ஊர் பெயரிலேயே தீண்டாமை … ஒரு வருடமாகியும் தீராத சிக்கல் !
ஊர் பெயரிலேயே தீண்டாமை… ஒரு வருடமாகியும் தீராத சிக்கல் !
தங்களது ஊரின் பெயரிலேயே தீண்டாமை சொல்லான காலனி என்ற சொல்லை நீக்க வேண்டுமென்று, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, எஃப்.கீழையூர் என்பதுதான் ஊரின் பொதுப்பெயர். எஃப்.கீழையூர் பஞ்சாயத்தின் கீழ்தான் அரியா கவுண்டம்பட்டி என்ற உட்கிராமமும் வருகிறது. எஃப்.கீழையூரில் பெரும்பான்மையினராக தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் வசித்து வந்த நிலையில், தமிழகத்தில் வேரூன்றிவிட்ட சாதிய கண்ணோட்டத்தில் ”காலனி” என்பதாக அடைமொழி சேர்த்து அழைத்து வந்துள்ளனர்.
பேச்சுவாக்கில், காலனி ஆட்கள் என்று அழைத்து வந்த நிலையில், ஊர்ப்பெயரும் அவ்வாறே மாறியிருக்கிறது. வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் ஆவணங்களிலும் எஃப்.கீழையூர் காலனி என்பதாகவே வழங்கி வந்திருக்கிறார்கள்.
இதற்கிடையில், இதே பஞ்சாயத்தை சேர்ந்த அரியா கவுண்டம்பட்டி பகுதி மக்கள், எஃப்.கீழையூர் என்ற ஊரின் பெயர் தங்களுக்கே உரியது என்றும்; எஃப்.கீழையூர் – காலனி என்பதுதான் உங்களின் அடையாளம் என்றும் தங்களை சாதி ரீதியில் ஒதுக்கி வைத்திருப்பதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள். இதன் காரணமாக, எஃப்.கீழையூர் என்ற பெயரில் கிடைக்கப்பெறும் அரசின் பல்வேறு திட்டங்கள் தங்களுக்கு புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இந்நிலையில், ஊர் பொதுமக்கள் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளுக்கும் விண்ணப்பித்து பெறப்பட்ட தகவலில், எஃப்.கீழையூர் என்பதுதான் தங்களின் ஊரின் உண்மையான பெயர் என்பதை அறிந்து, அதே பெயர்தான் தொடர வேண்டுமென்று தற்போது போராடி வருகிறார்கள்.
அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், போராட்டம் நடத்தியும், அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் ஓயாத சர்ச்சை, தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் வரையில் நீடித்து வருகிறது.
இந்த பின்புலத்தில் இருந்துதான், தங்களது ஊர்ப்பெயரில் ஒட்டியிருக்கும் தீண்டாமைச் சொல்லான காலனி என்ற சொல்லை நீக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டிருக்கிறார்கள்.
ஆதிக்கத்தின் அடையாளமாகவும் தீண்டாமைக்கான குறியீடாகவும் அரசு ஆவணங்கள் மற்றும் பொது வழக்கில் பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ள ‘காலனி’ என்ற சொல்லை நீக்கி, அதற்குப் பதிலாக ‘குடியிருப்பு’ அல்லது ‘நகர்’ எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், வருவாய்த்துறை ஆவணங்களிலும் நடைமுறையிலும் இன்றளவும் தொடரும் இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
– அங்குசம் செய்திப்பிரிவு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.