சிறுவர்களின் உளவியலை பாதிக்கும் அழகியல் மதிப்பீடுகள் !
சிறுவர்களுக்கான கதைகள் எப்படி இருக்க வேண்டும்? தொடர் – 05
அழகியல் குறித்த மனித அளவீடு :
உலகில் உள்ள பெரும்பாலான மனிதர்கள் இந்த அழகியல் அளவீட்டில் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். இயற்கையாகவே அமைந்த உடல் கூறுகளை வைத்து மதிக்கப்படுவது குறித்த கதையாடல்கள் நிச்சயம் தேவை.
குறிப்பாக, தமிழர்களின் இயல்பான நிறம் என்பது நம்முடைய தட்பவெட்ப அடிப்படையிலும், மரபணு காரணமாக இயற்கையாக அமைந்தது. ஒரு குழந்தை பருமனாக, ஒல்லியாக மிக உயரமாக மிகக் குட்டையாக என சமூக அளவீடுகளில் இருந்து மாறி இருந்தால் அவர்களை இச்சமூகம் சற்று ஒதுக்கி வைத்து மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கிறது. மேலும், இவர்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும் சூழல் ஏற்படுகிறது. கூந்தல் என்றால் மிக நீளமாக இருக்க வேண்டும். மூக்கு, கண், காது, வாய் போன்றவை இந்தந்த அளவில் இருக்க வேண்டும். இதுதான் அழகு என்பது குறித்தும், முகத்தில் ஏதேனும் மாசு மரு வந்தால் அதை அழகு அற்ற கூறுகளாகவும், அதனால் மனதளவில் பெரிய விடயமாகக் கொண்டு, அதை சரி செய்ய விலை உயர்ந்த வேதிப்பொருள் நிறைந்த அழகியல் சாதனங்களை செலவு செய்து வாங்கி பூசிக்கொள்ள வேண்டும் என்ற விளம்பர மாயைக்குள் சிக்கிக் கொள்கின்றனர்.
கார்ப்பரேட் வியாபாரங்களால் சினிமா திரைகளில் தொடர்ச்சியாக வெளிவரும் விளம்பரங்களால் சுய அடையாளத்தை மறந்து, அதில் வரும் காட்சி பிம்பத்தைப் போல, குறிப்பிட்ட அளவீடு உள்ளவர்கள் கொண்டாடப்படுவதும், அப்படி இல்லை என்றால் புறக்கணிக்கப்படுவதும் மனிதர்களின் சிந்தனையில் ஆழமாகக் கற்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிறு வயதிலேயே தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மையால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இது போன்ற நிறம், தோற்றம் சார்ந்த அளவீடுகள் சிறுவர்களின் உளவியல் தன்மையைப் பாதிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.
உடல் கூறுகளும் நிறங்களும் இயற்கையின் அடிப்படையில் படைக்கப்பட்டது. நம்முடைய எண்ணங்களும், நாம் மற்றவருடன் பழகும் விதம், நம்முடைய விடா முயற்சி, உழைப்பு, அறிவு ஆகியவையே சிறந்த அழகு என்பதைக் குறித்தும், சினிமா விளம்பரங்கள், வியாபாரங்கள், சில இழிவான மனிதர்களின் எண்ணங்கள் போன்றவையே இந்த உடல் சார்ந்த அளவீடுகளை சமூகத்தில் செயற்கையாக உருவாக்கியது என்பது குறித்த கதைகள் சிறுவர்களிடையே எழுதப்பட வேண்டும்.

அப்போதுதான் மனிதனை மனிதனாக மதிக்கும் ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை நாம் உருவாக்க முடியும். இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. அப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான சமூகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து சிறுவர்களிடையே கதைகளோடு உரையாடுவோம். அடுத்த வாரம் சிறுவர்களின் தன்னம்பிக்கையை சிதைக்காத கதைகள் குறித்து பேசுவோம்.
— கார்த்திகா கவின்குமார்- எழுத்தாளா், கதைசொல்லி







Comments are closed, but trackbacks and pingbacks are open.