*வனிதா விஜயகுமார் எத்தனை கல்யாணம் பண்ணினால் உங்களுக்கென்ன கேடு”*– டைரக்டர் வசந்தபாலன் சூடு!
வனிதா ஃபிலிம் புரொடக்சன்ஸ் பேனரில் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கும் படம் ‘மிஸஸ் & மிஸ்டர்’ (Mrs & Mr) இதில் ராபர்ட், ஜோவிகாவின் அம்மா வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகிலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துளனர்.
ஜூனில் வெளியாகும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா மே.25 இரவு சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
விழாவில் பேசியோர்…
*இயக்குநர் வசந்தபாலன்*
“வனிதாவின் போராட்டம் என்பது மிகப்பெரியது.
ஒரு ஆண் ஆயிரம் பெண்களைக்கூட திருமணம் செய்து கொள்ளலாம். அதை பெருமிதமாகவும் பேசலாம். ஆனால் ஒரு பெண் இதனை செய்யும் போது தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளாக்கி, அவரை கேலிக்குரிய பொருளாக மாற்றி பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில், இவற்றையெல்லாம் துணிச்சலாக எதிர்கொண்டு வனிதா விஜயகுமார் போராடிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. அவர் செய்யும் அனைத்து செயல்களுக்கும் ஒரு ஆணாக ஆதரவு தர விரும்புகிறேன்.
இந்த சமூகத்திற்கு சொல்வதற்கு வனிதாவிடம் நிறைய கதைகள் உள்ளன். அவர்கள் பேசுவதற்கும் ஒரு கதை இருக்கிறது.
ஷகிலாவிடம் கதை கேட்டால், இதுவரை உலகத்தில் யாரும் சொல்லாத கதை இருக்கும். அந்தக் கதையை அவரால் சொல்ல முடியும். ஷகிலாவை காமத்துடன் தொடர்பு படுத்தி நாம் பார்க்கும் போது அவரிடம் சொல்வதற்கு அழுத்தமான கண்ணீர்க் கதைகள் இருக்கின்றன. அது போல் வனிதாவிற்கும் சொல்வதற்கு கதை இருக்கிறது. அந்தக் கதை தான் மிஸஸ் அண்ட் மிஸ்டர்.
வனிதாவின் திமிர்த்தனம் என்பது, அவரை பாதுகாத்துக் கொள்கிற ஆயுதமாகத்தான் பார்க்கிறேன். எல்லா பெண்களும் அப்படித்தான். அந்த வகையில் வனிதாவிடம் இருக்கும் தைரியம் அப்படிப்பட்டது. ஆனால் உண்மையில் அவர் அன்பானவர். அவருக்கு ஆதரவு தெரிவிக்கவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்”.
*நடிகை அம்பிகா*
“இயக்குநர் வசந்த பாலன் இப்படத்தின் டைட்டில் தனக்கு பிடித்திருப்பதாக சொன்னார். இந்த டைட்டிலை தேர்வு செய்தது நான்தான். இது தொடர்பாக வனிதா பேசிய போது ஏன் மிஸ்டர் அண்ட் மிஸஸ்னு இருக்க வேண்டும்? மிஸஸ் அண்ட் மிஸ்டர் ஆக இருக்கக் கூடாதா..!? என்றேன். அதனால் ஒரு சந்தோஷம். இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்தை பார்த்தேன். பொழுதுபோக்காக இருக்கிறது.
இப்போது உள்ள சூழலில் ஒரு படத்தை தயாரிப்பது, இயக்குவது என்பதெல்லாம் கடினமானது. அதுவும் ஒரு பெண்மணி செய்ய வேண்டும் என்றால் அதைவிட கடினம் . அதிலும் இது போன்றதொரு கதையை எழுதி இயக்குவது என்பது அதைவிட கடினம். அதே சமயத்தில் இது போன்ற கதையை வனிதாவால் மட்டுமே இயக்க முடியும்”.
*தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்*
”வனிதாவின் செயல்பாடுகளிலும், பேச்சுகளிலும் அவரிடம் உள்ள தன்னம்பிக்கையைப் பார்க்கிறேன். நம்பிக்கையுடன் அவர் வாழ்வதையும் பார்க்கிறேன். தனக்கு பிடித்தது போல் வாழ்கிறார். சவால் மிகுந்த இந்த உலகத்தில் தனக்கு பிடித்தது போல் வாழ்வது என்பது கடினமானது. இந்த துணிச்சல் என்னை கவர்ந்திருக்கிறது. இதில் ஒரு கட்டமாக அவர் இயக்குநராக உருவெடுத்திருக்கிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”.
*ஷகிலா*
“அக்கா என என்னை அன்பாக அழைப்பர் வனிதா. ஆனால் கோபம் வந்து விட்டால், குரலை உயர்த்துவார். இந்தப் படத்தைப் பற்றி நான்கு நாட்கள் என்னுடைய வீட்டில் விவாதித்தார். ஐந்தாவது நாள் இப்படத்தை தொடங்கிவிட்டார்.
பாங்காக்கில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் உழைத்தோம்.
எனக்கு குடும்பம் இல்லை என்று இணையம் வழியாக நிறைய முறை அழுது புலம்பி இருக்கிறேன். வனிதாவால் எனக்கு மிகப் பெரிய குடும்பம் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
படப்பிடிப்பு முடிவடைந்த பிறகும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்தார் வனிதா.
இந்தப் படம் நன்றாக இருக்கிறது. அனைவரும் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான், வனிதா போன்றவர்கள் எல்லாம் உரிமைகளை கேட்பதில்லை எடுத்துக் கொள்வோம்”.
*ஜோவிகா விஜயகுமார்*
”இந்த மேடையில் தயாரிப்பாளராக நிற்க வைத்த கடவுளுக்கும் இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.
இந்த விழாவிற்கு பலரும் வருகை தந்து மனமார்ந்த ஆதரவை அளித்து வருவதால் தான் நாங்கள் தனியாக இல்லை என்று உணர்வு ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்தப் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் வருகிறது.
நான் உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறேன். இதற்காக விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”.
*தயாரிப்பாளர் மதியழகன்*
”தம்பிகள் பாலா & சதீஷ் இருவரும் இணைந்து ஸ்ரீனிக் புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிறுவனத்திற்கு ஆலோசகராக நான் பணியாற்றுகிறேன். அவர்கள் மாதத்திற்கு ஒரு படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் முதல் படம் தான் வனிதா விஜயகுமாரின் மிஸஸ் & மிஸ்டர்.
இவர்கள் ஒரு கோடியில் இருந்து ஐந்து கோடி ரூபாய்க்குள் தயாரான படங்களை தான் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தையும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியிட முடியாத நிலை தான் இருக்கிறது.
ஜோவிகாவிற்காகத் தான் இப்படத்தில் இணைந்தோம். நாங்கள் அனைவரும் ஜோவிகாவிற்கு சகோதரர்கள். படம் நன்றாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்”.
இசையமைப்பாளர் *ஸ்ரீகாந்த் தேவா*
”இதுவரை 125 படங்களுக்கும் மேலாக பணியாற்றி இருக்கிறேன். ஆனால் வனிதா விஜயகுமாருடன் இணைந்து பணியாற்றியது சவாலானதாக இருந்தது, மறக்க முடியாததாகவும் இருந்தது. இந்த சிறிய வயதில் ஜோவிகாவுக்குள் அபார இசைத்திறமை இருக்கிறது. இதற்கு அவருடைய தாத்தா, பாட்டியின் ஆசி இருக்கிறது.
இந்தப் படத்தில் நான் பாடல்களையும் எழுதியி ருக்கிறேன்.
இந்தப்படத்தில் 40 வயதிற்கு மேற்பட்ட கணவன் – மனைவி என்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என்பதை சொல்லி யிருக்கிறார்கள். தற்போதைய தலைமுறையினருக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும்”.
*சதீஷ்-பாலா*
”நாங்கள் இரட்டையர்கள் அல்ல மதியழகனைச் சேர்த்து மூவர். அவர் சொல்வதை செய்கிறோம்”.
*இயக்குநர் வனிதா விஜயகுமார்*
“எனது அம்மாவிற்கு பிறகு அம்பிகா – ஷகிலா ஆகிய இருவரைத் தான் அம்மாவிற்கு நிகராக பார்க்கிறேன்.என்னை இயக்குவது அம்பிகா தான். இந்தப் படம் தொடர்பான பணிகள் எதுவாக இருந்தாலும் அம்பிகா அக்காவிடம் அனுமதி வாங்கிவிட்டு தான் செய்தேன். இன்று வரை பல தருணங்களில் எனக்கு ஆதரவாக செயல்படுபவர் அம்பிகா அக்கா தான்.
வசந்தபாலனின் படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அவருடைய எழுத்துக்கும் நான் மிகப்பெரிய ரசிகை. அவர் இயக்கத்தில் வெளியான ‘அநீதி ‘ படத்தில் நடித்திருந்தேன். அவரிடமிருந்து மனிதநேயத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அவர் அமர்ந்திருக்கும் மேடையில் நானும் இயக்குநராக அமர்ந்திருப்பதை பெருமிதமாக கருதுகிறேன்.

சமூக வலைதளங்களில் என்னைப் பற்றிய விமர்சனங்களை படிப்பேன். ஆனால் கண்டுகொள்ள மாட்டேன். ‘ஒரு பொண்ணு கர்ப்பமாக இருக்கும் போது அம்மாவை விட புருஷன் கூட இருக்கணும் ‘ என படத்தில் ஷகிலா டயலாக் பேசுவார். இது என்னுடைய வாழ்க்கையில் அனுபவித்த விஷயம்.
எனது மகள் ஜோவிகாவின் தயாரிப்பில் நான் ஒரு படத்தை இயக்குவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஜோவிகா கதாநாயகியாக அறிமுகமாகிறார். அவர் இரண்டு படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறார். தெலுங்கில் சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த சுமந்த் ஆர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம் எஸ் ராஜூ ஜோவிகாவை அறிமுகப்படுத்துகிறார். அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது”.
— மதுரை மாறன்.