திரையரங்கு வரலாற்றிலேயே முதன்முறையாக வெளியான அரசியல் விளம்பரம் !
திரையரங்கு வரலாற்றிலேயே முதன்முறையாக வெளியான அரசியல் விளம்பரம் ! திரையரங்கு என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது, அரதப்பழசான புகையிலைப் பழக்கத்திற்கு எதிரான விளம்பரம்தான். அடுத்து, வீகோ பல்பொடி விளம்பரம். இதுதவிர, அடுத்து வெளியாகவிருக்கும் புதிய சினிமாவுக்கான விளம்பரங்களாக இருக்கும். மிஞ்சிப்போனால், அரசின் செய்தி வெளியீடு துறையின் சார்பில் அரசின் நலத்திட்டங்கள் குறித்தான அரசு விளம்பரங்கள் புதியதாக இடம்பெற்றிருக்கும்.
திருச்சியில் பாரம்பரியமான திரையரங்குகளுள் ஒன்றான, ஒருகாலத்தில் மாரிஸ் என்றழைக்கப்பட்ட தற்போது எல்.ஏ. சினிமா என்ற பெயரில் இயங்கிவரும் திரையரங்கிலும், சோனா – மீனா திரையரங்கிலும் முற்றிலும் வித்தியாசமான ஒரு விளம்பரத்தைப் பார்த்து பூரிப்படைந்திருக்கிறார்கள் திருச்சியைச் சேர்ந்த சினிமா ரசிகர்கள்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் திமுகவின் முதன்மை செயலருமான கே.என்.நேருவின் மகன் கே.என். அருண்நேரு சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியின் வேட்பாளராக போட்டியிட்டு எம்.பி.யாகியிருக்கிறார். அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வித்தியாசமான முயற்சியாக திரையரங்குகளில் விளம்பரம் செய்திருக்கிறார், திருச்சியைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் மணிவண்ணபாரதி.

”பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர், குளித்தலை, முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதியில் அடங்கிய தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற K.N.அருண்நேரு, M.S, M.P., வுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் திமுக கழக உடன்பிறப்புகளுக்கும் நன்றி நன்றி” என்ற வாசகங்களுடன் கூடிய அந்த நன்றி தெரிவிக்கும் விளம்பரம்தான் திருச்சியைச் சேர்ந்த சினிமா ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
பொதுவில், வாக்கு கேட்டு வீதிக்கு வருவதோடு சரி, தொகுதிப்பக்கம் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை என்ற பொதுவான விமர்சனங்கள் முன்வைக்கப்படும் சூழலில்; அதிலும் குறிப்பாக, கடந்தமுறை இதே பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐ.ஜே.கே. கட்சியின் பாரிவேந்தருக்கு எதிராகவும் இதே வகையிலான குற்றச்சாட்டும் அதிருப்தியும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான், இந்த விளம்பரம் வெளியாகியிருக்கிறது. அதுவும், ”தமிழகத்திலேயே முதல் முறையாக” என்று சன் டிவி பாணியில், “திரையரங்க வரலாற்றிலேயே முதல்முறையாக” அரசியல் விளம்பரம் ஒன்று ஒளிபரப்பாகியிருப்பதும் இதன் தனிச்சிறப்புதான்.
திரையரங்கில் வித்தியாசமான இந்த விளம்பரத்தைப் பார்த்து நெகிழ்ந்த சினிமா ரசிகர்கள், இந்த விளம்பரத்தை வெளியிட்ட திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிவண்ணபாரதியை மனதார பாராட்டி வருகின்றனர்.
எமர்ஜென்சி காலத்தில்கூட, கழக தொண்டர்களின் காதுகுத்து, கல்யாண விழாக்களையே அரசியல் மேடையாக மாற்றியவர்கள் தி.மு.கழகத்தினர். அழைப்பிதழில் நிகழ்வுக்கு வருகை தர வாய்ப்பில்லாதவர்கள் என்பதாக, எமர்ஜென்சி காலத்தில் கைது செய்யப்பட்டவர்களின் பெயரை அச்சிட்டு அரசியல் செய்தவர்களாயிற்றே! திமுகவின் பாரம்பரியத்தை நினைவுபடுத்திவிட்டது, வித்தியாசமான இந்த முயற்சி!
டெல்டாக்காரன்