இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திரத் தாஸ் மோடி அவர்களுக்கு, வணக்கம்.
கடந்த ஏப்ரல் 16,17,18 சிறப்பு நாடாளுமன்ற அமர்வு நடைபெற்றது. மகளிர் மசோதா நிறைவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அரசியல் சாசனத் திருத்தம் செய்ய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மசோதா குறித்து மூன்று நாள்களுக்கு முன்புதான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. தகவல் அறிந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மசோதாவின் நகலை எரித்தார். நாமக்கல்லில் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பைப் பதிவு செய்தார். தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக் கட்சிகள் தங்களின் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
ஏப்ரல் 16 ஆம் நாள் மசோதா குறித்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தங்களின் ஆதரவு, எதிர்நிலைப்பாட்டைத் தெரிவித்து உரையாற்றினர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வு எந்த ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகையின் அடிப்படையில் என்பது மசோதாவில் தெரிவிக்கப்படவில்லை. மேலும், எண்ணிக்கை உயர்வு நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு செய்யும் என்றும், அந்த முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லமுடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மக்கள்தொகை உயர்வுக்கு ஏற்பவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயரும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்து.
திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் இம் மசோதாவைக் கடுமையாக எதிர்த்தன. அப்போது பேசிய அமித்ஷா, “நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயர்வு எல்லா மாநிலத்திற்கும் 50% இருக்கும், தமிழ்நாட்டிற்கு 60 என்ற வகையில் உயர்த்தப்படும்” என்று தெரிவித்தார். “அதை ஏன் மசோதாவில் குறிக்கவில்லை” என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதற்கு பதிலளித்து நீங்கள் உரையாற்றியபோது, ”இந்த மசோதாவை ஆதரிக்கவேண்டும் என்றும், அதற்காக நான் என்ன உத்தரவாதம் தரவேண்டும் என்பதைத் தெரிவித்தால் அந்த உத்தரவாதத்தைத் தரத் தயார்” என்றும் ”தமிழிலும் உத்தரவாதம் தருகிறேன்” என்று மனமிரங்கி பேசியதைக் கேட்டோம். உங்களின் உத்தரவாதம் மசோதாவில் எழுத்து வடிவில் இருக்கவேண்டுமேயொழிய வாய்மொழியாக இருந்தது என்பதை எதிர்க்கட்சிகள் எப்படி நம்பும்?
ஏப்ரல் 17ஆம் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக 298 பேரும், எதிராக 230 பேரும் வாக்களித்த நிலையில் அரசியல் சாசனச் சட்டத் திருத்தத்திற்கு 3 இல் 2 பங்கு என்னும் 352 வாக்குகளைப் பெற முடியாத நிலையில் மசோதா தோல்வி அடைந்தது. 2023 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பெண்கள் மசோதா அனைத்துக் கட்சியாலும் நிறைவேற்றப்பட்டது. 30 மாதங்கள் கழித்து 2026 ஏப்ரல் 16 இரவு 10.00 மணிக்கு ஒன்றிய அரசிதழில், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நடைமுறைக்கு வந்துவிட்டது என்று அறிவிக்கையும் வெளியிடப்பட்டது.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தோல்வி குறித்து ஏப்ரல் 18 சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு உரையாற்றிய நீங்கள், “மகளிர் மசோதா நிறைவேறாததற்காகவும், பெண்களின் கனவு நசுக்கப்பட்டதற்காகவும் நாட்டின் அனைத்துத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றீர்கள். மேலும், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி போன்ற கட்சிகள் தங்களின் சுயநல அரசியலால் இந்த மசோதாவைத் தடுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டிப் பேசியது எவ்வளவு பொய் என்பது உங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா? உங்கள் பொய்யை நம்பி, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டிற்குக் கிடைக்கவேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வை மு.க.ஸ்டாலின் கெடுத்துவிட்டார்” என்று குரல் எழுப்பி, தேர்தல் நேரத்தில் அவர் அவமானத்தையும் தேடிக்கொண்டுள்ளார் என்பது அவலத்தின் உச்சம்.
ஏப்ரல் 9 பாண்டிச்சேரி, அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்கம் (முதல் கட்ட வாக்குப் பதிவு முடிவுற்ற நிலையில்) ஏப்ரல் 23 மேற்கு வங்கத்தின் 2ஆம் கட்ட வாக்குப் பதிவும், தமிழ்நாடு வாக்குப் பதிவும் நடைபெறும் நிலையில், ஜனநாயகத்தின் மாண்பை மீறி, தலைமை அமைச்சர் என்ற முறையில் அரசு தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடம் எதிர்க்கட்சிகள் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை உரையாக அமைத்துப் பேசியது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களால் ஏற்க முடியாத ஒன்றாகவே இருந்தது.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் அளித்துள்ள தனிநபர் தீர்மானத்தில் தற்போதுள்ள 543 தொகுதிகளில், 2023ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மசோதா அடிப்படையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு உங்களின் பதில் என்ன? ஆளும் பாஜக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டிய கடமை தலைமை அமைச்சர் என்ற முறையில் உங்களுக்கு உள்ளது. பொய்யுரைத்து இந்தப் பெரும் பொறுப்பில் நீங்கள் தொடரவேண்டுமா? என்பதையும் சிந்திக்க வேண்டுகிறோம்.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.