தங்கள் பிம்பமும், தாங்கள் உருவாக்குகிற பிம்பமும் நொறுங்கிவிடும் என்ற பதற்றம்தான்
காந்தியன், பூந்தியன் என்றெல்லாம் முகமூடி போட்டுக் கொள்பவன் நானல்ல. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவன் என்ற வெளிப்படைத்தன்மையுடன் எழுதுகிறவன். என் கருத்துகளில் மாறுபாடு உள்ள எல்லோரும் என்னை விமர்சிக்கலாம். ஏனென்றால், நான் மட்டுமே அறிவாளி என்று நினைக்கும் மண்டைக்கனம் இதுநாள் வரை ஏறியதில்லை. அதனால் அந்த ‘சப்ஜெக்ட்’டை விட்டுவிட்டு, சொல்ல வந்த சப்ஜெக்ட்டுக்கு வருகிறேன்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எத்தகைய அரசியல் சூழல் உள்ளதோ அதற்பேற்ப, எல்லாக் கட்சிகளுமே அவரவருக்கான வியூகங்களை வகுப்பதும், இறுதியாக, தங்கள் நிலைப்பாட்டிற்கேற்ப உறுதியான ஒரு முடிவை எடுப்பதும் தொடர்ந்து நிகழ்வதுதான். இது அரசியலின் அடிப்படை அறிந்தவர்கள் எல்லாருக்கும் தெரியும்.
1989ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அதிக இடங்களில் வென்றது ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி. ஆனால், அதற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஜனதாதளத்தை உள்ளடக்கிய தேசிய முன்னணி அடுத்த இடத்தில் இருந்தது. பா.ஜ.க. 85 இடங்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்தது. அது, தேசிய முன்னணியை ஆதரித்தது. அப்போதைய சூழலில், காங்கிரஸ்தான் பெரிய எதிரி-அதிக தீமை என்ற முடிவுடன், வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவளித்தன. அதாவது, காங்கிரஸ் எதிர்ப்பு என்ற அடிப்படையில் வி.பி.சிங் அரசுக்கு ஆதரவாக ஒருபுறம் பா.ஜ.க., இன்னொரு புறம் கம்யூனிஸ்ட்டுகள்.
1996ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களை பா.ஜ.க வென்றது. ஆனால், அதற்கு மெஜாரிட்டி இல்லை. பிரதமராகப் பொறுப்பேற்ற வாஜ்பாய் 13 நாட்களில் பதவியிழந்தார். அப்போது, பா.ஜ.க.தான் இந்தியாவுக்கு பெரிய தீமை, நாட்டுக்கு முதன்மையான எதிரி என்ற முடிவுடன், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான ஐக்கிய முன்னணியை ஆட்சியில் உட்கார வைத்து ஒரு புறம் காங்கிரசும், மறுபுறம் கம்யூனிஸ்ட்டுகளும் ஆதரித்தனர். அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் இந்திரஜித் குப்தா ஒன்றிய அமைச்சராகவும் இடம்பெற்றார்.

2004ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை இடதுசாரிகள் உள்ளிட்ட பலரும் ஆதரித்தனர். அதற்கான அவர்களின் காரணம், காங்கிரசைவிட பா.ஜ.க.தான் பெரும் தீமை. அதற்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அமையக்கூடாது என்பதுதான்.
1998ல் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து, ஆட்சியிலும் பங்கெடுத்த அ.தி.மு.க., 13 மாதங்களில் அந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த நிகழ்வு, அப்போது பா.ஜ.க.வுக்கு தி.மு.க ஆதரவளித்த நிகழ்வு இப்படிப் பலவும் அரசியல் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பலவித ஆலோசனைகள் நடைபெறுவது ஜனநாயகத்தில் இயல்பு. அவையெல்லாம் ஏற்கப்பட்டனவா-நிராகரிக்கப்பட்டனவா? அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு என்ன? இறுதியாக எடுத்த முடிவு என்ன? என்பதுதான் நிலையானது. முணுமுணுப்புகள், கிசுகிசுப்புகள் எதுவும் இறுதி முடிவாகிவிடாது. நிதானமான அலசல்தான் இறுதியான உறுதியான முடிவைத் தரும்.
சுயமோகிகளால் நிதானமாக எதையும் மதிப்பிட முடியாது. தங்கள் பிம்பமும், தாங்கள் உருவாக்குகிற பிம்பமும் நொறுங்கிவிடும் என்ற பதற்றம்தான் அதற்கு காரணம்.
— கோவி.லெனின்…








Comments are closed, but trackbacks and pingbacks are open.