”இந்த சமூகத்தின் பேரவலமும் பேராபத்தும்” – ’குயிலி’ பட விழாவில் தொல்.திருமா வேதனைப் பேச்சு!
‘பி.எம்.பிலிம்ஸ் இண்டெர்நேஷனல்’ பேனரில் வெ.வ.அருண்குமார் தயாரிப்பில், பி.முருகசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குயிலி’. ஒரு தாயின் வைராக்கியம் மிக்க போராட்டத்தையும் குடிப்பழக்கத்தால் குடும்பங்கள் சீரழியும் அவலத்தையும் பேசும் இப்படத்தில் லிசி ஆண்டனி, ரவிசா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சன் சரவணன் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு—பிரவீன் ராஜ், இசை—ஜூஜு ஸ்மித்.
வெகுவிரைவில் ரிலீசாகும் ‘குயிலி’யின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூன்.02—ஆம் தேதி இரவு நடந்தது. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. டிரெய்லரை வெளியிட வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன், இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், ஸ்ரீஜர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட விழாவில் வரவேற்புரையாற்றினார் தயாரிப்பாளர் அருண்குமார்.
“பொய் சொல்லாதே, திருடாதே, கடின உழைப்பு வெற்றியைத் தரும்னு சொல்லிச் சொல்லி என்னை வளர்த்த எனது பெற்றோர்களுக்கு என் முதல் நன்றி. பல தடைகள் வந்தாலும் அனைத்தையும் உடைத்து இப்படத்தைத் தயாரித்துள்ளோம். இயக்குனர் முருகசாமியின் சமூக அக்கறைக்காகவே இப்படத்தை எனது நண்பர்களின் உதவியுடன் தயாரித்துள்ளோம். இப்படத்தைப் பார்த்து பத்து பேராவது திருந்தினால் அதுவே எங்களுக்கு பெரிய வெற்றி தான்” என்றார்.
நடிகைகள் லிசி ஆண்டனி, தாஷ்மிகா, மியூசிக் டைரக்டர் ஜூஜு ஸ்மித், பாடலாசிரியர் வேட்டவலம் ராமமூர்த்தி ஆகியோர் குடியின் கொடுமையை விளக்கும் இப்படத்தில் பணிபுரிந்ததை பெருமிதத்துடன் குறிப்பிட்டு, இயக்குனர் முருகசாமிக்கும் தயாரிப்பாளர் அருண்குமாருக்கும் நன்றியை தெரிவித்தனர்.
இயக்குனர் முருகசாமி, “பாலாஜி சக்திவேல் சாரிடம் நான் உதவி இயக்குனராக இருந்த போது காரல் மார்க்ஸ், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஆகியோரைப் பற்றி அதிகம் படித்தேன். கூகை திரைப்படக்கல்லூரியின் மூலமாகத் தான் எளிய மனிதர்களின் வாழ்வியலையும் கற்றுக் கொண்டேன். அதன் விளைவு தான் இந்த ‘குயிலி’ என்ற படைப்பு. நான் வாசித்த மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் ஆகிய மூவரும் கலந்த தலைவர் தான் எழுச்சித் தமிழர் அண்ணன் திருமாவளவன். மதுவுக்கு எதிரான அவரது போராட்டம் வெல்லும்” என்றார்.
தனது சிஷ்யனின் திறமை குறித்தும் எளிய மனிதர்களின் பக்கமிருந்து சொல்லும் போது தான் அதில் வீரியம் இருக்கும் என்பதை அழுத்தமாகச் சொன்னார் பாலாஜி சக்திவேல்.
இந்தியா முழுக்க மதுவை ஒழிக்க மரியாதைக்குரிய திருமா அவர்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் கே.ராஜன்.
இறுதியில் பேசிய திருமா, “ வணிக நோக்கத்தில் படம் எடுத்து லாபம் சம்பாரிக்க வேண்டும் என எண்ணாமல் சமூக அக்கறையுடன் இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களையும் இயக்கிய முருகசாமியையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இன்றைக்கு மது மட்டுமல்ல, கஞ்சா போன்ற போதைப் பொருட்களும் நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களிலும் தாராளமாக விற்கப்படுது. இது பேராபத்து. குடிக்கு அடிமையானவன், பேருக்கு ரெண்டு குழந்தைகளைப் பெத்துவிட்டு, குடும்பம் நடத்தும் ஆளுமையை இழந்துவிடுகிறான். இதனால் குடும்ப பாரத்தை மனைவி சுமக்கிறாள். இந்த பேரவலத்தைத் துடைத்தெறிய வேண்டும். இளைஞர்களே குடியில் வீழ்ந்து உங்கள் குடும்பத்தை வீதியில் நிறுத்திவிடாதீர்கள். இந்தியா முழுக்க மதுவை ஒழிக்க முமுமூச்சுடன் களம் இறங்குவேன்” என வீரிய உரையாற்றினார்.
— மதுரை மாறன்.