லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு கட்சிக்கும் துரோகம் செய்தவர்கள் இன்னும் தொடர்கிறார்கள்….. பத்திரிகையாளரின் புகார் !
கலைஞரால் படித்து, கலைஞரை படித்து வளர்ந்தவன் நான். எனவே தான் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் திமுகவுக்காக பணியாற்றினேன். கழகத் தலைமை நிலைய செயலாளரான அண்ணன் பூச்சி முருகன் அவர்கள் பணியாற்ற அழைத்தபோது பத்திரிகையாளர் பணியை உதறிவிட்டு சென்றேன்.
2023 முதல் பென் நிறுவனத்தில் கன்சல்டண்ட் ஆக பணிபுரிந்து வந்தேன். எனது வருமானம் அது மட்டும் தான். அறிக்கைகள், கட்டுரைகள் தயாரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தேன். நடந்து முடிந்த தேர்தலில் பாபநாசம் சட்டமன்ற தொகுதி கடினமாக இருக்கும் என்று கணித்து நானே இன்சார்ஜாக கேட்டு வாங்கி சென்றேன். அண்ணன் பூச்சி முருகன் அவர்களுடன் 5 தேர்தல்களில் பணியாற்றிய அனுபவம் கை கொடுத்தது. பாபநாசம் தொகுதி திமுக நிர்வாகிகள் கொடுத்த ஒத்துழைப்பால் ஏணி சின்னம், அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சரின் மகன், விஜய் அலை என அனைத்து சவால்களையும் சமாளித்து வெற்றி பெற்றோம்.
கடந்த மாதம் தேர்தல் முடிவுகள் வெளியான அன்றைக்கு மறுதினமே பென் நிறுவனத்தில் இருந்து எனது பணி முடிவுக்கு வந்ததாக மெயில் வந்தது. லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு கட்சிக்கும் துரோகம் செய்தவர்கள் இன்னும் தொடர்கிறார்கள். அது கட்சித் தலைமையின் விருப்பம். மக்களின் மனநிலையை பல ஆலோசனைகள் மூலம் எடுத்துக் கூறியும் என்னைப் போன்றோரின் ஆலோசனைகள் நிராகரிக்கப்பட்டன. குறிப்பாக தலைவரையே தோற்கடித்தவர்களும் கூட்டணி பேச்சுவார்த்தை முதல் வேட்பாளர் தேர்வு வரை துரோகம் செய்தவர்களும் இன்னும் கட்சியின் அதிகார மையமாகவே தொடர்கின்றனர்.
தோல்விக்கான காரணங்களையும் இனி என்ன செய்ய வேண்டும் என்பதையும் தனிப்பட்ட கடிதமாக தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், கனிமொழி எம்பி உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளுக்கு அனுப்பி விட்டேன். கட்சியின் முகமான உதயநிதி களத்திற்கு வரவேண்டும். தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மனதில் தோன்றியதை கடந்த பதிவுகளில் பகிர்ந்தேன். ஆனால் பல முனைகளில் இருந்தும் உளவியல் தாக்குதல்கள்.
இப்போதைய சூழலில் நான் திமுகவுடன் எந்தவித தொடர்பிலும் இல்லை. ஒரு பத்திரிகையாளனாக என்னுடைய எண்ணங்களை பகிர எனக்கு உரிமை உண்டு. நன்றி வணக்கம்.
(தேர்தல் முடிவுக்கு முந்தைய தினம் திமுக தலைவர் அவர்களிடம் பாபநாசம் தேர்தல் பணி குறித்து விளக்கியபோது எடுத்த படம்)
– க.ராஜீவ் காந்தி






Comments are closed, but trackbacks and pingbacks are open.