இருமேனியும் கடல் சங்கு தொழிலும் !
இருமேனியை தேடினேன் … இயற்பெயர் அறிந்தேன் ! பாகம் – 04
இருமேனியின் சரித்திரச் சண்டை, இருமேனியின் விளைச்சல் குறித்து கடந்த தொடரில் பார்த்தோம்.
3.6 இருமேனி ஞானியின் கண்ணோட்டம்
சில வருடங்களுக்கு முன்பு மலேசியாவில் வாழும் எமது ஊர்க்காரரும், சிறந்த தொழுகையாளியும், பண்டாரியுமாகிய வெடிச்சா அமீர்ஹம்ஷாவை ஒரு 30 ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவர் பொதுவாகத் தத்துவமாகவும், ஞானிகள், சூபியாக்கள் அவரிடம் தொடர்புடன் இருப்பதாகவும் கூறுவார். அவர் இருமேனி என்ற பெயர் எப்படி வந்தது என்பதை ஒரு ஞானி போலவே விளக்கம் தந்தார். அதாவது பொதுவாகவே ஒவ்வொரு மனிதனிடமும் இரண்டு மேனிகள் இருப்பதாகவும், ஒன்று இறைவனைத் துதிபாடும் அகமேனி மற்றொன்று உலக இன்பங்களைத் தேடும் புறமேனி. இந்த இரண்டும் கலந்திருந்தால் அதற்கு இருமேனி என்று கூறினார். இருமேனி என்ற பெயர் ஒரு மிகப்பெரிய ஞானி எங்களது ஊருக்குச் சூட்டி இருக்கலாம் அல்லது ஒரு ஞானி அங்கு வாழ்ந்திருக்கலாம் என்பது அவரது விளக்கம். இந்தக் காரணமும் எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இதையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
3.7 கடல் சங்குடன் இருமேனி தொடர்பு
சில ஆண்டுகளுக்கு முன் நான் எமது ஊர் சென்றிருந்த சமயம் இருமேனி நெய்யாரன் சீதக்காதி ராவுத்தரைச் சந்தித்தபோது அவருடைய கீழக்கரை நண்பர் இருமேனி என்ற பெயர் கொண்ட சங்குகள் உங்கள் கடல் பக்கம் கிடைப்பதால் அந்த ஊருக்கு இருமேனி என்ற பெயர் வந்திருக்கலாம் என்று கூறியதாகக் கூறினார். அவருடைய விளக்கம் விளங்கவில்லை அவருடைய நண்பரிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனக்கும் அவர்களது கூற்றில் அவ்வளவு நம்பிக்கையுமில்லை. அதற்கு மேல் அதைப்பற்றி நான் சில மாதங்களாகச் சிந்திக்கவுமில்லை.
ஒரு நாள் நான் மற்ற விஞ்ஞான ஆராய்ச்சிக்காகப் பல ஆங்கிலக் கட்டுரைகளை, புத்தங்களைப் படித்துக் கொண்டிருக்கும் போது சோழ மண்டலச் சங்கு, முத்து மற்றும் பவளம் ஆகியவற்றின் வரலாறு, தொழில்கள் மற்றும் ஏற்றுமதி போன்ற செய்திகளைப் படிக்கும் போது சங்குகள், அவற்றின் வகைகள், எந்தப் பகுதியில் எந்தச் சங்குகள் கிடைக்கின்றன என்பதை ஆங்கிலேயர்கள் பல ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்த கட்டுரைகளைப் பார்த்தேன் படித்தேன். அதில் எமது ஊர் கடற்பகுதியில் வித்தியாசமான சங்குகள் கிடைப்பதாகவும் அறிந்தேன்.மேலும் மேலும் பல கட்டுரைகளைத் தேடித் தேடிப் படித்தேன். அதன்பின் ஒரு முடிவுக்கு வந்தேன், கடல் சங்கிற்கும் இருமேனி என்ற ஊருக்கும் நிறைய தொடர்பு இருப்பதாக நம்பினேன். அதன்பின் சில ஆண்டுகள் தொடர்ந்து நடத்திய தேடலின் முடிவுகளைக் கீழே தொகுத்துச் சுருக்கமாக எழுதியுள்ளேன்.
4.0 கடல் சங்குகளும் அதன் பயன்களும்
நாம் பலமாதிரியான சங்குகளைப் பார்த்திருப்போம். சிறியவை, பெரியவை, தமிழ் மொழியில் எல்லாமே சங்கு தான். ஆனால் ஆலயங்களில் வைத்திருக்கும் அல்லது கோவில்களில் ஊதும் சங்குதான் நான் கூறும் சங்கு. இந்தச் சங்கு பெரும்பாலும் தென் இந்தியாவின் கடலோரங்களில் அதிகமாகக் கிடைக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே சங்கு குளிப்போர், சங்குகளைச் சேகரித்து, வகைப்படுத்தி, உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் வியாபாரம் செய்துள்ளனர்.
இந்த வகையான சங்குகள் இறை வழிபாட்டு பொருளாகவும், சடங்கு, சம்பிரதாயங்களில் மதிக்கக்கூடிய, போற்றக்கூடிய பொருளாகவும் இந்துக்களும் பௌத்தர்களும் மதித்து வந்துள்ளனர். இதற்கு “மதிப்புக்குரிய சங்கு” (Sacred Chank) என்ற பெயரும் உண்டு. இந்தச் சங்குகள் வாழ்க்கையின் வெற்றிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும், நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையும் இந்து மக்களிடம் இருந்து வந்திருக்கின்றன.
இந்திய கடலோரங்களில் நடைபெறும் சங்குத் தொழில் குறித்தும், இதில் இசுலாமியர்களின் பங்கு குறித்தும் அடுத்த தொடரில் பேசுவோம்.
தொடரும் …







Comments are closed, but trackbacks and pingbacks are open.