திராவிட இலக்கியம் மற்றும் இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பு (PG Diploma) சோ்க்கை அறிவிப்பு
திராவிட இயக்கத்தின் நெடிய வரலாற்றில் இலக்கியத்திற்கும் இதழியலுக்கும் தனித்துவமான இடம் உண்டு. தமிழின் மறுமலர்ச்சியில் திராவிட இயக்கத்தவர்களின் பங்கு அளப்பரியது. தலைவர்களே பத்திரிகையாளர்களாக, எழுத்தாளர்களாக, கவிஞர்களாக, படைப்பாளிகளாகத் திகழ்ந்த பெருமை கொண்டது திராவிட இயக்கம்.
திராவிட இயக்கத்தினர் நடத்திய பத்திரிகைகள் தேநீர்க் கடையில்- முடி திருத்தும் நிலையத்தில் கூடுகின்ற எளிய மக்களையும் அரசியல் பேச வைத்தது. திராவிட இயக்கத்தினர் எழுதிய கதைகள்-நாடகங்கள்-திரைக்கதை-வசனங்கள் ஆகியவை கலையுலகில் மட்டுமின்றி, சமுதாயத்திலும் திருப்புமுனையை ஏற்படுத்தின. கவிதைகளை ஆயுதமாக ஏந்தி தமிழுக்கு புதிய அணிகலன் அணிவித்தது திராவிட இயக்கம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திராவிட இலக்கியம் மற்றும் இதழியல் தொடர்பான ஓராண்டு கால பகுதி நேர முதுநிலை பட்டயப் படிப்பை (PG Diploma) சேலம் பெரியார் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது. கலைஞர் ஆட்சியில் சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது அதில் முத்தமிழறிஞர் தமிழவேள் கலைஞர் மு.கருணாநிதி ஆய்வு மையத்தைத் தொடங்கிட காரணமாக இருந்தவர் சேலத்து சிங்கம் வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள். கலைஞர் பெயரில் திகழும் ஆய்வு மையத்தின் சார்பிலான இந்த முதுநிலை பட்டயப் படிப்பில் 2025-26ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பத்திரிகையாளராகவும்-எழுத்தாளராகவும் சிறப்பாக செயல்பட்டு வருபவரும், நெருக்கடி நிலைக்காலத்தில் தமிழ்நாட்டு பத்திரிகைகளின் நிலை குறித்த முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவருமான அன்புத் தோழர் பேராசிரியர் இரா.சுப்பிரமணி Subramani Ramalingam இயக்குநராக இருந்து இந்தப் பணியை மேற்கொள்ள, அவருடன் முனைவர் ரா.சிலம்பரசன் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் உடனிருந்து திராவிட இலக்கியம் மற்றும் இதழியலுக்கான பட்டயப் படிப்பு எனும் காலத்திற்குத் தேவையான செயலை மேற்கொண்டுள்ளனர். வாழ்த்துகள்.
விருப்பமும் கல்வித் தகுதியும் உள்ளவர்கள் இந்த முதுநிலை பட்டயப் படிப்பில் சேர்ந்து பயன் பெறலாம்.
திராவிடம்- உரிமை காக்கும் ஆயுதம்.