தளபதி என்னமா பேசினாரு பாத்தியா ?
“சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், தரம் தாழ்ந்து பேசினார். அவரது உடல்மொழி அருவருக்கத்தக்கது” என கூட்டணிக் கட்சிகளான சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.
இதற்கிடையே, அதற்கு வருத்தம் தெரிவிக்காமல், “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” என்று எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுவிட்டு கடந்துசெல்கிறார் விஜய். இந்தக் களேபரத்தில் (அதிக) சத்தமின்றி நேற்று சில மசோதாக்களை நிறைவேற்றி இருக்கிறது, தவெக அரசு.
அதில் ஒன்று…
தனியார் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான நிலத் தேவையைக் குறைக்கும் மசோதா. இதே மசோதா திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. “இதனால் கல்வி வணிகம் மேலும் பெருகும்; இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படும்” என கூட்டணிக் கட்சிகள் உட்படப் பலரும் எதிர்த்தனர். அதனால், அந்த மசோதாவைத் திரும்பப் பெற்றது திமுக அரசு. இப்போது அதை நிறைவேற்றியிருக்கிறது தவெக.
இது, மத்திய பாஜகவின் புதிய கல்விக் கொள்கையின் ஒரு கூறுதான். இந்த புதிய கல்விக் கொள்கையைக் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. ஆனால், அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதன்தான் இம்மசோதாவை அறிமுகப்படுத்தியிருக்கிறார். புதிய கல்விக் கொள்கையை முன்பு எதிர்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இதை ஆதரித்திருக்கிறது.
இன்னொன்று …
“விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றிக்கொள்ள, மாவட்ட ஆட்சியரின் முன்அனுமதி தேவையில்லை” என்கிற மசோதா. தற்போது விவசாய நிலத்தைக் கட்டடம் கட்டப் பயன்படுத்துவது என்றால், மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண், வருவாய், நீர்ப்பாசனத் துறையினர் ஆய்வு செய்வர். அவர்கள், அது தீவிர விவசாய நிலம் அல்ல எனச் சான்றளிக்க வேண்டும்.
இப்போது இந்த முன்அனுமதி தேவையில்லை. இதனால் விவசாய நிலங்கள் மனைகளாகி ரியல் எஸ்டேட் பெருகும்; விவசாய நிலங்களில் தொழிற்சாலைகள் அமைப்பதும் எளிதாகும். விளைநிலங்கள் குறையும் – உணவு உற்பத்தி கேள்விக்குறியாகும்.
“விவசாய நிலம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்குத் தடை” என்றவர்களின் உண்மையான அக்கறை எது என்பது இதிலிருந்து தெரிகிறது.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டதால், இவற்றை எதிர்க்கவில்லை. அதேநேரம், பாமக, சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் எதிர்த்திருக்கின்றன. மகிழ்ச்சி. இவையெல்லாம் மசோதா விவகாரங்கள்.

இன்னொரு அரசாணை சந்தேகத்தை எழுப்புகிறது…
தமிழகத் தலைமைச் செயலகத்தில், ‘இந்து சமய அறநிலையத் துறை’க்கு புதிய தனித்துறையாம். நிர்வாக வசதிக்காக என்கிறார்கள்.
கோயில்களைத் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான முன்முயற்சியாக இருக்குமோ என்கிற கேள்வி எழுகிறது. அரசு இதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
சட்டமன்றத்தில், திமுகவுக்கு எதிராக விஜய் ஆடிய ஆட்டத்தைப் பாஜக பாராட்டியது. ஆனால், இந்த இரண்டு மசோதாக்கள் மற்றும் அரசாணை குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.
இதிலிருந்து மத்திய பாஜக அரசின் கைப்பாவையாகவே தவெக அரசு செயல்படுகிறதோ என்கிற சந்தேகம் வலுக்கிறது.
“தளபதி என்னமா பேசினாரு பாத்தியா” என வியக்கும் ரசிகர்களையும் அவர்களது குழந்தைகள் எதிர்காலத்தையும் சேர்த்து அனைவரையும் பாதிக்கும் விசயங்கள் இவை.
– டி.வி.சோமு






Comments are closed, but trackbacks and pingbacks are open.