”சமகால சித்தர்” ‘ஐபெட்டோ’ அண்ணாமலை!
உரக்கக்கேட்கும் உரிமைக்குரல் – ‘ஐபெட்டோ’ அண்ணாமலை!
அரசுப்பள்ளி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் தொடங்கி, பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக குளறுபடிகள் குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கல்வித்துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்தான பகிரங்கமான அரசியல் விமர்சன அறிக்கைகள் வழியே அங்குசம் வாசகர்களுக்கு மிகவும் பரிட்சயமானவர்தான் ஐபெக்டோ அண்ணாமலை.
1967 அக்டோபர் மாதம் தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் சுவாமிமலைக்கு அருகில் உள்ள ஓலைப்பாடியில் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர். திரும்புறம்பயம் புத்தர் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகி, பின்னர் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், காசான்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இளநிலை ஆசிரியர் பணியிட மாற்றம் பெற்று; அங்கேயே தொடர்ந்து 32 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர், ஐபெக்டோ அண்ணாமலை.
![ஐபெக்டோ அண்ணாமலை](https://angusam.com/wp-content/uploads/2024/02/545.jpg)
1973 ஆம் ஆண்டு 25 வயதில் ஆசிரியர் சங்கத்தில் திருச்சி மாவட்ட வட்டாரத் தலைவராக தொடங்கியது அவரது பொதுவாழ்வு. 1981 இல் ஆசிரியர் சங்கத்தில் மாவட்ட செயலாளராக; திருச்சி மாவட்ட ஜேக்டீ அமைப்பாளராக; இயக்கத்தில் மாநிலத் தலைவராக; அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் அகில இந்திய செயலாளராக படிப்படியாக முன்னேறி ஆசிரியர் இயக்க வரலாற்றில் தனி முத்திரைப் பதித்தவர் ஆசிரியர் அண்ணாமலை.
38 ஆண்டுகள் ஆசிரியர் பணியை நிறைவு செய்தவர். “இங்கிலீஸ் சார்” என்று மாணவர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். பொதுமக்கள் மத்தியில் ‘பெரிய சார்’ என்ற மதிப்பினைப் பெற்றவர். இயக்கத்தில் ‘தலைவர்’ என்று அறியப்பட்டவர். பணி நிறைவுக்குப் பின்னரும் ஆசிரியர் சங்கத்தின் மூத்த தலைவராக தொடர்ந்து இயங்கி வருபவர். தந்தை பெயருக்கும் முன்னால் ”ஐபெக்டோ” எனும் சங்கத்தின் பெயரே அடைமொழியாக வந்து சேர்ந்ததற்கு பின்னணியில், அரை நூற்றாண்டு அரசியல் பணி அடங்கியிருக்கிறது.
சங்கப் பொதுவாழ்வில் கலைஞர், அன்பில் தர்மலிங்கம், பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், தோழர் கல்யாணசுந்தரம், திருமதி பாப்பா, திரு.உமாநாத், தோழர் டி.கே.ரெங்கராஜன், தோழர் வரதராஜன், கல்வியாளர் வெங்கடேஷ் ஆத்ரேயா ஆகியேராடும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியோடும் நல்ல நட்பு கொண்டவர்.
ஆசிரியர் நலன்களுடன் மாணவர்களின் தொடக்கக் கல்வி முன்னேற்றத்திலும் மிகவும் அக்கறை கொண்டவ்ர். பல்வேறு கருத்துகள் மற்றும் திட்டங்களைச் மிகச் சிறப்பாக அரசுக்குக் கொண்டு செல்வதில் மிகுந்த முனைப்போடு செயல்படுவர். அதே நேரத்தில் அரசிடமும் அதிகாரிகளிடத்திலும் நல்ல நட்பை பேணிவருபவர்.
ஓய்வு பெற்று 17 ஆண்டுகள் ஆனபின்பும், ஓய்வின்றி அலைந்தாலும், தளர்ந்த தேகம் கொண்டாலும் உலர்ந்துபோன உதடாயினும், மலரும் எண்ணங்கள், ஊக்கம் குறையா உழைக்கும் போராளி. வயது இவருக்கு முதுமைத் தரவில்ல. அனுபவ முதிர்ச்சியைத் தந்துள்ளது.
தமிழக ஆசிரியர் கூட்டணி சங்கத்தின் சார்பில் மாதம் இருமுறை இதழான ‘ஆசிரியர் இயக்கக் குரல்’ இதழில் இவரது பங்கு ஈடுஇணையற்றது. செய்திக்கு இவர் சூட்டும் தலைப்புகளே தனித்துவமானவை. தனது கவனத்திற்கு வரும் நல்ல செய்தி, சிறந்த சிந்தனை எந்த இதழில் வெளிவந்து இருந்தாலும் அதை தனது இயக்க இதழில் வெளியிட்டு அனைவரும் படித்து விவாதிக்க வாய்ப்புகளை உருவாக்கி தருபவர். இன்றும் இவரது புலனப்பதிவுகளை ரசித்து வாசிக்கும் வாசகர்களை கொண்டிருப்பவர். 2006 ஆம் ஆண்டு மீண்டும் கலைஞர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தொகுப்பூதிய ஆசிரியர்கள் 52,500 பேரையும் 1.6.2006 முதல் பணி நிரந்தரப்படுத்தி அரசாணைப் பெற்ற வரலாற்று நிகழ்வுக்குச் சொந்தக்காரர்.
அகவாழ்வுக்கு 75 ஆண்டுகள் ஆசிரியர் சங்க வாழ்வுக்கு 50 ஆண்டுகள்
12.02.1948 இல் வா.அண்ணாமலை அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டாரம் காசான்கோட்டையில் பிறந்தார். வா.அண்ணாமலை அவர்களின் 75ஆவது பிறந்தநாள் 2023 ஆம் நாள் திருச்சியில் பவளவிழாவாகவும் இயக்க எழுச்சி நாள் விழாவாகவும் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது.
2003 ஆம் ஆண்டு ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் 999 பேருடன் 8 மாத காலம் நிரந்தரப் பணியில் நீக்கம் செய்யப்பட்ட நிலையில், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பினைப் பெற்று 998 பேரையும் பணியில் சேரவைத்து 999 பேராக பள்ளிப் பணியில் சேர்ந்த பெருமைக்குச் சொந்தக்காரர். 2003 அரசு ஊழியர் – ஆசிரியர்கள் போராட்டத்தில், 999 பேருக்கு பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்த நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்து, “இவர்கள் நீதிபதிகள் அல்ல…. நீதிபாவிகள்… என்று அஞ்சாமல் எழுதியர்.
வழக்கு விசாரணையின்போது, கேள்வி கேட்ட நீதிபதிக்கு நேராகவே, ‘நான்தான் எழுதினேன்’ என்று அஞ்சாமல் பதில் அளித்தவர். அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான ஐபெட்டோவில் இணைத்து தென்னிந்தியாவிலிருந்து வடபுலம் சென்று இந்தியா முழுமைக்கும் ஆசிரியர்களுக்காக குரல் கொடுத்து வருபவர். ஆசிரியர் சமூகத்தின் காவலராக இருந்து வருகிறார். பழக இனிமையானவர். இனம், மொழி, சாதி, மதங்களைக் கடந்து மனிதத்தை நேசித்த விசாலமான மனதுக்குச் சொந்தக்காரர். 4000-க்கும் அதிகமான தமிழ் முறைப்படியான திருமணங்களை நடத்தி வைத்தவர்.
சங்க உறுப்பினர் இல்லத்தில் நடைபெறும் திருமண விழா, புதுமனை புகுவிழா, காதணி விழா போன்ற நிகழ்வுகளிலும் துயரம் மிகுந்த மரண நிகழ்வுகளிலும் தவறாது கலந்துகொண்டு சங்க உறுப்பினர்களின் மகிழ்ச்சியிலும் துயரத்திலும் பங்கெடுக்கும் உற்றத் தோழன் ஐபெக்டோ அண்ணாமலை. வெள்ளை வேட்டி, சட்டை மட்டுமல்ல; பொதுவாழ்வில் ”எளிமை” தான் இவரது அடையாளம். 110 ரூபாய் சைக்கிள் பயணத்தோடு வட்டார அளவில் தொடங்கிய இயக்கப் பொதுவாழ்வு அகில இந்திய அளவிலான தலைவராக உயர்ந்த போதும், சொந்தமாக டி.வி.எஸ்.-50 கூட வைத்துக் கொள்ளாதவர். ‘கடமையைச் செய், உரிமை யை உரக்கக் கேள்’ என்ற வரிகளுக்கேற்ப வாழும் ”சமகால சித்தர்” ஐபெக்டோ அண்ணாமலை!
அங்குசம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறோம்…
– பேரா. தி.நெடுஞ்செழியன்