அவசரக் கவலை தேவையில்லை…!
ஸ்டாலின் தொடர்கிறார் என்றுதான் எதிர் நிலை ஊடகங்களே சொல்கின்றன. எவ்வளவு பெரிய வெற்றி என்பதுதான் விவாதம்.ஆனாலும் குறுக்கே குறுக்கே விஜய்க்கு கூட்டம் வருகிறது என்ற ஃபிலிம் சேர்ந்து கொள்கிறது. அதைப்பற்றி ‘தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை’ பதிவுகள். ‘நாம் இளைஞர்களை வழி நடத்தத் தவறி விட்டோமா?’ கவலைகள்.
தோழர்களே, மக்களாட்சி என்பது எளிதில் சேதாரமாகும் பண்டம்தான். அது ஏற்கனவே நிறைய சேதாரங்களைப் பார்த்துள்ளது. ஹிட்லர், முசோலினி ஆகியோர் கூட தேர்தல்களில் வென்றுதான் ஆட்சியைப் பிடித்தார்கள்.
சமகாலத்தில் இந்தியாவில் ஒருவர் நம் கண் முன்னாலேயே பெரிய பிம்பமாக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தார். அவர் வந்தால் நாட்டை விட்டே போய்விடுவேன் என்றுகூட சில எழுத்தாளர்கள் சொன்னார்கள். அவர் பெயரைச் சொன்னாலே இந்த பதிவுகூட மறைக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இன்னமும் நாம் தேர்தல்களை நம்பித்தான் இருக்கிறோம்.
அதையெல்லாம் விட பெரிய கூத்து, மக்களாட்சி விழுமியங்களை மாய்ந்து மாய்ந்து பேசிய அமெரிக்காவிலேயே மன நோயாளி ஒருவர் அதிபராகி உலகையே கலங்கடித்து வருகிறார். அவர் பேசுவதெல்லாம் உண்மையா, யாராவது விளையாட்டாக மீம் போடுகிறார்களா என்று குழம்ப வேண்டியுள்ளது.
அதனால் கூட்டத்தைப் பார்த்தோ, ஆதவ் ஆதரவு விகடனைப் பார்த்தோ, ஆட்டோக்காரர் அல்லது அடுத்து வீட்டுக்காரருடன் பேசியோ ஐயகோ விஜய்க்கு ஆதரவா என்று புலம்பவேண்டாம். தேர்தல் முடிவுகள் வரட்டும் பார்த்துக்கொள்வோம். மக்களாட்சியின் வசனம்: “எத்தனையோ பேரை டீல் பண்ணிட்டோம், இவரை பண்ணமாட்டாமோ, ஜூஜுபி” என்பதுதான்.
-ராஜன் குறை கிருஷ்ணன்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.