சாதி ஒழிப்புப் போராளி கெட்டப் !
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் நெல்லையில் கொல்லப்பட்டதற்கு எதிராக களத்தில் நின்றவை மார்க்சிய, அம்பேத்கரிய அமைப்புகள்.
பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்தாரை முதல்வருடன் சந்திக்க வைத்து பல்வேறு உதவிகளைச் செய்ததும் வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன் அவர்களைச் சந்தித்து வழக்கை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ததும் தோழர் திருமா. மனிதமனம் கொண்ட அனைவருமே பதறிப்போன அந்தக் கொலை பற்றி இப்போதுவரை வாயே திறக்காதவர் விஜய்.
இந்நிலையில் கவினுடய உறவினரான வி.பி.தமிழ்ச்செல்வி, பவானிசாகர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கவின் கொலைக்கு நியாயம் கேட்டு போட்டியிடுவதாக அவரோ, அல்லது அந்தக் காரணத்திற்காகத்தான் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று அந்தக்கட்சியின் தலைமையோ எங்கும் எப்போதும் சொல்லியிராத நிலையில், தமிழ்ச்செல்வியின் வெற்றியை இப்போது கவின் கொலைக்கு எதிரான தீர்ப்பு என்பதாகச் சித்தரித்து விஜயை சாதியொழிப்புப் போராளியாக்கும் கேவலத்தில் சிலர் ஈடுபடுள்ளனர்.
உண்மையில், கவின் கொலை ஒரு பேசுபொருளாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தவெகவுக்கு இருந்திருக்குமானால் ஸ்ரீவைகுண்டம் பொதுத்தொகுதியில் கவினுடைய குடும்பத்தாரில் ஒருவரை வேட்பாளராக்கி இருக்க வேண்டும். அல்லது அங்கு போட்டியிட்ட தவெக சரவணன், தனது பரப்புரையில் கவின் கொலைக்கு நியாயம் கேட்டு வெற்றி பெற்றிருக்க வேண்டும். அப்படியெல்லாம் எதுவுமே நடந்திராத நிலையில் விஜய்க்குப் போடப்படும் சாதியொழிப்புப் போராளி வேடம் அருவருப்பாக இருக்கிறது.
— ஆதவன் தீட்சயன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.