இது என் துயரம் அல்ல; இந்திய மக்களின் துயரம்…

0

இது என் துயரம் அல்ல; இந்திய மக்களின் துயரம்…

அந்தக் கர்ண கொடூரம் என் உடல் மீதாக நிகழ்த்தப்பட்ட போது எனக்கு வயது இருபது. கையிலே மூன்று வயது சிறுமி என் மகள் சலேஹா. என் மகளை என்னிடமிருந்துப் பிடுங்கி ஏதோ சிதறு தேங்காய் உடைப்பது போல என் கண்ணெதிரே ஒரு பாறையில் ஓங்கி அடித்து அடித்துப் படுகொலை செய்கின்றனர் அந்தப் பாவிகள். நான் அப்போது ஐந்து மாத கர்ப்பிணி வேறு. நான் கர்ப்பிணி எனக் கதறியும் அந்தக் கொடுங்கோலர்கள் என்னைக் குதறிக் குதறி எறிந்து விட்டார்கள். என் வாழ்நாளில் என்னால் மறக்கவே இயலாத கர்ண கொடூரம் அது.” என்கிறார் மகாத்மா காந்தி பிறந்த மண் மட்டுமல்ல பாஜக ஆட்சி செலுத்தி வரும் குஜராத் மாநிலத்தின் பில்கிஸ் பானு.

https://businesstrichy.com/the-royal-mahal/

இருபத்தியோரு ஆண்டுகளுக்கு முன்னால் பாஜகவின் குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த படு பயங்கரக் கொடூரம் அது. ஆம். 2002 பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி அன்று குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெறுகிறது. அதில் பல நூற்றுக்கணக்கானோர் உயிர்ப் பலி ஆகி விடுகின்றனர். அதன் தொடர்ச்சியாக ஒரு வாரம் பத்து நாட்களுக்கு கலவர பூமியாக மாறிப் போகிறது குஜராத் மாநிலம். அந்த நேரத்தில் தனது பெற்றோர் வசிக்கும் கிராமத்துக்கு, தனது மூன்று வயது மகளைத் தூக்கிக் கொண்டு வந்து சேர்கிறார் பில்கிஸ் பானு.

பில்கிஸ் பானு குடும்பம்
பில்கிஸ் பானு குடும்பம்

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

ஆமதாபாத் அருகே உள்ள ரந்திக்பூர் கிராமம். கலவரம் கொழுந்து விட்டு எரிகிறது. வீடுகளில் இருந்து தப்பித்து உயிர் பிழைத்தால் போதும் என்று எல்லோரும் சிதறி ஓடுகிறார்கள். பில்கிஸ் பானுவின் பெற்றோர்களும் உறவினர்களும் ஒரு பள்ளிவாசலில் புகுந்து கொள்கின்றனர். அங்கிருந்து ஒரு பள்ளிக்கூடத்தில் சென்று அடைக்கலம் புகுகின்றனர். அங்கும் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்தவுடன், அருகே ஒரு மலையடிவாரத்துக்கு ஓடிச் செல்கின்றனர். அந்தக் காட்டுமிராண்டிக் கும்பல் அங்கும் வந்து விட்டது.

2002 குஜராத் கலவரம்
2002 குஜராத் கலவரம்

உற்றுப் பார்த்தால் அனைவரும் பில்கிஸ் பானுவின் பெற்றோர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பில்கிஸ்க்கு சின்ன வயதில் இருந்தே நன்கு அறிமுகம் ஆனவர்கள். பில்கிஸ் வீட்டுக்கு வந்து தினசரி பால் வாங்கிச் சென்றவர்கள். அதில் ஒருவர் பில்கிஸ் பானுவின் அப்பாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரும் இருந்தார். எல்லோரும் தெரிந்த முகமாக இருக்கவும் நல்ல பாதுகாப்பு தான் நமக்கு என்று அந்த நேரத்தில் நினைத்திருந்தனர். ஆனால், நடந்ததோ வேறு.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்.

ஏதோவொரு தோற்றத்துக்கு மனிதர்களாக வந்திருந்த அந்தப் பத்துப் பதினைந்து நபர்களும், சட்டென மிருகங்களாக மாறிப் போனார்கள். துப்பாக்கியால் சடசடவெனச் சுட்டுத் தள்ளினார்கள். அங்கிருந்த பதினேழு நபர்களில் பதினான்கு பேரைக் காட்டுமிராண்டித்தனமாகச் சுட்டுக் கொன்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஆங்காங்கே சுருண்டு விழுந்து இறந்து போயினர். எஞ்சியிருந்தது மூன்று வயது மகளுடன் பில்கிஸ் பானு மற்றும் ஏழு, நான்கு வயது சிறுவர்கள் என நான்கு பேர் மட்டுமே. திடீரென பில்கிஸ் பானு கையில் இருந்த மூன்று வயது சிறுமியைப் பிடுங்கினார்கள். அதன் இரண்டு கால்களையும் சேர்த்து இணைத்துப் பிடித்துக் கொண்டு சிறுமியின் உடலையும் தலையையும் ஒரு பாறை மீதாக ஓங்கி ஓங்கி அடித்துக் கொன்று விடுகிறார்கள். பில்கிஸ் பானுவின் கண்ணெதிரே அந்தக் கொடூரம் நடந்து முடிந்தது.

 

அந்தப் பதினோரு பேரும் இத்தனைப் பிணக் குவியல்களுக்கு இடையேயும் உடல் நடுங்கி நின்று கொண்டிருந்த பில்கிஸ் பானுவினை நெருங்கிச் சூழ்ந்து வந்தனர். நான் ஐந்து மாதக் கர்ப்பிணி என்று சூழ்ந்து நின்ற அத்தனை பேரிடமும் எவ்வளவோ கெஞ்சினாள். அனைவரும் முற்றிலுமாகக் காது கேளாத செவிடர்களாகிப் போயினர். அந்தப் பதினோரு நபர்களும் மிருக வெறி கொண்டு, பில்கிஸ் பானு என்கிற கர்ப்பிணி உடல் மீதாக கூட்டுப் பாலியல் வன்முறையினைக் கட்டவிழ்த்து அரங்கேற்றி விட்டு, அந்த இடத்தில் இருந்து அகன்று செல்கின்றனர்.

முழு நிர்வாணமாகக் கிடந்த அந்தத் தும்பைப் பூவுக்கு, ஒரு ஆதிவாசிப் பெண் வந்து தான் துணி கொடுத்து உடுத்தி விடுகிறாள். அருகே இருக்கும் காவல் நிலையத்துக்குச் சென்று, அந்தப் பதினோரு நபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுச் சொல்லி புகார் மனு தருகிறாள் பில்கிஸ் பானு. “புகாரில் சுட்டியுள்ள அவர்கள் அனைவரும் உயர் சாதியினர். அவர்கள் அவ்வாறு இயங்கியிருக்க வாய்ப்பே இல்லை.” என்று கூறி பில்கிஸ் பானுவை விரட்டி அடித்து புகாரினைப் பெற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார் சோமாபாய் கோரி என்கிற போலீஸ்காரர். பின்னாட்களில் அவர் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்படுகிறார்.

பாலியல் வன்முறையில் ஈடுப்பட்ட 11 குற்றவாளிகள்
பாலியல் வன்முறையில் ஈடுப்பட்ட 11 குற்றவாளிகள்

பில்கிஸ் பானுவின் கணவர் யாகூப் ரசூல் என்பவரும், மனம் தளராமல் தன் மனைவியுடன் இணைந்து பக்கபலமாக நின்று பல்வேறு சட்டப் போராட்டங்களை முன்னெடுக்கிறார். இது போன்று பாதிக்கப்பட்டோருக்கு எப்போதுமே துணை நின்று போராடுகின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கமும் வேறு சில சமூக நல அமைப்புகளும் இது குறித்து உரத்துக் குரல் கொடுத்தன.

அதே நேரத்தில் குஜராத் அரசு மருத்துவர் ஒருவர், “பில்கிஸ் பானு மீதாகக் கூட்டுப் பாலியல் வன்முறை நிகழ்த்தப்படவே இல்லை.” என்று மருத்துவச் சான்றிதழ் அளித்த கேவலமான அருவெறுப்பான நாடகமும் அரங்கேறியது. அதுபோலவே இதனை எல்லாம் மறுத்து குஜராத் மாநில அரசின் உள்துறை செயலாளர்களில் ஒருவர் எழுதி வைத்த குறிப்பு, குஜராத் அரசின் அந்தப் போலீஸ்காரர் வார்த்தைகளைக் கொண்டே அமைந்திருந்தது. “இதுபோன்ற கூட்டுப் பாலியல் சம்பவங்களில் உயர் சாதியினர் ஈடுபடுவதற்கு வாய்ப்பே இல்லை.” என்று குறிப்பு எழுதி இருந்தார் அந்த மாநில அரசின் உள்துறை செயலாளர்களில் ஒருவர்.

இதுபோன்றதொரு கீழ்மையான வாதப்பிரதிவாதம் சுமார் ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டிலும் அரங்கேறியது. ஆம். 1968ல் டிசம்பர் 25ஆம் தேதியன்று நாகை மாவட்டம் கீழ வெண்மணியில், அரைப் படி நெல் கூலி உயர்வு கேட்டமைக்காக, பட்டியிலின உழுகுடி வேளாண் மக்கள் நாற்பத்தி நான்கு பேர்கள், இராமையா என்பவரின் குடிசைக்குள் பூட்டி வைத்து உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். அப்போது திமுக ஆட்சி. பேரறிஞர் அண்ணா முதல்வர். தமிழக சட்டப் பேரவைக்குள் பூகம்பம் போல வெடித்துக் கிளம்பியது. கோபாலகிருஷ்ண நாயுடு என்பவர் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
கீழ வெண்மணி குற்றவாளி களுக்கு வெறும் பத்து ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம். அந்தத் தீர்ப்பில் இடையில் வந்த வாசகம் தான் மிகவும் விசித்திரமானது. “குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முக்கிய நபர்களில் சிலர் அந்தப் பகுதியின் மிகப் பெரிய மிட்டா மிராஸ்கள். பெரிய அளவில் நிலச்சுவான்தார்கள். அவர்களே தங்களின் கைகளில் பெரிய சீமெண்ணெய் டின்களைத் தூக்கிச் சென்று அந்தக் குடிசையினைத் தீயிட்டுக் கொளுத்தி இருப்பார்கள் என்பது நம்பும்படியாக இல்லை.” இது போன்றதொரு அச்சு அசலான வார்த்தை தான் ஐம்பத்து ஐந்து ஆண்டுகள் கடந்தும் குஜராத் மண்ணில் எதிரொலித்து உள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சரி. நாம் பில்கிஸ் பானு சம்பவங்களுக்கு வந்து விடுவோம். தேசிய மகளிர் உரிமைகள் ஆணையம் வழியாக உச்ச நீதிமன்றத்துக்கு இந்தச் சம்பவம் கொண்டு செல்லப்படுகிறது. உச்ச நீதிமன்றம் இதனை சிபிஐ வசம் ஒப்படைக்கின்றது. அதன் பின்னரே குஜராத் மாநில அரசு அந்தப் பதினோரு நபர்களையும் தேடிப் பிடித்துக் கைது செய்கிறது. குஜராத் மாநில அரசின் மீது நம்பிக்கையற்று இந்த வழக்கினை மகாராஷ்டிரா மாநிலத்துக்குக் கொண்டு செல்கின்றனர் பில்கிஸ் பானுவும் அவரது கணவரும். ஒரு ஆகச் சிறந்த போராளியாக ஆரம்பம் முதல் தொடர்ந்து போராடி வருகிறார் பில்கிஸ் பானு.

மகாராஷ்டிரா உயர் நீதிமன்றம் 2008ல் குற்றவாளிகள் அனைவர்க்கும் ஆயுள் தண்டனை வழங்குகிறது. தீர்ப்பில் பில்கிஸ் பானுவுக்கு குஜராத் அரசு ஐம்பது லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவருக்கு அரசுப் பணியும் ஒரு வீடும் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்றும் உத்தரவு இடுகிறது. பில்கிஸ் பானுவுக்கு குஜராத் அரசு ஐம்பது லட்ச ரூபாய் வழங்கி விட்டது. ஆனாலும் அவருக்கு அரசுப் பணியும் வீடும் இன்னமும் வழங்கப்பட இல்லை.

இந்நிலையில் குற்றவாளிகள் சிறைக்குள் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தனர். பதினான்கு ஆண்டுகள் கழித்து 2022ல் குஜராத் மாநில அரசு சிறப்பு விதிகளைப் பயன்படுத்தி சிறையிலிருந்து அந்தப் பதினோரு நபர்களையும் விடுதலை செய்கிறது. அவர்கள் விடுதலை செய்யப்பட்ட அதே நாளில் சிறை வாசலில் அந்தப் பதினோரு நபர்களுக்கும், அவர் களின் ஆதரவாளர்கள் மாலை போட்டு மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி ஊருக்குள் ஊர்வலமாக அழைத்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்தது எந்த வகையிலும் நீதிக்கு முரண் ஆனது என்று, மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்கிறார் பில்கிஸ் பானு.

விடுதலையான குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு
விடுதலையான குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு

2024 ஜனவரி மாதம் 08ஆம் தேதியன்று குஜராத் மாநில அரசியன் உத்தரவினை ரத்து செய்து தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம். “குஜராத் மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை. பெண்கள் நம் கண்ணியத்துக்கு உரியவர்கள். அவர்கள் நலன் நம்மால் தான் காக்கப்பட வேண்டும். அவர்களுக்கான பாதுகாப்பு நாம் தான் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பதினோரு நபர்களும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் வந்து சரண் அடைய வேண்டும்.” என்று தீர்ப்பு அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இதற்குள் அந்தப் பதினோரு நபர்களும் தலைமறைவாகி விட்டனர். இனிமேல் என்ன நடக்கும்? சம்பந்தப்பட்ட அந்தப் பதினோரு குற்றவாளிகளையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து விடும் குஜராத் மாநில அரசு. “என் கண்ணெதிரே என் அம்மா அப்பா உட்பட பதினான்கு பேரைச் சுட்டுக் கொன்றனர். என் மூன்று வயது மகளைப் பறித்து ஏதோ சிதறு தேங்காய் உடைப்பது போல உடைத்துக் கொன்றனர்.

மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள்.
மாலை மரியாதையுடன் குற்றவாளிகள்

நான் ஐந்து மாதக் கர்ப்பிணி என்றும் இரக்கம் காட்டாமல், என்னைப் பதினோரு நபர்களும் என் மீதாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடத்தி என்னைச் சீரழித்தார்கள். அவர்கள் அனைவரையும் வாழ்நாள் முழுதுமாக சிறையில் காலம் கழிக்க வைப்பதே அந்தக் கொடூர நிகழ்வுகளுக்கான உரிய தண்டனையாகும். அதுவரை நான் ஓய மாட்டேன். இதனை நான் ஒரு அம்மா அப்பாவுக்காகப் பிறந்த பில்கிஸ் பானுவாகப் போராடவில்லை. இதுபோன்றதொரு சம்பவம் இனி எந்தப் பெண்ணுக்கும் நிகழக் கூடாது எனும் உணர்வில் இந்தியாவின் மகளாகப் போராடி வருகிறேன்.” என்கிறார் மகாத்மா காந்தி பிறந்த மண் மட்டுமல்ல பாஜக ஆட்சி செய்து வருகின்ற குஜராத் மாநிலத்தின் பில்கிஸ் பானு.

இது ஒரு மோசடி செயல் ! கடுமையாகச் சாடிய நீதிபதிகள் !
குஜராத் அரசு குற்றவாளிகளுக்கு உடந்தை யாகச் செயல்பட்டது. இந்தப் பயம்தான் வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக் காரணமாக இருந்தது. குஜராத் அரசின் இந்த நடவடிக்கை அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும் அதிகாரத் துஷ்பிரயோகத்துக்கும் ஒரு உதாரணம். விதிகளை மீற நீதிமன்றத்தின் உத்தரவுகளையே பயன்படுத்திக் குற்றவாளி களுக்கு நிவாரணம் அளித்துள்ளன. செல்லாத உத்தரவின் மூலம் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உண்மைகளை மறைத்து, தவறான கருத்துகளை உருவாக்கிக் குஜராத் அரசு குற்றவாளிகள் விடுதலையைப் பரிசீலிக்கும் உத்தரவு பெறப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விடுதலை குறித்துக் குஜராத் பரிசீலிக்கலாம் என உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இது ஒரு மோசடி செயல்.

பில்கிஸ்பானு வன்புனர்வு வழக்கு கடந்து வந்த பாதை!
27 பிப்ரவரி 2002 அன்று காலை குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ராவில் ரயில் எரிப்பு நிகழ்ந்தது. அயோத்தியிலிருந்து திரும்பிய 59 இந்து பக்தர்கள் மற்றும் கரசேவகர்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி விரைவு வண்டிக்குள் தீயில் கொல்லப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம், அருகிலுள்ள மசூதியிலிருந்து வரவழைக்கப்பட்ட உள்ளூர் முஸ்லீம் கும்பலாகும் என்று கருதிய இந்து பக்தர்கள் குஜராத் கலவரத்தை நடத்தினர். அப்போது மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்தவர் தற்போதைய ஒன்றிய அரசின் தலைமை அமைச்சராக உள்ள மோடி அவர்கள்தான்.

சில வாரங்கள் தொடர்ந்த இந்தக் கலவரத்தில் பல நூறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்தக் காலகட்டத்தில் பல மோசமான சம்பவங்களும் நடைபெற்றது. அதில் பில்கிஸ் பானுவுக்கு நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்பத்தில் இருந்த 3 வயதுக் குழந்தை உட்பட 14 பேர் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜால் புயா.
தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜால் புயா.

இதில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணை குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கும் மாற்றப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜனவரி 21, 2008 அன்று, மும்பையில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் 11 பேரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

“நாங்கள் 14 ஆண்டுகளைச் சிறையில் கழித்துவிட்டோம். எங்களை விடுதலை செய்யவேண்டும்” என்று 2022 ஆம் ஆண்டில் குற்றவாளிகள் 11 பேரும் குஜராத் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, 11 பேரையும் முன்விடுதலை செய்யலாம் என்று விடுதலை செய்யப்பட்டனர். இந்து மதம் சார்ந்தவர்கள் மாலை அணிவித்து, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த முன்விடுதலையை எதிர்த்துப் பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவருடன் மேலும் பலரும் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நீதிபதிகள் பி வி நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் விசாரித்து வந்த நிலையில்தான் தற்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள், அவர்கள் மரியாதைக்குரியவர்கள் அவர்களின் மரியாதை முக்கியம் என்று தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கில் குற்றவாளிகளை முன் விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். குற்றவாளிகள் 12 நாளில் சிறைக்குச் செல்லவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

– ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.