கார்ல் மார்க்ஸும் கழகமும் – கோவி.லெனின்
கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை 1931ல் முதன் முதலில் தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார். 1950ல் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்த நேரத்தில், சேலம் சிறையில் அரசியல் கைதிகளாக இருந்த கம்யூனிஸ்ட் தோழர்கள் சிறைக்காவலர்களின் கொடூரமானத் தாக்குதலுக்குள்ளாகி 22 பேர் கொல்லப்பட்டபோது, அந்தக் கொடூரத்தை தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களாலும் கடையடைப்பு மறியல் மூலமாகவும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் திராவிடர் கழகத்தினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தினருமாவர்.
கழகக் கொடியில் சரிபாதியாக சிவப்பு நிறத்தை வைத்த பேரறிஞர் அண்ணா, 1951ல் சென்னையில் நடைபெற்ற முதல் மாநாட்டில் தி.மு.க.வை ‘தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி’ என்றார். பெரியாரையும் அண்ணாவையும் சந்தித்திருக்காவிட்டால் “நான் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன்” என்றவர் கலைஞர். நிலச் சீர்திருத்தம், குத்தகைதாரர் நில உரிமைச் சட்டம், ஏறத்தாழ 2 இலட்சம் ஏக்கர் நிலம் பகிர்ந்தளிப்பு, மே தினத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான வாரியம் எனப் பல திட்டங்களைக் கலைஞர் தனது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றினார்.

புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்று பாடிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அதன் அடுத்த வரியாக, ‘பொதுவுடைமை சமுதாயம் திசை எட்டும் சேர்ப்போம். புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்’ என்றார்.
மாபெரும் சிந்தனையாளர் கார்ல்மார்க்ஸ் அவர்களின் கம்யூனிச (பொதுவுடைமை) தத்துவம் சோவியத் யூனியனிலும் பல நாடுகளிலும் பரவி வந்த நிலையில், அதனை மிக எளிமையாக, ‘எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம்நோக்கி நடக்கின்ற திந்த வையம்’ எனத் தனது பாண்டியன் பரிசு குறுங்காப்பியத்தில் புரட்சிக்கவிஞர் பாடினார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திராவிடக் கவிஞரின் அந்த வரிகளையே திராவிட மாடல் அரசின் இலட்சியமாகக் கொண்டு, ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்குடன் செயல்படும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னை நந்தனம் கலைக் கல்லூரி வளாகத்தில் மாமேதை கார்ல் மாக்ஸூக்கு சிலை அமைக்க இருப்பதுடன், புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளான ஏப்ரல் 29 தொடங்கி, கார்ல் மார்க்ஸ் பிறந்தநாளான மே 5 (இன்று) வரை ஒரு வார கால தமிழ் விழாவையும் சிறப்பாக நடத்தியுள்ளார்.
பாசிசத்தின் எதிரி கம்யூனிசம். கம்யூனிசத்தின் தோழர் ஸ்டாலின். அன்றும் இன்றும் வரலாறு தொடர்கிறது.
(இன்று மே 5-மாமேதை கார்ல் மார்கஸ் பிறந்தநாள்)
— கோவி.லெனின், மூத்த பத்திரிகையாளர்.