வயல் வெளிகளில் வெள்ளை பூக்கள் – சாராய கப்புகள் – கிராமத்து கதை !

1

வயல் வெளிகளில் வெள்ளை பூக்கள் – சாராய கப்புகள் – கிராமத்து கதை !

கிராமத்து கதை
கிராமத்து கதை

“அண்ணே இந்தப் பக்கம் போனா செஞ்சி ரோடு வருமா?”

“வரும்.. ஆனா அது கொஞ்சம் சுத்து பா.. நீ இப்படியே போ இதான் உனக்கு பக்கம்” என்றார். இல்லனா நான் இந்த வழியே போய்க்கிறேன். சுத்தி பார்க்க தானே வந்திருக்கேன்.  சுத்துவோம்.

- Advertisement -

- Advertisement -

சென்னை – திருச்சி மெயின்ரோடு வழியா வீட்டுட்டு போனா 40 கி.மீ. கிராமங்களை சுத்திட்டு போகும் வழிய தேர்வு பண்ணதால 90 கி.மீ. தூரம். பல கிளைகளாக பிரிந்து செல்லும் சாலைகள்.. திக்கு திசை தெரியாமல் திணறிய தருணங்கள்…

ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்து வந்தேன். அனைத்தும் நகரங்களுக்கு அப்பால் இருக்கக் கூடிய கிராமங்கள். சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்ததால் ஏரி, குளம் குட்டைகள், கிணறு அனைத்தும் நிரம்பி இருந்தன.

அந்தி மாலை என்பதால் ஊசிக் காற்று சதையைத் துளைத்து எலும்பை உரசிச் சென்றது. லேசாக குளிருயது. பயிரிடப்பட்ட நிலங்களில் ஒன்றிரண்டு பேர் களை எடுக்கவும், பூச்சிக் கொல்லி மருந்து தெளித்துக் கொண்டும் இருந்தனர். பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.

பெரிய அளவு விவசாயம் இல்லை. இந்த சீசனுக்கு பனிப் பயிரான காராமணி, உளுந்து, பெரும்பயிர் போடுவார்கள். அதெல்லாம் குறைவாகத் தான் இருந்தது. கிணறு பம்ப் செட் வைத்திருப்பவர்கள் தான் பரவலாக பயிரிட்டு இருக்கிறார்கள்.

வானம் பார்த்த பூமி பெரும்பாலும் கரம்பாகத் தான் இருந்தன. இப்போது மழை பெய்துள்ளதால் சிலர் தாமதமாக விதைத்திருப்பதை காண முடிந்தது.

கிராமத்து கதை
கிராமத்து கதை

பெரும்பாலான கிராமங்கள் குடியால் சீரழிந்து உள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளைப் பூக்கள் போல யூஸ் அன்ட் துரோ கப்புகள் கொட்டிக்கிறது. அதுவும் விளை நிலங்களில்… கும்பல் கும்பலாக அமர்ந்து குடிக்கும் இளைஞர்கள் பட்டாளம். திறந்தவெளி பார்களாக கிராமங்கள் செயல்படுகிறது.

கிராமப்புற வருமானம் எதுவென்று உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் நூறு நாள் வேலைத் திட்டம் தற்போது பெருமளவு கைக் கொடுகிறது என்று சொல்லாம். எங்கு காணினும் மராமத்துப் பணிகள் நூறு நாள் திட்டத்தின் மூலம் செய்திருக்கிறார்கள்.

பார்த்ததில் ஆச்சர்யப்பட கூடிய விஷயம் என்னவென்றால், குடிசைகள் இல்லை. மிக சொற்ப அளவில் தான் இருந்தது. தார்ச் சாலைகள் எல்லா கிராமங்களிலும் தரமாக அமைத்திருக்கிறார்கள். என் அனுபவத்தில் இந்த மாதிரி தமிழகத்தை தாண்டினால் வேறு எங்கும் பார்க்க முடியாது.

4 bismi svs

நூலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மிக மிகக் குறைவாக உள்ளன. இன்னும் மூடாமல் இருக்கிறார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

முன்பு நகரங்களில் மட்டுமே இருந்த தனியார் பள்ளிகள் இப்பொழுது கிராமங்களிலும் கடை விரிக்க தொடங்கியுள்ளது. இதைப் பற்றியே விரிவாக எழுதலாம்.

கிராமத்து கதை
கிராமத்து கதை

பேருந்து வசதி முன்பு போல் இல்லை. ஒரே ஒரு பேருந்து மட்டும்தான் பார்க்க முடிந்தது. அதே சமயம் இரு சக்கர வாகனங்கள் அதிகரித்து உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இப்படி பார்ப்பது அரிது.

பொங்கல் விழாவிற்கான அறிகுறியே பெரும்பாலும் இல்லை. முன்பெல்லாம் ஊருக்கு ஊரு இளைஞர்கள் முன்னெடுப்பில் கலை விழா நடத்துவார்கள். இப்போது ஒன்றிரண்டு கிராமங்களில் தான் பார்க்க முடிந்தது.

சிறு சிறு சந்தைகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதாவது வழக்கமாக பொங்கல் செலவுகள் பாதியாக குறைந்திருக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

எந்த ஊருக்குள் சென்றாலும் மக்களை குழுவாக பார்க்க முடியவில்லை. தொடர்புகள் அற்று வீட்டோடு முடங்கி இருக்கிறார்கள். மரத்தடியில் அமர்ந்து பேசும் ஆண்கள் கூட குறைவாகவே கண்ணில் பட்டனர்.

வீட்டு வாசலில் பூசணிப் பூவிற்கு பதிலாக செம்பருத்திப் பூ அதிகம் இடம் பிடித்துள்ளது. கிராமத்திற்கு வெளியே வீடுகள் அதிகரித்திருக்கிறது.

பஸ் வசதியே இல்லாத ஊருக்குள் கூட ரியல் எஸ்டேட் வணிகம் கொடிகட்டி பறக்கிறது. குறைந்தது 4 லட்சம். சாதியின் இறுக்கம் எந்தளவுக்கு குறைந்துள்ளது என்று தெரியவில்லை. ஆனால் எல்லா கிராமத்திலும் சாதி அடையாள கொடிகள் கட்டாயம் உள்ளது.

திமுக, அதிமுக, காங்கிரசு கட்சிக் கொடிகள் இல்லாத ஊரே இல்லை. பத்தில் ஒரு ஊரில் பாசகவிற்கும், நாதகவுக்கும் கிளைகள் உள்ளது.

ஒப்பிட்டளவில் குறுகிய காலத்தில் தமிழகம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கு நிகராக குடி கலாச்சாரமும், பண்பாட்டுச் சிதைவும் அதிகரித்துள்ளது.

இடம்: விழுப்புரம் மாவட்டம். செஞ்சி தாலுக்கா ரெட்டணை, முப்புள்ளி, கொடிமா சுற்று வட்டார கிராமங்கள்.!

முகநூலில்: ரஞ்சித்

5 national kavi
1 Comment
  1. Nithyanandam V M S says

    ❤️❤️❤️❤️❤️👌👌👌👌❤️❤️❤️❤️❤️

Leave A Reply

Your email address will not be published.