அயோத்திதாசப் பண்டிதரின் சமூகப் பணியும் எழுத்துப் பணியும்! – முனைவர் சீமான் இளையராஜா

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அயோத்திதாசப் பண்டிதர் வாழ்ந்த காலம் (1845 -1914) வரலாற்றில் மிக முக்கியமான காலக்கட்டமாகும். மக்கள் கூடி வாழும் இவ்வுலகில் எத்தனை ஏற்றத்தாழ்வுகள் சாதி, மதம், இனம், மொழி, நிறம் ஆகியவற்றால் உலகம் மாறுபட்டுக் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டபோது ஞான ஒளியாய் இம்மண்ணில் பிறந்து, மாபெரும் மாற்றங்கள் நிகழ்வதற்கு வித்திட்டவர் காத்தவராயன் (எ) அயோத்திதாசப் பண்டிதர்.

காத்தவராயன் (எ) அயோத்திதாசப் பண்டிதர்
காத்தவராயன் (எ) அயோத்திதாசப் பண்டிதர்

Kauvery Cancer Institute App

கல்வி உரிமை, சாதி ஒழிப்பு, சமத்துவம், சகோதரத்துவம், இட ஒதுக்கீடு, பெண் விடுதலை, பவுத்தம், பகுத்தறிவு, இந்துமத எதிர்ப்பு போன்ற முற்போக்கு அரசியலுக்கு இந்திய அளவில் பெரும் பங்களிப்பைச் செய்தவர். தென்னிந்தியாவின் முதல் சாதி ஒழிப்புப் போராளியாகச் செயல்பட்டவர். சாதியற்ற தமிழர்கள் எனப் பதிவு செய்யுமாறு அரசுக்குக் கோரிக்கை வைத்தவர். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலையடையப் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பவுத்தப் புரட்சி வழிவகுத்தது. இதற்கு அயோத்திதாசப் பண்டிதரின் தமிழ்ப் பவுத்தமே முன்னோடியாக இருந்தது. நீண்ட நெடுங்காலமாக வரலாற்றில் மறைக்கப்பட்டிருந்தவர் அறிவின் எழுச்சியால் தற்போது வரலாற்றில் மறைக்க முடியாத ஆளுமையாக உயர்ந்து நிற்கிறார்.

அயோத்திதாசப் பண்டிதரும் ஆல்காட் சந்திப்பும்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கர்னல் ஆல்காட், பிளவாட்ஸ்கி அம்மையார் இருவரும் தம் கொள்கைகளைப் பரப்புவதற்குத் தகுதியான இடம் இந்தியா என்பதால் 1879 இல் இருவரும் சென்னைக்கு வந்தனர். சென்னையில் இருந்து ஓய்வுக்காக நீலகிரி சென்றனர். இருவரையும் அயோத்திதாசப் பண்டிதரும், ரெட்டைமலை சீனிவாசனும் சந்தித்தனர். கர்னல் ஆல்காட் பவுத்தத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

கர்னல் ஆல்காட், பிளவாட்ஸ்கி அம்மையார்
கர்னல் ஆல்காட், பிளவாட்ஸ்கி அம்மையார்

1883 இல் சென்னை அருகே உள்ள அடையாற்றில் பிரம்மஞானச் சபையைத் தொடங்கினார். ’பிரம்மஞானச் சபை’ தொடங்கப்பட்ட மறு ஆண்டு 1884 இல் சபையின் ஆண்டு விழா, கர்னல் ஆல்காட் தலைமையில் நடந்தது. இவ்விழாவில் வெளிநாட்டவர்கள், பார்சிகள், வங்காளிகள், தமிழகப் பிராமணர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இந்தியர்களின் அரசியல் பணி தொடர்பாக ஓர் அமைப்பு தொடங்குவதென முடிவு செய்தனர். இந்த அமைப்பு தான் பின்னர் இந்தியத் தேசியக் காங்கிரசாக மாறியது.

முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு

கி.பி. 1881 இல் இந்தியக் குடிமக்கள் முதல் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில் ’சாதியற்ற திராவிடர்கள்’ அல்லது ’ஆதி தமிழர்கள்’ எனத் தம்மைப் பதிவு செய்து கொள்ளும்படி தலித் மக்களுக்கு அயோத்திதாசப் பண்டிதர் வேண்டுகோள் விடுத்தார். தவறுதலாக அவர்கள் தம்மைச் சாதி அடையாளத்தோடு பதிவு செய்தால் அதைப் புறக்கணித்து அவர்களை ‘சாதியற்ற திராவிடர்கள்’ அல்லது ‘ஆதி திராவிடர்கள்’ ‘ஆதி தமிழர்கள்’ என்றே பதிவு செய்ய வேண்டும் என அரசாங்கத்திடம் அயோத்திதாசப் பண்டிதர் கோரிக்கை வைத்தவர்.

திராவிடக் கழகம்

தாழ்த்தப்பட்ட மக்களை அரசியலில் விழிப்புணர்வு பெற வைக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில் தலித் தலைவர்கள், அனைவரும் தீவிரமாகச் சமூகப் பணியாற்றினார்கள். 1882 இல் ‘திராவிடக் கழகம்’ என்ற அமைப்பை நிறுவிச் சமூகப் பணியாற்றி வந்த ரெவரண்ட் ஜான்ரத்தினம் அவர்களுடன் அயோத்திதாசப் பண்டிதரும் இணைந்து ‘திராவிடப் பாண்டியன்’ எனும் இதழை 1885 இல் தொடங்கினர்.

ரெவரண்ட் ஜான்ரத்தினம்
ரெவரண்ட் ஜான்ரத்தினம்

ஏற்கனவே ரெவரண்ட் ஜான் ரத்தினம் அவர்கள் உருவாக்கிய திராவிடக் கழகம் சென்னையில் சிறிய அளவில் மட்டுமே இயங்கி மாலை நேரப் பள்ளிகளை நடத்தி வந்தது. பிறகு அவர் ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு அந்த அமைப்பின் பணிகள் படிப்படியாக நின்று போனது. இருந்தாலும் மாலை நேரப் பள்ளிகள் என்கிற செயல்பாடு தமிழகம் முழுவதும் பல்வேறு இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்டு விரிந்து பரவின. அயோத்திதாசப் பண்டிதர் திராவிட மகாஜனச் சபையைப் பெரும் இயக்கமாகக் கட்டமைத்தார். அந்த அமைப்பு அன்றைக்கு உருவான காங்கிரஸ் அமைப்போடு நேரடியாகவே மல்லுக்கு நின்றது. பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு மனுக்கள் மூலமாகக் கோரிக்கைகளை முன்வைத்து அழுத்தங்களைக் கொடுத்தது.

திராவிட மகாஜனச் சபை

1891இல் ‘திராவிட மகாஜனச் சபை’ அயோத்திதாசப் பண்டிதரால் தொடங்கப்பட்டது. இதன் முதல் மாநாடு நீலகிரியில் 1.12.1891 இல் நடைபெற்றது. மாநாட்டு சபையின் தலைவராக அயோத்திதாசப் பண்டிதர் தலைமை தாங்கினார். தாழ்த்தப்பட்டோர் இந்தியாவில் நடத்திய முதல் மாநாடு இதுதான். இம்மாநாட்டில் விரிவான ஆய்வுகள் நடைபெற்றன. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாகக் காங்கிரசு இயக்கத்திற்கு 10 தீர்மானங்களை அனுப்புவது என்று அதில் முடிவெடுக்கப்பட்டது.

மாநாட்டு தீர்மானங்கள்

1.ஒடுக்கப்பட்ட வகுப்பாரைப் பறையன் என அழைத்தாலோ, குறிப்பிட்டாலோ, ஏளனப்படுத்தினாலோ அவ்வாறு செய்வோரைத் தண்டிப்பதற்குக் கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

2.ஒடுக்கப்பட்ட வகுப்பாரை முன்னேற்ற வேண்டுமானால், அவர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும். அக்கடமையை அரசே முழுமையாக ஏற்று அவர்களுக்கெனத் தனிப்பள்ளிகளை அமைத்துத் தனியாக ஆசிரியர்களையும் அமர்த்த வேண்டும். மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணமாக அரைக்கட்டணமே பெறப்பட வேண்டும்.

3.பள்ளி இறுதி வகுப்பாரில் தேர்ச்சி பெறும் ஒடுக்கப்பட்ட வகுப்பாரில் ஆண்டுதோறும் மூவரைத் தெரிவு செய்து உதவித்தொகை அளித்துப் பட்டப்படிப்புக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

4.பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெறும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் அரசுப்பணிகள் அளிக்கப்பட வேண்டும்.

5.ஒடுக்கப்பட்டோரின் கல்வித்தகுதி, நடத்தை, உடல்நலம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசுப்பணிகளில் சேர்வதற்கு எந்த விதமான தடைகளும் இருக்கக்கூடாது.

6.ஒடுக்கப்பட்டோரின் வேலை வாய்ப்புகள், அவர்களின் குறைபாடுகள் பற்றிய விவரங்களை அரசுக்கு அறிவிப்பதற்கு ஒவ்வோர் ஊரிலும் பேராளர்களை அமர்த்த வேண்டும். பொதுவாக அரசுக்கு வரி செலுத்துவோரின் பிள்ளைகளுக்கு அரசுப் பணியில் சேர்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறே, வரி செலுத்தும் ஒடுக்கப்பட்டோரின் பிள்ளைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

7.சிறைச்சாலைகள் சட்ட விதிமுறைகள் 1-ஆம் பிரிவு, 646-ன் கீழ்ச் சிறைக் கைதியாயுள்ள பறையர்களை மற்ற சிறையாளிகளின் மலம், எடுக்கும்படி கூறும் விதியை மாற்ற வேண்டும்.

8.பொதுக்குளங்கள், கிணறுகள் ஆகியவற்றிலிருந்து குடி தண்ணீர் எடுக்கும் உரிமை ஒடுக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இத்தடையை அரசு அகற்ற வேண்டும்.

9.இந்துக்கள் பணியாற்றும் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றின் வளாகத்திற்குள் செல்லவும், அங்கு அமரவும் ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை மறுக்கப்படுகிறது. இத்தடைகளை நீக்கி, அவர்களும் பிற சாதியினரைப் போல் உட்செல்ல, உட்கார உரிமை வழங்க வேண்டும்.

10.ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் படித்த நல்ல நடத்தை உள்ளோரைத் தேர்ந்தெடுத்து, அவர்களை அதிகாரிகளாகவும், கிராம முன்சீப்புகளாகவும் பணியமர்த்த வேண்டும்.

இத்தீர்மானங்கள் அனைத்தையும் அரசுக்கும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வீரராகவாச்சாரிக்கும் 22.12.1892 அன்று அனுப்பி வைக்கப்பட்டது.

ஓலைச்சுவடியும் – திருக்குறளும்

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

கி.பி.1820ஆம் ஆண்டு தாமஸ் மன்றோ சென்னை மாகாண ஆட்சியராகப் பதவிக்கு வந்தார். 1827ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த தாமஸ் மன்றோவின் காலத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த ஜார்ஜ் ஆரிங்டன் என்பவரிடம் கந்தப்பன் என்பவர் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர் சித்தமருத்துவராகவும் இருந்தார். அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவம், சோதிடம், இலக்கியம், இசை, நாடகம், கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்கினர்.

கந்தப்பன், ஜார்ஜ் ஆரிங்டன் அவர்களிடம் உதவியாளராகப் பணிபுரிந்த காலத்தில் ஜார்ஜ் ஆரிங்டனின் உற்ற நண்பரான ‘எல்லீஸ்’ என்பவர் பிரிட்டனின் குடிமைப் பணியில் தேர்ச்சி பெற்றுச் சென்னைக்கு வந்தார். 1825 ஆம் ஆண்டு சென்னையில் ‘தமிழ்ச் சங்கம்’ ஒன்றை நிறுவினார். இந்தச் சங்கம் ஓலைச்சுவடிகளை நூல் வடிவில் அச்சேற்றும் நோக்கத்தோடு நிறுவப் பட்டதாகும்.

கந்தப்பன் தன்னிடம் இருந்த பரம்பரைச் சொத்தான திருக்குறள் திருவள்ளுவமாலை, நாலடி நானூறு ஆகியவற்றின் ஓலைச்சுவடிகளை ஜார்ஜ் ஆரிங்டன்னிடம் கொடுத்து அவற்றை அச்சேற்றும்படி கேட்டுக் கொண்டார். ஓலைச்சுவடிகளின் சிறப்பை உணர்ந்த ஜார்ஜ் ஆரிங்டன் அவற்றை எல்லீஸிடம் கொடுத்துப் புதுப்பிக்கச் செய்தார்.

1831 ஆம் ஆண்டு திருக்குறள், திருவள்ளுவ மாலை, நாலடிநானூறு ஆகியவை புதுப்பித்து நூலாக வெளியிடப்பட்டது. திருக்குறள் ஓலைச்சுவடியைப் பாதுகாத்துக் கொடுத்தவர் அயோத்திதாசப் பண்டிதரின் பாட்டனார் கந்தப்பன் ஆவார். கந்தப்பன் இல்லை என்றால் தமிழர்களுக்குத் திருக்குறள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

எழுத்துப் பணி

தமிழ், ஆங்கிலம், பாலி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்றிருந்த அயோத்திதாசப் பண்டிதர் இலக்கியம், சமயம், வரலாறு உள்ளிட்ட தளங்களில் தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். தன்னுடைய கட்டுரைகளுக்கும், கருத்தியலைக் கட்டமைப்பதற்கும், சங்க இலக்கியங்களையும் பதினெண்கீழ் கணக்கு நூல்களையும், காப்பியங்களையும் அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக அவர் கையாண்ட நூல்கள் பெரும்பாலும் பவுத்த, சமண இலக்கியங்களாக இருந்துள்ளன. “ஒருபைசாத் தமிழன்” இதழில் எழுதுவதற்கு முன்னரே தமிழ் இலக்கியங்களை நன்கு கற்றுத் தேர்ந்துள்ளார். இவருக்குச் சித்தமருத்துவம் கைகொடுத்துள்ளது. அதன் வாயிலாகவே மருத்துவம் பார்க்கும் வீடுகளில் இருந்த ஓலைச்சுவடிகளைப் பெற்றுத் தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் நல்வாய்ப்பைப் பெற்றிருந்தார். இதனால் “தமிழன்” இதழில் தமிழிலக்கியப் புலமையோடு எழுதியுள்ளார். அயோத்திதாசப் பண்டிதரின் எழுத்துகளில் மேற்கோள் காட்டியுள்ள நூல்களின் பட்டியலை இன்றைய அறிஞர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இதற்கு ஆதாரமாகப் பின்வரும் நிகழ்வைக் கூறலாம்.

ஞான அலாய்சியஸ்
ஞான அலாய்சியஸ்

அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனைகளை ஞான அலாய்சியஸ் இரண்டு தொகுதிகளாகத் தொகுத்து வெளியிட்டார். இந்நூல் தொகுதிகளைச் சென்னையில் பெரியாரிய, மார்க்சியப் பொதுவுடமைக் கட்சியை நிறுவிய வே.ஆனைமுத்து அவர்கள் வெளியிட்டுப் பேசினார். அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அப்போதைய சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ‘பொற்கோ’ அவர்கள் கலந்து கொண்டார். அவரிடம் வே.ஆனைமுத்து, அயோத்திதாசப் பண்டிதர் தன்னுடைய ‘தமிழன்’ இதழில் மேற்கோள் காட்டியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களின் பட்டியலைக் காண்பித்து இந்த நூல்களை நீங்கள் படித்ததுண்டா? என்று கேட்க, அயோத்திதாசப் பண்டிதர் மேற்கோள் காட்டியுள்ள பல நூல்களை நான் கண்ணால் கூடக் கண்டதில்லை என்று பொற்கோ கூறியிருக்கிறார்.

பவுத்தம் தழுவுதல்

தமிழ் பவுத்த வரலாற்றை மீட்டெடுத்து, பவுத்த நோக்கில் தமிழ் இலக்கிய நூல்கள் பலவற்றுக்கும் விளக்கமளித்தவர் அயோத்திதாசப் பண்டிதர். தமிழர்கள் தமது வாழ்வில் கடைபிடித்துவரும் திருமணச் சடங்கு, ஈமச் சடங்கு உள்ளிட்ட பல்வேறு சடங்குகளும் கார்த்திகை தீபம், பொங்கல், தீபாவளி முதலான பண்டிகைகளும் பவுத்த நெறியில் இருந்தவை தான் என்பதற்குப் பல்வேறு சான்றுகளுடன் விளக்கம் தந்துள்ளார். அயோத்திதாசப் பண்டிதர் 1898 இல் இலங்கைக்குச் சென்று, அங்குப் பவுத்தத்தைத் தழுவித் தீட்சை பெறுகிறார். இலங்கையிலிருந்து திரும்பியதும் சென்னை இராயப்பேட்டையில் ”சாக்கியப் பவுத்தச் சங்கம்” நிறுவினார். அதே காலத்தில், பவுத்தத்தை ஏற்றுப் பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தவர் பேராசிரியர் பி.லட்சுமி நரசு. இவர் ஆங்கிலத்தில் ‘எசன்ஸ் ஆஃப் புத்திஸம்’ என்ற நூலை எழுதி, 1907 இல் வெளியிட்டார்.

ஒருபைசாத் தமிழன் இதழ்
ஒருபைசாத் தமிழன் இதழ்

ஒருபைசாத் தமிழன்

திராவிடப் பாண்டியன் இதழில் பெற்ற அனுபவம் அயோத்திதாசப் பண்டிதருக்குக் கைகொடுத்தது. 19.06.1907 ஆம் ஆண்டு ’ஒருபைசாத் தமிழன்’ என்ற இதழைத் தொடங்கினார். தமிழ் இதழியல் வரலாற்றில் ஒருபைசாத் தமிழன் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ’ஒருபைசாத் தமிழன்’ என்ற இதழின் பெயர் மாற்றப்பட்டு 1908 ஆம் ஆண்டு ’தமிழன்’ என்று வெளிவந்தது. அக்காலத்தில் இதழ்களின் பெயர்கள் சமஸ்கிருதத்திலும், இந்தியிலும், ஆங்கிலத்திலும் இருந்தபோது ’தமிழன்’ என்று தமது இதழுக்குப் பெயர் சூட்டியவர் அயோத்திதாசப் பண்டிதர். முதல் இதழிலிருந்தே புத்தரின் வாழ்க்கை வரலாற்றை ‘புத்தரது ஆதிவேதம்’ என்னும் தலைப்பில் எழுதி வந்தார். அயோத்திதாசப் பண்டிதரைச் சமூகச் சீர்திருத்த வாதியாகவும். இதழ் ஆசிரியராகவும் தமிழ் இலக்கிய வாதியாகவும், களப்போராளியாகவும் அறிந்து கொள்வதற்கு முன் திரு.வி.க. அவர்களால் சிறந்த சித்தமருத்துவராகம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறார்.

அண்ணல் அம்பேத்கருக்கு முன்னோடி

பவுத்தத்திற்கும் ஆரியத்திற்கும் இடையே நடந்த போர் தான் இந்திய வரலாறு என்பார் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர். அவருக்கு முன்பே இந்தக் கருத்தைக் கூறியவர் அயோத்திதாசப் பண்டிதர் ஆவார். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கருக்கு முன்னோடியாக விளங்கியதைப் பேராசிரியர் லட்சுமி நரசுவின் ’பவுத்தச் சாரம்’ நூலுக்கு அண்ணல்

அம்பேத்கர்
அம்பேத்கர்

எழுதிய முன்னுரையின் வாயிலாகவும், சாக்கியப் பவுத்தச் சங்கங்களில் மேற்கொண்ட ஆய்வின் வழியாகவும் காணலாம்.

இந்திய ஒடுக்கப்பட்டோர் விடுதலை அரசியலை முன்னெடுத்ததில் புரட்சியாளர் அம்பேத்கரின் பங்களிப்பை யாரோடும் ஒப்பிட முடியாது. ஆனால் அவர் பிறந்த 1891 ஆம் ஆண்டு அயோத்திதாசப் பண்டிதர் தமிழகத்தில் ’திராவிட மகாஜனச் சபையின்’ மாநாட்டை நீலகிரியில் நடத்தியிருக்கிறார். தமிழகத்தில் தந்தை பெரியாருக்கும், இந்திய அளவில் புரட்சியாளர் அம்பேத்கருக்கும் முன்னோடியாக இருந்திருக்கிறார். தமிழகத்தில் ஆதி திராவிடர் இயக்கம். பகுத்தறிவு இயக்கம், பிராமணரல்லாதர் இயக்கம் ஆகியவற்றுக்குச் சக்தி வாய்ந்த ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் அயோத்திதாசப் பண்டிதர் ஆவார்.

தந்தை பெரியாருக்கு முன்னோடி

தமிழகத்தில் முதன்முதலில் பகுத்தறிவுச் சிந்தனையோடு பேசியும், எழுதியும் வந்தவர் அயோத்திதாசப் பண்டிதர். இவருக்குப் பின்னர்த் தந்தை பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவுச் சிந்தனையோடு செயல்பட்டார். இந்தியாவில் இருக்கின்ற மதங்களிலிருந்து பவுத்தமும் சமணமும் வேறுபட்டு மனிதர்களைச் சிந்திக்கத் தூண்டின. அயோத்திதாசப் பண்டிதர் பவுத்தத்தைக் கையில் எடுத்துப் பகுத்தறிவுச் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சென்றார். தந்தை பெரியார் எவையெல்லாம் மக்களுக்குச் சமூக விடுதலையைக் கொடுக்கும் என்று பேசி, எழுதி வந்தாரோ அவற்றையெல்லாம் அயோத்திதாசப் பண்டிதர் தனது காலத்திலேயே ‘தமிழன்’ இதழில் எழுதியுள்ளார். பகுத்தறிவுக் கொள்கை என்ற விதையைத் தந்தை பெரியாருக்கு முன்பே தமிழ் மண்ணில் விதைத்தவர்.

தந்தை பெரியார்
தந்தை பெரியார்

தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுக்க மனித நேயத்திற்காகவும் மதம் கடந்த மனித ஒற்றுமைக்காகவும் போராடியவர். மூடநம்பிக்கைக் கருத்தியல்களைக் களையெடுக்கவும், மூட நம்பிக்கையின் தன்மைகளை மாற்றவும், சாதியற்ற சமூகத்தைக் கட்டமைக்கவும், பெண் விடுதலைக்கும், சமத்துவத்திற்கும், சகோதரத்திற்கும், அறிவியல் மனப்பான்மையுடன் அனைத்து மக்களும் தங்களின் வாழ்க்கை முறையினை உயர்த்திக்காட்ட வேண்டும் என்று பாடுபட்டவர். ”என் பகுத்தறி பிரச்சாரத்துக்கும், சீர்திருத்தக்கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாப் பண்டிதர் தான்” என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய பெரியார் இம்மண்ணில் பிறப்பதற்கு 34 ஆண்டுகளுக்கு முன்பே பகுத்தறிவுச் சிந்தனையுடனும், பன்முக அறிவோடும், அறிவியல் சார்ந்த சிந்தனையுடனும், இலக்கிய நயத்தோடும், எளிமையோடும் பிறந்த அயோத்திதாசப் பண்டிதர் தந்தை பெரியாருக்கு முன்னோடியாக இருந்திருக்கிறார். திருக்குறளுக்கு உரை எழுதியவர் உரை முழுவதும் முடிப்பதற்கு முன்பே 1914 ஆம் ஆண்டு மே 5 ஆம் நாள் மறைந்தார்.

அயோத்திதாசப் பண்டிதரின் பெயரும் புகழும்

அயோத்திதாசப் பண்டிதருக்குப் பிறகு அவர் கொள்கைகளை எடுத்துச் செல்வதற்குச் சரியான தலைவர்கள் இல்லை. அவருடைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அறிவர் தொல். திருமாவளவன் தமிழ்நாடு முழுவதும் எடுத்துச்சென்றார். ஒவ்வொரு ஆண்டும் அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் விருது வழங்கி வருகின்றார். அயோத்திதாசப் பண்டிதரின் புகழைப் போற்றும் வகையில் அரசு சார்பில் 2005ஆம் ஆண்டு தாம்பரத்தில் அயோத்திதாசப் பண்டிதருக்கு ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டது. அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

எழுத்தாளர் முனைவர் ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போது (27,05,2006) அன்று சட்டப்பேரவையில் ஆற்றிய உரையில், ”100 ஆண்டுகளுக்கு முன்னே ‘தமிழன்’ என்று பெயரிட்டு வார இதழை நடத்தி, நமது தமிழ்ச் சமூகம் பெருமைப்படக் காரணமாக இருந்த அயோத்திதாசப் பண்டிதருக்கு முதல்வர் அவர்கள் தான் முன்முயற்சி எடுத்து அஞ்சல் தலையை வெளியிட்டார்கள். அந்தப் பெருமையின் தொடர்ச்சியாக, அயோத்திதாசருக்கு ஒரு சிலையை நிறுவ வேண்டும் என்றும், தமிழ்ப் பல்கலைக்கழகத்திலே அவரது பெயரிலே ஓர் இருக்கையை ஏற்படுத்தி, தமிழ், பவுத்தம் பற்றிய ஆய்வுகள் நடத்துவதற்கு வழிவகைகள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்” இது வரையில் தமிழ்நாடு அரசு தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை. பிற்காலத்தில் அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் இருக்கை அமைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கலாம்.

அயோத்திதாசப் பண்டிதர் நடத்திய ‘ஒரு பைசாத் தமிழன்’ இதழின் நூற்றாண்டு விழாவை, 2008ஆம் ஆண்டு சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் அன்றைய முதல்வர் முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதி தலைமையில் மிகப்பெரிய அளவில் அரசு விழாவாகக் கொண்டாடினர். 2008ஆம் ஆண்டு அயோத்திதாசப் பண்டிதரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன. அவரின் வாரிசுகளுக்குப் பத்து லட்சம் ரூபாய் நிதியும் வழங்கப்பட்டது.

அயோத்திதாசப் பண்டிதர்2019ஆம் ஆண்டு, சமத்துவம், பொதுவுடைமை, தமிழியல் போன்ற துறைகளில் முத்திரை பதித்தவர்களுக்கு, ‘அயோத்திதாசப் பண்டிதர் விருது’ வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் விருது வழங்கி வருகின்றது. 2021 ஆம் ஆண்டு அயோத்திதாசப் பண்டிதருக்கு மணிமண்டபம் அமைப்பதற்குத் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதனை நிறைவேற்றும் வகையில் 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அயோத்திதாசப் பண்டிதருக்கு முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் திறக்கப்பட்டது. அயோத்திதாசப் பண்டிதரின் ஆய்வுகள், இலக்கியப்பணிகள், பகுத்தறிவுச் சிந்தனைகள், கொள்கைகள், கோட்பாடுகள் அனைத்தும் ஆவணங்களாக நின்று நிலைத்து விடாமல் இளம் தலைமுறையினருக்கும், தமிழர்களுக்கும் கொண்டு சேர்ப்பது நம் கடமையாகும்.

முனைவர் சீமான் இளையராஜா,  உதவிப் பேராசிரியர் தமிழ்ப் பல்கலைக்கழகம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.