யாருக்கெல்லாம் வாக்களிக்கக் கூடாது ?
பாசிசமும் பாயாசமும் !
நிகழவிருக்கும் இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும், என்பது குறித்த எனது நிலைப்பாடு இது.
முதலில் யாருக்கெல்லாம் வாக்களிக்கக் கூடாது என்பதைப் பார்ப்போம்.
ரொம்ப சிம்பிள்: அறிவியல் மற்றும் செக்யூலரிசப் பாதையில் இருந்து நம்மைப் புரள வைக்கும் எந்தக் கட்சிக்கும் இந்தியாவில் யாருமே வாக்களிக்கக் கூடாது. இந்தப் பாதையில் இருந்து புரண்ட எந்த சமூகமும் உருப்பட்டதாக வரலாறு இல்லை. குறிப்பாக மதத்தைக் கட்டிக் கொண்டு அழும் எந்த சமூகமும் உருப்படவே முடியாது. இந்த வாதத்துக்கு எதிராக பேசுபவர்கள், இந்து மதம் மட்டுமே செக்யூலர் மதம். மீதி மதங்கள்தான் அடிப்படைவாதம் பேசுபவை என்று சொல்லலாம். அப்படி வாதாடுபவர்களுக்கு பண்டைய வரலாறும் தெரியவில்லை, இன்றைய வரலாறும் தெரியவில்லை. எனது புத்தகம் ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ அந்த வரலாறுகளை விளக்குகிறது.
பாஜக அறிவியலுக்கு, செக்யூலரிசத்துக்கு எதிரானது. இந்து அடிப்படைவாதம் சார்ந்து இயங்குவது. குறிப்பாக, வேதிய பிராமணியத்தைப் போற்றுவது. வேதிய பிராமணியம் எப்படிப்பட்டது? சாதியம், பெண், தலித் ஒடுக்குமுறைகள், மூட நம்பிக்கைகள், பிராமண உயர்வுவாதம் என்று பல்வேறு கொடூரங்களைப் போற்றுவது. அப்படிப்பட்ட ஒன்றை அரசியலில் நுழைப்பவர்கள் என்னைப் பொருத்தவரை மூடர்கள். அல்லது குரூரர்கள். ஜனநாயகத்தில் நம்பிக்கை அற்றவர்கள்.
எனவே, தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே யாரும் பாஜக எனும் அடிப்படைவாத வன்முறைக் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது.
அடுத்தது, நாம் தமிழர் கட்சி. இவர்களோடு ஒப்பிடும் போது பாஜகவே தேவலாம் என்றுதான் தோன்றுகிறது. டிரம்ப்புக்கு அடுத்து ‘முரட்டு முட்டாள்’ எனும் பட்டத்துக்குத் தகுதியானவராக சீமான் கவனத்துக்கு வருகிறார். எனவே நாம் தமிழர் எனும் ஒரு முரட்டு முட்டாள் கூட்டத்துக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது.
அடுத்து தவெக. தனது முதல் மாநாட்டில் பல்வேறு தேசிய, மாநிலத் தலைவர்களை தங்கள் கொள்கை முன்னோடிகளாக அறிவித்து ஆச்சரியப்படுத்தினார் விஜய். பாசிசம், பாயாசம் என்று இரண்டு தரப்பில் இருந்தும் தனித்து நிற்பதாக அறிவித்தது புருவத்தை உயர்த்த வைத்தது. ஆனால் அந்த ஆச்சரியம் ரொம்ப காலம் நிலைக்கவில்லை.
எந்த ஒரு மாநில, தேசியப் பிரச்சினை குறித்தும் எதுவும் செய்யாமல் கடந்தது, கரூர் சம்பவத்தை ஹேண்டில் செய்த விதம், வெறுமனே பாயாசம் பற்றி மட்டுமே பேசி பாசிசத்தை கவனமாகத் தவிர்த்தது, ஜனநாயகன் சம்பவத்தில் வாயை மூடிக் கிடந்தது, தேர்தல் பிரச்சாரத்தில் சுணக்கம் காட்டுவது, என்று அரசியல் குறித்து எந்தத் தெளிவும் அக்கறையுமே இல்லாமல் விஜய் இயங்குகிறார். வெறித்தனமான ரசிகர் கூட்டம் மட்டுமே போதும் என்று அவர் நினைப்பதாகத்தான் தோன்றுகிறது. எனவே தவெக எனும் ரசிகக் குஞ்சுகளின் கூட்டத்துக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது.
தமிழக அரசியல் பற்றிப் பேசும் போது அதிமுக எனும் கட்சி அழியக்கூடாது என்று பலரும் எழுதுகின்றனர். திமுகவுக்கு மாற்றாக ஒரு வலிமையான மாநிலக்கட்சி இருப்பது அவசியம் என்பது அதன் பின்ணணி. அதாவது இந்தத் தேர்தலில் அதிமுக தோற்றால் அது அழிந்து விடும், என்பது அவர்களின் வாதம்.
என்னைப் பொருத்தவரை, தங்கள் கட்சி வாழ வேண்டுமா இல்லையா என்பதை அந்தக் கட்சியினர்தான் எடுக்க வேண்டும். அந்த முடிவை அவர்கள் ஏற்கனவே எடுத்து விட்டனர். பாஜக ஒரு மாநிலக்கட்சியுடன் கூட்டணி சேர்கிறது என்றால் விரைவில் அந்தக் கட்சியை மிஞ்சி அதனை இரண்டாம் நிலைக் கட்சியாக ஆக்கி விடும் என்பதுதான் தேசம் முழுக்க நாம் காணும் வரலாறு. அதே அணுகுமுறை தமிழ்நாட்டிலும் நடக்கலாம். அதாவது, வெற்றி பெற்றாலும் அதிமுக அழியத்தான் போகிறது. எனவே, அவர்களை அவர்களது பாதையில் விட்டு விடுவது நல்லது. சொல்லப் போனால், பாஜகவுடனான தோல்வியில் அவர்கள் பாடம் கற்றுக் கொண்டு தங்கள் வழியை மாற்றிக் கொள்ளும் ஒரு சிறிய சாத்தியக்கூறு உள்ளது. அது நடப்பதற்கு அவர்கள் தோற்க வேண்டும்.
சுருக்கமாக சொன்னால், தமிழ்நாட்டில் இன்றைய நிலவரத்துக்கு அதிமுகவின் வெற்றி என்பது பாஜகவின் வெற்றியாகவே பார்க்கப்படும். இந்த ஒரு காரணத்துக்காகவே அவர்களுக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது.
இறுதியில் மிஞ்சி நிற்பது திமுகதான். திமுகவிடம் பல பிரச்சினைகள் இருக்கின்றன. தலித்திய பார்வையில் இந்த ஆட்சியில் பல போதாமைகள் உள்ளன. ஆணவக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டம், தலித்துகளுக்கு எதிரான குற்றங்களை எதிர்கொள்ளல் போன்றவற்றில் சுணக்கம் தென்படுகின்றன. தீபத்தூண் வழக்கில் வெளிப்படையாகவே minority appeasement தெரிந்தது. தங்கள் ஆட்சியை கடுமையாக விமர்சிப்பவர்களை உள்ளே தள்ளுவதில் காட்டும் உத்வேகம் ஆகியவை முக்கிய பிரச்சினைகள்.
ஆனால் இவற்றையும் மீறி நல்லாட்சிப் பயணம் இருக்கிறது. கல்வி, பெண்கள் முன்னேற்றம், தொழில் வளர்ச்சி போன்றவற்றில் காட்டும் ஆர்வம் குறிப்பிடத்தக்கவை. கடந்த ஐந்தாண்டுகளில் அமைக்கப்பட்ட நூலகங்கள், படிப்பகங்கள், மியூசியங்கள் கடந்த 40 ஆண்டுகளில் நிறுவப்பட்டவற்றை விட அதிகமானவை. கட்டுமானப்பணிகளிலும் முன்னேற்றம் இருக்கிறது. ஜிடிபி வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதலிடம் வந்து கெத்து காட்டினார்கள். எதிர்க்கட்சிகளை நயமாக அணுகும் விதமும் பாராட்டத்தக்கது.
இவை அனைத்தையும் விட தனிப்பட்ட முறையில் எனக்கு முக்கியமாக நான் பார்ப்பது பாஜகவுக்கு எதிராக திமுக களமாடியதுதான். தேசிய அளவில் பாஜகவை எதிர்த்து இயங்கும் ஒரு சில கட்சிகளில் முதன்மையானது திமுக என்றே சொல்லி விடலாம். அதை விட, இந்துத்துவத்துக்கும் அது சார்ந்த வன்முறைக்கும் எதிரான திமுகவின் நிலைப்பாடு போற்றத்தக்கது. அந்த ஒரு அம்சத்துக்காகவே திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன்.
இந்துத்துவம் எனும் முரட்டு மூட வன்முறை சித்தாந்தம் இந்தியாவை விட்டு ஒழிய வேண்டும். அந்த மூட வன்முறையை போற்றிப் பாதுகாக்கும் பாஜக தேசிய அளவில் முறியடிக்கப்பட வேண்டும். அதற்கு திமுக போன்ற செக்யூலர் சக்திகளுக்கு நாம் வலுவூட்ட வேண்டும்.
எனவே, செக்யூலரிசம், அறிவியல் பூர்வ வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் மீது அக்கறை கொண்டவர்கள் அனைவரும் இந்தத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
– ஸ்ரீதர் சுப்ரமணியம்








Comments are closed, but trackbacks and pingbacks are open.