மக்களின் குரலாக ஒலிப்போம்! அன்பில் மகேஸ் உரை
திருச்சியில் கலைஞர் 103-ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கம்: நாளை (ஜூன் 7) தேவர் ஹாலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது!
முத்தமிழ் அறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களின் 103-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பிரம்மாண்ட கருத்தரங்கம் (ஜூன் 7, 2026) திருச்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற தேவர் ஹாலில் நடைபெற்றது.இவ்விழாவிற்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கி சிறப்பு உரை ஆற்றினார். மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.
“கலைஞரின் எத்தனை கலைஞர்” கருத்தரங்கம்:
விழாவின் முக்கிய நிகழ்வாக “கலைஞரின் எத்தனை கலைஞர்” என்ற தலைப்பில் கவியரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் முன்னணி கவிஞர்கள் பங்கேற்று கலைஞரின் பன்முகத்தன்மையை பின்வரும் தலைப்புகளில் போற்றிப் புகழாரம் சூட்டினர். கவி அரங்கத் தலைவர் கவிஞர் நெல்லை ஜெயந்தா, இலக்கிய இமயம்: கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி, திரை தமிழ் சிற்பி: கவிஞர் அருண் பாரதி, சமூகப் போராளி: கவிஞர் ராகவ் ரமேஷ், அரசியல் சாணக்கியர்: கவிஞர் தஞ்சை இனியன், நிகழ்ச்சியின் நிறைவாக, மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் ஆர். ஜி. பாபு அனைவருக்கும் நன்றி உரை ஆற்றினார்கள். திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க-இந்த விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, மாநில அணி நிர்வாகி செந்தில் மற்றும் , மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு, வட்ட, கிளைக்கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழகத் தோழர்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
நாளைய தலைமுறையின் வெற்றிக்காக உழைத்தவர் தலைவர் மு.க.ஸ்டாலின்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழியின் உரை
வெற்றி-தோல்விகளைக் கடந்து, நாளைய தலைமுறையின் எதிர்காலம் பாழாகிவிடக் கூடாது என்பதற்காகத் தன் ஆட்சிக் காலத்தில் தொலைநோக்குத் திட்டங்களை நிறைவேற்றியவர் நம் கழகத் தலைவர். மக்களின் குரலாய் ஒலிக்கும் தி.மு.க, என்றும் மக்களோடு நின்றே தன் அரசியல் பயணத்தைத் தொடரும்” என்றார்
லட்சியமும் கொள்கையும் கொண்ட இயக்கம் தி.மு.க. ஒரு குறிப்பிட்ட குறிக்கோள் நிறைவேறியதும் கட்சிகள் அமைதியாகிவிடலாம்; ஆனால், என்றும் லட்சியத்தோடும் கொள்கையோடும் செயல்படுவதால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு ‘இயக்கம்’ என்று அழைக்கப்படுகிறது.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் ஊட்டிய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற உணர்வோடு கழக உடன்பிறப்புகள் செயல்பட்டு வருகின்றனர். வெற்றி பெற்ற காலத்தை விட, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கும் காலத்தில் தான் கருப்பு-சிவப்பு வேட்டியைக் கட்டிக்கொண்டு கழக உடன்பிறப்புகள் இன்னும் வீரியத்துடன் களத்திற்கு வருவார்கள்.
உழைப்பால் உயர்ந்த தலைவர்களின் வரலாறு மக்கள் வழங்கிய தீர்ப்பை தி.மு.க முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறது. தமிழக அரசியல் வரலாறு என்பது உழைப்பால் உயர்ந்த தலைவர்களைக் கொண்டது.
‘பச்சைத் தமிழர்’ காமராசரின் உழைப்பு, சிறு வயதிலேயே பத்திரிகை நடத்தி பெரியார்-அண்ணா கொள்கைகளை உள்வாங்கி வளர்ந்த கலைஞர் அவர்களின் உழைப்பு, வறுமையிலிருந்து போராடி முதலமைச்சரான எம்.ஜி.ஆர் அவர்களின் உழைப்பு ஆகியவற்றை இந்த நாடு அறியும்.
அதேபோல், மிசா சட்டத்தின்கீழ் சிறை சென்று, இளைஞரணி, சட்டமன்ற உறுப்பினர், சென்னை மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் எனப் படிப்படியாக உழைத்து உயர்ந்தவர் நம் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின். தன் தலைமையிலான ஆட்சியைக்கூட ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று கொள்கையோடு குறிப்பிட்டு, முதலமைச்சர் நாற்காலிக்குப் பெருமை சேர்த்தவர் அவர்.
தற்போதைய அரசியல் சூழலும் விமர்சனமும். ஆனால் இன்றைக்கு, சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட, இசுலாமிய மக்களைத் தவறாகச் சித்தரித்த, தன் திரைப்படம் வெளியாவதற்காக அப்போதைய முதலமைச்சரிடம் கைகட்டி நின்ற, இந்தி திணிப்பு எதிர்ப்பு உள்ளிட்ட எந்தவொரு மக்கள் போராட்டக் களத்திற்கும் வராத ஒரு இளைஞரின் கையில் அதிகாரம் சென்றுள்ளது.
ஆட்சிக்கு வந்த பிறகும் கூட, சிறுபான்மையின மக்களின் உரிமைகளுக்கோ அல்லது சமையல் எரிவாயு விலை உயர்வு போன்ற மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கோ குரல் கொடுக்க முடியாத நிலை தான் இன்று உள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி முதலமைச்சர் விரும்பினால் துணை முதலமைச்சரை நியமிக்கலாம். ஆனால் இன்றைக்கு, தகுதியான ‘துணை முதலமைச்சர்’ இல்லாமல், ‘செயல்படும் முதலமைச்சர்’ (Acting CM) யார் என்ற குழப்பத்திலேயே ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது.
மக்களின் குரலாக ஒலிப்போம்!
“புதிய அரசுக்கு 6 மாதம் அவகாசம் கொடுப்போம் என்றீர்களே, அரை நாள் கூட அமைதியாக இல்லையே” எனக் கேட்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தான் 6 மாத காலம் காத்திருக்க முடியுமே தவிர, நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் போன்ற சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை வேடிக்கை பார்க்க முடியாது. கேள்வி கேட்காவிட்டால், “எங்களை வெல்ல வைக்கவில்லை என்பதற்காக அமைதியாக இருக்கிறீர்களா?” என்று மக்களே கேட்பார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்றத்தில் இரண்டு நாட்கள் பேசிய கேள்விகளுக்கு நேடியாகப் பதில் சொல்ல முடியாமல், வீட்டிற்குச் சென்று யோசித்து ட்விட்டரில்தான் பதில் சொல்கிறார்கள். “நாங்கள் தான் கப்பலின் கேப்டன்; கலங்கரை விளக்கமாக இருக்கும் நீங்கள் விளக்கை அணைத்துவிட்டு அமைதியாக இருங்கள்” என்று மழுப்புகிறார்கள்.
“மக்களைப் பார்த்து முட்டாள் என்று சொல்பவன் தான் அடிமுட்டாள்” என்ற கலைஞர் அவர்களின் வாக்கிற்கேற்ப, மக்கள் தீர்ப்பை என்றும் மதிப்போம்.
உள்ளாட்சியில் தொடங்கும் எழுச்சி
தேர்தல் நேரத்தில் நாம் வெயிலில் நின்று வாக்குக் கேட்டோம்; ஆனால், மக்கள் வீட்டிற்குள் அமர்ந்து அலைபேசியைப் (Mobile) பார்த்து வாக்களித்துவிட்டார்கள். இந்த நிலை நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.
முதலில் நம் வீட்டுப் பிள்ளைகளிடம் நம்முடைய திராவிட அரசியலைப் பேசிப் புரிய வைப்போம். கடந்த காலத்தைப் போலவே, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இருந்து நம்முடைய பலத்தைக் காட்டத் தொடங்குவோம். அதுவே முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான நன்றிக் கடனாகும்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.