அரசு அங்கன்வாடியில் கலெக்டர் மகளும்; மேற்கூரையில்லாத அங்கன்வாடியும் !

0

அரசு அங்கன்வாடியில் ஆட்சியரின் மகளும்; மேற்கூரையில்லாத அங்கன்வாடியும்!

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அங்கன்வாடி பணியாளர்கள் தயார் செய்து அளிப்பதுடன், ஆடல், பாடலுடன் இணைந்த கல்வியை கற்பித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 54,439 அங்கன்வாடி மையங்களில் சுமார் 25 இலட்சம் குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

இவற்றுள் ஒன்றுதான் நமது கவனத்திற்கு வந்த, கிருஷ்ணகிரி ஒன்றியம் சிக்க பூவத்தி ஊராட்சிக்கு உட்பட்ட மூங்கில் பட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம். சுமார் 20 குழந்தைகள் அன்றாடம் வந்து செல்லும் இந்த அங்கன்வாடிக்கு முறையான கட்டிடம் இல்லை. அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை அடிக்கடி இடிந்து விழுந்ததையடுத்து, தற்காலிகமாக தனியார் வாடகை கட்டிடத்திற்கு மாற்றியுள்ளனர். காலப்போக்கில், அதையே வழக்கமாக்கிவிட்டனர். கடந்த இரண்டு வருடங்களில் மட்டும், கிட்டத்தட்ட ஆறு இடங்களுக்கும் மேல் இந்த அங்கன்வாடி மையங்களை மாற்றிவிட்டனர்.

மூங்கில் பட்டி - இளைஞர்கள்
மூங்கில் பட்டி – இளைஞர்கள்
- Advertisement -

- Advertisement -

அடுத்தவர்களுக்கு மாதா மாதா வாடகை கொடுப்பதற்கு பதிலாக, அரசுக்கு சொந்தமான அங்கன்வாடி மையத்தை சீரமைத்துக்கொடுத்துவிடலாமே? எனக் கேள்வியெழுப்புகின்றனர், இதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களான கோவிந்தராஜ், சர்வேசன், பெருமாள் ஆகியோர். இதுகுறித்து பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதோடு, பட்டியலின பகுதி மக்கள் வசிப்பிடத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி என்பதால்தான் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள்.

4 bismi svs

இதே பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி, எம்.எல்.ஏ. அசோக் குமார் மற்றும் ஊராட்சித் தலைவர் ஆகியோர் அனைவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். அடுத்து பெரும்பான்மை சமூகத்தையும் சார்ந்தவர்கள். பட்டியலின மக்களின் கோரிக்கை என்பதோடு, திமுகவுக்கு ஓட்டளித்தவர்கள் என்பதாலும் எங்களை புறக்கணிக்கிறார்களா? எனவும் கேள்வியெழுப்புகிறார்கள், அந்த இளைஞர்கள்.

அங்கன்வாடிகளின் பரிதாப நிலை
அங்கன்வாடிகளின் பரிதாப நிலை

இந்த விவகாரம் தொடர்பாக, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி ) வந்தானா அவர்களை அங்குசம் செய்திக்காக தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தோம் கடைசி வரை நமது அழைப்பை ஏற்று பதிலளிக்கவில்லை.

இதில், வேடிக்கை என்னவென்றால் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரான சரயு அரசு அங்கன்வாடி மையங்களை நேசிக்கும் அதிகாரி என்பதுதான். கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட நகர் புறங்களிலும், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, பர்கூர், ராயக்கோட்டை, தளி என கிராமப்புற மற்றும் மலையை ஒட்டிய கிராமப்புற பகுதிகளிலும் அடிக்கடி திடீர் ஆய்வுகளையும் மேற்கொண்டிருக்கிறார். அதுபோல, மூங்கில்பட்டிக்கும் கலெக்டர் நேரில் வரமாட்டாரா? அப்போது நமது கோரிக்கையை அவர்முன் வைக்க மாட்டோமா? என ஏங்கித்தவிக்கின்றனர், மூங்கில்பட்டி கிராமத்தினர்.

 

மிக சமீபத்தில், கிருஷ்ணகிரி ஜின்னா சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை திடீர் ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தார். அங்கன்வாடி மையத்தின் அடிப்படை வசதிகள், குழந்தைகளுக்குப் பரிமாறப்படும் உணவுகளையெல்லாம் ஆய்வு செய்து முடித்துக் கிளம்பும்போது, நெல்லி என்ற பெயர் கொண்ட குழந்தை மட்டும் ஆட்சியருடன் செல்ல அடம்பிடித்தது. அக்குழந்தையை ஆரத்தழுவி சமாதானப்படுத்தினார். காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய அந்தக் குழந்தை நெல்லி வேறுயாருமல்ல; ஆட்சியர் சரயுவின் குழந்தைதான் அது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு அவர்கள் தன் குழந்தை பயிலும் அங்கன்வாடி மையத்தில்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு அவர்கள் தன் குழந்தை பயிலும் அங்கன்வாடி மையத்தில்

ஆட்சியராக இருந்தபோதும் தனது பிள்ளையை அரசு நடத்தும் அங்கன்வாடி மையத்தில் சேர்த்த முன்னுதாரணமான ஆட்சியரின் சொந்த மாவட்டத்தில் தான் மூங்கில்பட்டி கிராமமும் அமைந்திருக்கிறது என்பது என்னே ஒரு முரண்நகை!

– மணிகண்டன்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.