வள்ளுவர் மீதும் குறள் மீதும் கலைஞருக்கு அவ்வளவு ஆசை. அதன் வெளிப்பாடுதான் குமரி முனையில் உயர்ந்து நிற்கும் 133அடி உயர திருவள்ளுவர் சிலை. சென்னையில் அழகாக அமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம். அரசுப் பேருந்துகளில் திருக்குறளை எழுதச் செய்து எல்லாரிடமும் அதனைப் பரப்பியதில் கலைஞர் அரசின் பங்கு முக்கியமானது. திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கை தமிழ்நாடு அரசின் சார்பில் கடைப்பிடிக்கச் செய்யும் முறையைக் கொண்டு வந்தவரும் கலைஞர்தான்.
1330 குறள்களுக்கும் அவர் மிக எளிமையாக உரை எழுதியிருக்கிறார். அதற்கு முன்பாக 354 குறள்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு கதை வடிவிலும், நிகழ்வுகள் மூலமாகவும் கலைஞர் அளித்த விளக்கமே ‘குறளோவியம்’ எனும் சிறந்த படைப்பாகும்.
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய்; கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
-இந்தத் திருக்குறளுக்கு என்ன அர்த்தம் என்பது எல்லாருக்கும் எளிதாகத் தெரிந்துவிடாது. கலைஞர் அதைக் கச்சிதமாக விளக்குகிறார்.
ஒரு நாள் கடற்கரையோரம் சென்று கொண்டிருந்தேன். ஒரு புதுமையான உருவம் கடலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. ஓர் ஆணைப் போலவோ அல்லது பெண்ணைப் போலவோ அந்த உருவம் இல்லை. பறவையினம் போலவும் தெரியவில்லை. விலங்கினமாகவும் தோன்றவில்லை. அந்த உருவத்தை நோக்கி வேகமாக நடந்தேன். அருகில் செல்லச் செல்ல, ஆல மர இலை வடிவத்தில் அது இருந்தது. அதிலேயே கண், காது, மூக்கு, வாய் என்று முகத்துக்குரிய உறுப்புக்கள் இருந்தன. கொடி போன்ற இரண்டு கால்கள், கொடி போலவே இரண்டு கைகள். திகைத்து நின்றேன்.
அந்த உருவம் தனது கைகளை விரித்துக் கடற்கரை மணலை அள்ளியது. அள்ளிய மணலைக் கடலில் கொண்டு போய்ப் போட்டது. மீண்டும் மீண்டும் அதே காரியத்தை செய்து கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் நெருக்கமாகச் சென்றேன். அந்த உருவம் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு மணலை அள்ளுவதற்காகக் குனிந்தது.
“நீ யார்?”- இது என் கேள்வி.
“என்னைத் தெரியவில்லை. நான்தான் இதயம்” என்றது அந்த உருவம்.
“ஓகோ இதயமா? யாருடைய இதயம்? ஆண்பாலா? பெண்பாலா?”
“என் கொடிநிகர் கால், கைகளைப் பார்த்தாலே நான் பெண் இதயம் என்று புரியவில்லையா?”
புரிந்துவிட்டது. ஒரு பெண்ணின் நெஞ்சம், ஏதோ வேதனையின் காரணமாக இப்படி வெளியே வந்திருக்கிறது.
“ஏ பெண் நெஞ்சே! எதற்காக நீ மட்டும் தனியாக வந்திருக்கிறாய்?”
“இது என் தலைவியின் கட்டளை”
“இந்த மணலையெடுத்துக் கடலில் போடச் சொன்னதும் உன் தலைவியின் கட்டளை தானோ?”
”ஆமாம்..”
“ஏன் இந்த வீண் வேலை உனக்கும், உன் தலைவிக்கும்?”
“என் தலைவி என்னைக் கூப்பிட்டு, அடியே! என் நெஞ்சமே! நீ உன் மீது அன்பு இல்லாதவரிடம் உன்னுடைய துன்பத்தையும், அவரைப் பிரிந்திருப்பதன் வேதனையையும் சொல்லிப் பயன் கிடையாது. அதைவிட எளிதான வேலை, மணலை அள்ளிப் போட்டு ஆழ்கடலைத் தூர்ப்பதாகும். எனவே அந்த வேலையைச் செய் என்றாள். அதைத்தான் இப்போது செய்கிறேன்”
பதிலைக் கேட்டதும் என் தலை சுற்றியது. காதலனிடம் தன் வேதனையைச் சொல்லி, அவனைத் தன் மீது அன்புக்கொள்ளச் செய்வதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதாம்.
விழித்துக் கொண்டேன். கனவு எனப் புரிந்தது. என் நெஞ்சின் மீது கிடந்த திருக்குறள் சுவடியை உற்று நோக்கினேன். அந்தக் குறளை மீண்டும் ஒரு முறை படித்தேன் -என்று எழுதியிருக்கிறார் கலைஞர்.
இப்போது அந்தக் குறளை நீங்களும் மீண்டும் படித்துப் பாருங்கள். அர்த்தம் எளிதாகப் புரியும். இதுதான் கலைஞர் படைத்த குறளோவியத்தின் சிறப்பு.
(தொடரும்)







Comments are closed, but trackbacks and pingbacks are open.