்க ஆர்வம் காட்டும் பிரபலங்கள் – தி மு க vs அ தி மு க !
ஜனவரி இரண்டாவது வாரத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி பதவியை கைப்பற்ற திமுகவும், அதிமுகவும் நேரடியாக போட்டியிட உள்ள நிலையில், திமுகவிற்குள்ளும் அதிமுகவிற்குள்ளும் யார் மேயர் பதவியை கைப்பற்றுவது என்று நிர்வாகிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.இப்படி ஒவ்வொரு கட்சியிலும் உள்ள முக்கிய பிரபலங்கள் மேயர் சீட்டை எதிர்பார்த்து காய் நகர்த்தி வருகின்றனர்.
அதேநேரம் திருச்சியின் மேயர் பதவி பொதுப்பட்டியலின் கீழ் வரும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனால் திமுக, அதிமுகவில் உள்ள ஆண் பிரபலங்கள் மத்தியில் சீட்டை கைப்பற்றுவதற்கான தீவிர போர் நடைபெற்று வருகிறது.
அதிமுக நடைபெறும் மல்லுக்கட்டு
திருச்சி அதிமுகவை பொறுத்தவரை 22 பேர் மேயர் பதவிக்கான விருப்ப மனுவை தலைமைக்கு அளிக்க இருக்கின்றனராம். ஆனாலும் போட்டியில் முன்னணியில் நிற்பவர்கள் என்று பார்த்தால் முன்னாள் துணை மேயர் சீனிவாசன், ஆவின் சேர்மன் கார்த்திகேயன், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவர்கலால் நேரு, மற்றும் திருச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் ஆகியோர் வரிசையில் முன்னணியில் நிற்கின்றனர்.
![](https://angusam.com/wp-content/uploads/2021/11/Screenshot_20211123-175747.jpg)
இதில் சீனிவாசன் பலமுறை கவுன்சிலராகி உள்ளதையும், கட்சியினர் மத்தியில் உள்ள செல்வாக்கையும் காட்டி சீட்டை பெறுவதற்கு முயற்சி எடுத்து வருகிறார். கார்த்திகேயன் இபிஎஸ்-யை நேரடியாக தொடர்பு கொண்டு முயற்சி எடுத்து வருகிறார், ஜவர்கலால் நேரு வெல்லமண்டி நடராஜனின் மூலமாகவும், ப.குமார் மாவட்டச் செயலாளர் என்பதை காரணம் காட்டியும் சீட்டை பெறுவதற்கு முயற்சி எடுத்து வருகின்றனர்.
மேலும் நசீமா பாரிக், முன்னாள் மேயர் ஜெயா, மகளிர் அணி நிர்வாகி ஜாக்குலின், முன்னாள் 57 வார்டு கவுன்சிலர் வனிதா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமாரின் மனைவி ஆகிய பெண்களும் மேயர் பதவிக்கான சீட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படி பலரும் மேயர் பதவிக்காக மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கின்றனர்.
திமுகவில் நடைபெறும் மல்லுக்கட்டு
திமுகவைப் பொறுத்தவரை பலரும் மேயர் பதவிக்கான முயற்சி எடுத்தாலும் அமைச்சர் நேரு தீர்மானிப்பவர் மேயரா, அமைச்சர் மகேஷ் தீர்மானிப்பவர் மேயரா என்ற சலசலப்பு சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது.
இந்த சலசலப்புகளுக்கு இடையே போட்டியில் முன்னணியில் இருப்பது யார் என்று பார்த்தால் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, முன்னால் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரணி குமார், முன்னாள் துணை மேயர் அன்பழகன், கே என் நேரு வின் மகன் அருண் நேரு, மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் ஆகியோர் உள்ளனர்.
![](https://angusam.com/wp-content/uploads/2021/11/Screenshot_20211123-175625-1024x263.jpg)
இவ்வாறு போட்டியில் உள்ள மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணியை மாநகராட்சியில் உள்ள ஏதேனும் ஒரு வார்டில் போட்டியிட செய்வதற்கான முயற்சியும் நடந்து வருகிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பாலகிருஷ்ணன் மகனுமான பரணிகுமார் முதல்வர் குடும்பத்தோடு நெருக்கமானவர் என்பதால் அவருக்கு தரவாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் துணை மேயர் அன்பழகன் நீண்ட ஆண்டு காலமாக அமைச்சர் நேருவோடு பயணம் செய்பவர் என்ற முறையில் நேருவின் மூலமாக சீட்டு கேட்டு வருகிறார். அருண் நேருவை பொருத்தவரை தீவிர அரசியலில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் கவுன்சிலர் சீட் எதிர்பார்த்துள்ள உடன்பிறப்புகள் பலரும் அருண் பெயரை முன் வைக்கின்றனர், மேலும் டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ள அருண் நேருவின் பிறந்த நாளுக்கான பிளக்ஸ் பேனர்களில் திருச்சியின் எதிர்காலமே, திருச்சியில் வருங்காலமே என்று வார்த்தைகளால் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
![](https://angusam.com/wp-content/uploads/2021/11/images-2021-11-23T180132.375-288x300.jpeg)
அதேசமயம் விஜயா ஜெயராஜ், ஜெயலட்சுமி கண்ணன், திமுகவில் இணைந்த முன்னாள் காவலர் செல்வராணி ஆகியோரும் மேயர் பதவிக்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர்.