“ஹீரோவை மட்டும் நம்பினால் குளோஸ் தான்” – ‘அகமொழி விழிகள்’ விழாவில் ஆவேசப் பேச்சு!
சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அகமொழி விழிகள்’. வரும் மே.09 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் ஏப்ரல் 26- ஆம் தேதி இரவு நடந்தது.
இந்நிகழ்வினில் பேசியோர்…
*தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ்*
” நீங்கள் அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும், இப்படத்தைத் திரையரங்குகளில் வந்து பாருங்கள். மீடியா நண்பர்கள் அனைவருக்கும் நன்றி”..
சிறு முதலீட்டு தயாரிப்பாளர் *ஆர்.கே. அன்பழகன்*
“அழகாகன தமிழில் டைட்டில் வைத்ததற்கே இந்தக் குழுவினரை பாராட்ட வேண்டும். தமிழை நம்பி வந்த இந்த தயாரிப்பாளரை நாம் தான் வளர்த்து விட வேண்டும். இந்தப் படத்திற்கு பெரிய வெற்றியைத் தர வேண்டும். சில நாட்கள் முன் தேவயானி மேடம் ஒரு விழாவில் சின்னப் படங்களுக்கு நான்கு நாட்களாவது திரையரங்குகள் தர வேண்டும் எனப் பேசினார். இதை அனைத்து சங்கங்களும் ஆதரிக்க வேண்டும். வருடத்தில் நான்கைந்து பெரிய படங்கள் தான் ஓடுகிறது. இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் சின்ன படங்களுக்கு ஆதரவு தர வேண்டும். நாம் ஒழுங்காகப் படமெடுப்பதில்லை, நல்ல படம் எடுத்தால் ஓடும்”.
தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் *மங்கை ராஜன்*
“தயாரிப்பாளர் கேரளாவில் இருந்து வந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார். இங்கு தமிழில் பேச நினைத்த அவரது முயற்சிக்கு வாழ்த்துக்கள். நாயகன் நாயகி இருவரும் மிக நன்றாக நடித்துள்ளனர். இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்”.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் *திருச்சி ஶ்ரீதர்*
“இப்படத்தின் பாட்டு விஷுவல்ஸ் மிக நன்றாக உள்ளது. படமும் மிக நன்றாக வந்துருக்கும் என நம்புகிறேன். இப்போது திரையரங்குகளில் மக்கள் கூட்டம் மிகவும் குறைந்துவிட்டது.84 படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளது . ஆனால் 4 படங்கள் தான் வெற்றி பெற்றுள்ளது, இந்த நிலை நீடித்தால் திரையரங்குகள் அழியும். எல்லோரும் திரையரங்கில் வந்து படம் பாருங்கள். ஓடிடியிலும் பெரிய படங்களை மட்டுமே வாங்குகிறார்கள். இந்த நிலை மாற சின்னப்படங்கள் ஓட வேண்டும். இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகிறேன் “.

*நாயகி நேஹா ரத்னாகரன்*
“தயாரிப்பாளர் பவுலோஸ் சாருக்குத் தான் முதல் நன்றி. இந்த மேடை வரை இந்தப்படம் வர அவர் தான் காரணம். இயக்குநர் சசீந்திரா சார் ஒவ்வொரு சீனும் எனக்குச் சொல்லித் தந்து, என்னை மிக நன்றாகப் பார்த்துக் கொண்டார். என் கோ ஸ்டார் ஆடம் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.
*நாயகன் ஆதம் ஹசன்*
“இந்தப் படத்தை இரண்டு ஆண்டுகளாக எடுத்தோம். நான் கத்தாரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன், இங்கு வந்து போகும் இடைவேளையில் தான் இந்தப்படம் எடுத்தார் இயக்குநர். இயக்குநர் மிக கண்டிப்பாக இருப்பார், ஒவ்வொரு டயலாக்கும் சரியாக வரும் வரை விட மாட்டார்.படம் நன்றாக வந்துள்ளது. இந்தப்படத்திற்கு உங்கள் அனைவரது ஆதரவையும் தாருங்கள்”.
*தயாரிப்பாளர் கே ராஜன்*
” கேரளா நண்பர்கள் இந்தப்பட விழாவிற்கு அழைத்த போது மலையாள டப்பிங் படம்னு தான் நினைத்துத் தான் வந்தேன். ஆனால் மிக அழகான தமிழ்ப் படமாகச் செய்துள்ளார்கள். டிரெய்லர், மூணு பாடல் எல்லாமே அவ்வளவு சிறப்பாக இருந்தது. குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். பெரிய ஹீரோ பின்னால் போனால் படம் ஓடாது. கதை நன்றாக இருந்தால் மட்டும் தான் ஓடும். நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து, இந்த மாதிரி புது நாயகன் நாயகியைப் போட்டுப் படமெடுத்தால் படம் ஓடும்.

அகமொழி விழிகள் என்ன அழகான என்ன ஒரு அழகான தமிழ் தலைப்பு. அஜித் எப்போதும் தமிழில் தான் டைட்டில் வைப்பார். ஆனால் இயக்குநர் எவனோ குட் பேட் அக்லி என டைட்டில் வைத்து விட்டான். கேரள சகோதரர் தமிழில் தலைப்பு வைக்கிறார் தமிழனுக்குத் தமிழில் தலைப்பு வைக்கத் தெரியவில்லை. இந்த அகமொழி விழிகள் ஜெயிக்க மனம் குளிர்ந்து மகிழ்ந்து வாழ்த்துகிறேன்”.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
*ஜாக்குவார் தங்கம்*
” நாயகன், நாயகி இருவரும் அற்புதமாக நடித்துள்ளனர். பாடல் எல்லாம் மிக அழகாக உள்ளது. நம் தமிழ் சினிமா வந்தாரை வாழ வைக்கும். தமிழில் ஒழுங்கா படமெடுத்தா ஓடத்தான் செய்யும் . அதைவிட்டுவிட்டு தமிழ் சினிமாவை குறை சொல்லாதீர்கள்”.
*இயக்குநர் பேரரசு*
“மலையாத் தயாரிப்பாளர் தனது மொழியில் தமிழை எழுதி வைத்துப் பேசுவதே பெருமையாக உள்ளது. தமிழ் மீதான அவரது மரியாதை வியக்க வைக்கிறது. இப்படத்தின்பாடல், விஷுவல்ஸ் எல்லாமே நன்றாக இருக்கிறது. எப்போதும் கதையை நம்பி படமெடுங்கள். என் மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள், அப்படிப் படமெடுத்தால் ஓடாது. இந்தப்படம் சின்ன பட்ஜெட்டில் அசத்தியுள்ளார்கள். அத்தனை பேரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். இந்த மாதிரிப் படங்கள் வெற்றி பெற வேண்டும்”.
*இயக்குநர் சசீந்திரா கே. சங்கர்*
“என் தயாரிப்பாளருக்கு எனது முதல் நன்றி. என் கனவை புரிந்து நான் சொன்ன கதையை நம்பி இந்தப்படத்தை எடுக்க ஒரு தயாரிப்பாளர் முதலீடு செய்ய வேண்டுமெல்லவா, அது தான் முக்கியம். ஒரு தயாரிப்பாளர் இல்லாமல் இங்கு எதுவும் இல்லை. நான் மலையாளி என்றாலும் என் பாட்டி தமிழ் தான். என் வேர் தமிழ் தான். மலையாளம் கன்னடம் தெலுங்கு எல்லாம் தமிழில் இருந்து வந்த மொழிகள் தான். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு. இந்தப் படத்தை உங்கள் கையில் கொடுத்து விட்டோம், வாழ வையுங்கள். என்னை இயக்குநராக்கியது தமிழ் தான். நான் இங்கு தான் பல ஆண்டுகளாக வேலை பார்த்தேன். இந்த மொழி வாழ வைக்கும் என நம்பிக்கையில் தான் இருக்கிறேன். அகமொழி விழிகள் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும்”.
இசைக் கச்சேரிகளில் பாடல் பாடும் ஒரு இளைஞன், தன் காதலிக்கு ஒரு பிரச்சனை ஏற்பட, அதற்கெதிராக களமிறங்குகிறான். பார்வையில்லாத அவன் எதிரிகளை எப்படி பழி தீர்க்கிறான் என்பதை, முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில், பரபர திருப்பங்களுடன் சொல்லி, ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும் அட்டகாசமான த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் ஆதம் ஹசன், நேஹா ரத்னாகரன் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர் இவர்களுடன், தர்மஜன், நவேதயா ஷாஜூ, குலப்புலி லீலா, ராஜீவ் கண்ணன் , சி.கே.ஆர், ஹரிதா, ராஷீ, தீபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
*தொழில்நுட்பக் குழு*
இசை: எஸ்பி வெங்கடேஷ், ஜுபைர் முஹம்மது,
ஒளிப்பதிவு: ஜஸ்பால் சண்முகம், ராஜேஷ், செல்வகுமார்
எடிட்டிங்: சரவணன் ,
ஸ்டண்ட்: கிக்காஸ் காளி, புரூஸ் லீ ராஜேஷ் ,
கலை இயக்கம் – ருத்ரா திலீப், எம்.பாவா,
நடனம் – தம்பி சிவா,
புரொடக்சன் டிசைனர்:
அலெக்ஸ் மேத்யூ
மக்கள் தொடர்பு: சரண்
— மதுரை மாறன்.