பார்க்கவே நல்லாருக்கு ! இந்த அரசியல் நாகரிகம் தொடரட்டும் !
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜயால் மிகக்கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் மு.க.ஸ்டாலின். தேர்தல் வெற்றிக்கான உத்தியாக அதனை வலுக்கட்டாயமாக செய்தார். மற்றபடி மு.க.ஸ்டாலின் மீது அவ்வளவு வன்மமான முகத்தைக் காட்ட விஜய்க்கு பெரிதான எந்த காரணமும் இல்லை. அப்போது முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், விஜய்க்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியான காலகட்டத்தில்கூட மிகுந்த அரசியல் நாகரிகத்தோடு நடந்துகொண்டார். விஜய்க்கு ஆதரவாகப் பேசினார். ஆனால், விஜயோ அதையும் ஏளனமாகவே பேசினார். அனைத்தையும் பொறுமையாக எதிர்கொண்டார் ஸ்டாலின்.
இப்போதும்கூட அவரது பொறுமையைக் குறிப்பிட்டு, ஸ்டாலின் மீது பலரும் விமர்சனமாக வைக்கிறார்கள். ஏன், அந்தளவுக்கு ஸ்டாலின் நாகரிக அரசியல் செய்தார் என்று கேள்வியெழுப்புகிறார்கள். விஜய் முதல்வராகும்போதும்கூட தனது பதவியேற்பு விழாவிலும் அதே கடுகடு முகத்தைக்காட்டி தேவையில்லாமல் அரசியல் பேசினார் விஜய்! இத்தனைக்கும் தற்போது விஜய்க்கு நம் தேர்தல் ஜனநாயகம் முழு மெஜாரிட்டியை வழங்கவில்லை. திமுக கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகள் தான் ஆதரவை வழங்கியிருக்கின்றன. அதுவும் மிகுந்த பெருந்தன்மையோடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறாமல் வெளியிலிருந்து ஆதரவை கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம், தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்கு ஊறுவிளைவிக்கும் செயல்களை டெல்லி கொண்டுவந்தால் எதிர்க்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு, முன்னேற்றத்துக்கு தேவையான சமூக நீதிக் கொள்கையை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென்பதே. ஆக, அவ்வளவு காட்டமாக திமுகவையும், திமுக கூட்டணிக்கட்சிகளையும் விமர்சித்த விஜயை, எவ்வித நெருக்கடியுமின்றி ஆட்சியமைக்க வழிவகுத்திருக்கிறார்கள்.
நான் எதிர்பார்த்ததெல்லாம், விஜய் வெற்றி பெற்றதுமே, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவையென்ற சூழலுக்காக மட்டுமல்லாது, முன்னாள் முதல்வரென்ற முறையிலும் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றிருக்க வேண்டுமென்பதே. அதுவே அரசியல் நாகரிகமாக இருந்திருக்கும். தற்போது முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நேற்று திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தபோது ஓரளவு மன நிறைவாக இருந்தது. தற்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை விஜய் சந்தித்திருப்பது மகிழ்ச்சி. அந்த சந்திப்பை பார்த்த அனைவருமே ஸ்டாலினும், உதயநிதியும் உளப்பூர்வமாக வரவேற்றதை அறிந்திருப்பார்கள். அப்போது விஜயின் முகத்தை கவனித்தேன். மிக இயல்பான பூரிப்பை பார்க்க முடிந்தது. எனக்கு ஆசையெல்லாம், தமிழக முதல்வரான விஜய், இதேபோன்ற இயல்பான முகத்தோடு தொடர வேண்டுமென்பதே. ரசிகர்கள் முன்பாக பேசும்போது மிகவும் கடுகடுப்பாக முகத்தை காட்டிப்பேசி, அவர்களை உளவியல் சிக்கலுக்குள் தள்ளுவதை மாற்றிக்கொள்ள வேண்டும்.
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு.விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.’ என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற அரசியல் நாகரிகம் தொடர்வது, அரசியலுக்கு புதியவர்களான விஜயின் தொண்டர்களை உளவியல்ரீதியாக அரசியல்படுத்த உதவும். கண்மூடித்தனமான வெறுப்பரசியல், சமூக அமைதியையே சீர்குலைப்பதாகவே இருக்கும். அதைத்தான் டெல்லி அரசியல் கட்சி நாடு முழுக்க செய்து வருகிறது. அதே பாணி விஜய்க்கு வேண்டாம். தமிழ்நாட்டில் இந்த அரசியல் நாகரிகம் தொடரட்டும். முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகள்! பார்க்கவே நல்லாருக்கு!
– வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.