பணிநிரந்தரம் இப்போ இல்லைனா எப்போ? பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
கவர்னர் உரையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் அறிவிப்பை சேர்க்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் வலியுறுத்தல் :
பள்ளிக்கல்வித்துறை மூலமாக 2012 ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் தமிழக அரசின் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக 3,700 உடற்கல்வி, 3,700 ஓவியம், 2,000 கணினி அறிவியல், 1,700 தையல், 300 இசை, 20 தோட்டக்கலை, 60 கட்டிடக்கலை, 200 வாழ்வியல்திறன் என மொத்தம் 12 ஆயிரம் பேர் தற்காலிகமாக பணிபுரிகின்றனர்.
2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதாக திமுக 181-வது வாக்குறுதியை கொடுத்து, வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வர் ஆனார்.
இதனால் ரூபாய் 10 ஆயிரம் என்ற குறைந்த சம்பளம், மே மாதம் சம்பளம் இல்லாமல் தவிப்பு, போனஸ், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, குடும்ப நல நிதி போன்றவைகூட இல்லாமல் தவித்து வந்த பகுதிநேர ஆசிரியர்கள் முதல்வர் ஸ்டாலின் தங்களை இதில் இருந்து மீட்டு காலமுறை சம்பளம், பணிநிரந்தரம் செய்வார் என நம்பி இருந்தார்கள்.
ஆனால், 2021 ல் ஒரு இடைக்கால பட்ஜெட், தொடர்ந்து 2022, 2023, 2024 என மூன்று முழுமையான பட்ஜெட்டிலும் மொத்தமாக 1,53,827 கோடி நிதி பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கியும், அதில் இருந்து 265 கோடி நிதி ஒதுக்கி பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்கி, பணிநிரந்தரம் செய்யவில்லை.
பலகட்ட போராட்டங்களுக்கு பின்னரே 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் 2,500 சம்பளம் உயர்வு வழங்கப்பட்டது. சம்பள உயர்வுக்கு 33 கோடி ரூபாய் மட்டும் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கி ஆண்டின் 11 மாதங்களுக்கு வழங்குகிறது.
அதுபோல மத்திய அரசு 60 சதவீதம் நிதி மற்றும் தமிழ்நாடு அரசு 40 சதவீதம் நிதி பங்களிப்பில் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க, ஆண்டிற்கான 11 மாதங்களுக்கு 132 கோடி ரூபாய் ஆகிறது. இப்படியாக இந்த 12,500 ரூபாய் சம்பளம் வழங்க மொத்தமாக ஆண்டிற்கு 165 கோடி ரூபாய் ஆகிறது.
தற்போது உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை உள்ளிட்ட பாடங்களில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை, நிரந்தரம் செய்யும்போது சிறப்பாசிரியர்களாக பணி அமர்த்தப்படுவார்கள்.
ஆகவே சிறப்பாசிரியர்கள் பெறுகின்ற காலமுறை சம்பளம் ( PB Level 10) ₹20600 அடிப்படை ஊதியத்தை நிர்ணயம் செய்தால் ஆண்டிற்கு 430 கோடி ரூபாய் நிதி ஆகும். இதற்கு தற்போதைய 165 கோடி ரூபாய் நிதியைவிட, கூடுதலாக 265 கோடி ரூபாய் நிதி தேவைப்படும். இந்த நிலையில்தான் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 6 ந் தேதி கவர்னர் உரையுடன் சட்டசபை கூட உள்ளது.
இதில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும். எனவே திமுக தேர்தல் வாக்குறுதியான பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து, அரசின் கொள்கை முடிவாக முதல்வர் சேர்க்க வேண்டும்.
2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டே முழுமையானது. இதில் பணிநிரந்தரம் செய்வதற்கு தேவையான நிதியை ஒதுக்கினால் மட்டுமே, பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதி நிறைவேறும். இது முதல்வர் ஸ்டாலின் மனசு வைத்தால் போதும். இதை விட்டால் 2026 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் எதுவுமே செய்ய முடியாது.
அதோடு தேர்தல் நடவடிக்கை தொடங்கிவிடும் என்பதால் முதல்வர் நினைத்தால்கூட அதை சட்டப்படி செய்ய இயலாது. எனவே இப்போதே பணிநிரந்தரம் செய்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு விடியலை முதல்வர் ஸ்டாலின் வழங்க வேண்டும்.
13 ஆண்டுகளாக தற்காலிக வேலை, தற்போதும் 12,500 ரூபாய் என்ற குறைந்த சம்பளம் என வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கு இனி காலமுறை சம்பளம், பணிநிரந்தம் மட்டுமே அரசின் பணப்பலன்கள், பணிப்பாதுகாப்பை கொடுக்கும் என்பதை நினைத்து பார்த்து இதை முதல்வர் ஸ்டாலின் செய்ய வேண்டும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
13 ஆண்டுகள் பணி அனுபவம் ஒருபுறம் இருந்தாலும், இரண்டு முறை திமுக தேர்தலில் வாக்குறுதி கொடுக்கப்பட்டதை முதல்வர் ஸ்டாலின் நினைத்து பார்க்க வேண்டும்.
எதிர்கட்சியாக திமுக இருந்தபோது குரல் கொடுத்தது முக்கியம் கிடையாது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது பகுதிநேர ஆசிரியர்கள் போல் வாழ்வாதாரம் வேண்டி தவிப்போரை கைதூக்கி விடவேண்டும். இதை தான் முதல்வரிடம் எதிர்பார்க்கிறோம்.
தேர்தல் வாக்குறுதியை அரசாணையாக்க வேண்டும் என சொன்ன முதல்வர் ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்கள் விஷயத்தில் செயல்படுத்த வேண்டும். அமைச்சரவையின் கொள்கை முடிவாக இதை செய்ய வேண்டும்.
எனவே கவர்னர் உரையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் சேர்க்க வேண்டும் என மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்..
S.செந்தில்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,