நம்புவோம், தவெக என்பது மாற்றத்திற்கான கட்சி !
தேர்தல் முடிவுகள் வெளியாகி வெறும் 21 நாட்களே ஆகிறது. அதற்குள் 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.
இடைப்பட்ட இந்த நாட்களில் நடந்தேறியவற்றை ஒருமுறை திரும்பிப் பார்த்தால் அதிர்ச்சியும், வெறுப்புமே மேலோங்கி நிற்கிறது.
திமுக கூட்டணியில் தேர்தலில் களம் கண்டு வென்ற கட்சிகள், தவெக அரசுக்கு ஆதரவு எனக் கூறி சென்று பின் அமைச்சரவையில் பங்கேற்றது அதிர்ச்சி.
அதிமுகவில் வென்ற 47 உறுப்பினர்களுள் பிரிவினையை தூண்டி அக்கட்சியை மீண்டும் இரண்டாக்கி, தலைமை முதல் தொண்டர்கள் வரை குழப்பத்தில் ஆழ்த்தியது வெறுப்பு.
போதாக்குறைக்கு வெற்றி பெற்ற ஒரேயொரு அமமுக உறுப்பினரையும், தன் வசம் இழுத்து ஆதரவை தர வைத்தது எவரும் விரும்பாத நிகழ்வு.
எல்லாவற்றுக்கும் மேலாக இன்று நடந்திருப்பது அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களுக்கு பேரிடி. எத்தனையோ தொண்டர்கள் உழைப்பில் வென்ற 3 சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் பதவியை துறப்பதாக சபாநாயகரிடம் கடிதம் தந்த கையோடு, பக்கத்து அறையிக்கு சென்று ஆதவ் அர்ஜூனாவை சந்தித்திருப்பது மக்களை கேலிக்கூத்தாக்கும் செயல். அடுத்த சில நொடிகளில் தவெக உறுப்பினராக இணைந்ததும் கொடுமையானது.
இந்த நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பாராட்டியே ஆக வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெ மறைவுக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பை பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க முயலாது, அடுத்த தேர்தல் வரும்வரை காத்திருந்து ஆட்சிப் பொறுப்பேற்றார்.
இன்று அதிமுகவுக்கு நடப்பதை பார்த்து வேடிக்கை பார்க்கும் கட்சிகளுக்கும், அதன் தொண்டர்களுக்கும் ஒன்றே ஒன்றுதான். நாளை இது உங்கள் கட்சியிலும் நடந்தேறக்கூடும்.
வாக்கு செலுத்தும்போது கையில் வைத்த மை முற்றிலும் அழிவதற்குள், கட்சி மாறுவதெல்லாம்…
நம்புவோம், தவெக என்பது மாற்றத்திற்கான கட்சி என்பதை .
— பாலசுப்ரமணின்.ச – பத்திரிகையாளர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.