தமிழ் வாசகர்களுக்காக வீ. பா கணேசன் படைத்திருக்கும் இரவீந்திரநாத் தாகூரின் வாழ்வும் படைப்புலகமும்!
இந்திய மக்களின் வாழ்க்கைப் போரட்டங்களைப் பற்றி மிகுந்த அக்கறையுடன் விவாதித்துள்ள தத்துவ அறிஞர்கள் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு, இரண்டு பகுதிகளிலும் 19ஆம் நூற்றாண்டில் பிறந்துள்ளனர்.
அரபிக் கடற்கரையோரம் மகாத்மா ஜோதிபா பூலே (1827 – 1890), வங்கக் கடற்கரையோரம் ரவீந்திரநாத் தாகூர் (1861 – 1941).
மனித மனதின் விடுதலை, மக்களின் ஏழ்மையைப் போக்குவது ஆகியவற்றைக் குறித்து இருவரும் தங்களின் கருத்துக்களை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளனர். இவற்றுடன், சமூகக் கட்டமைப்பு குறித்த விவாதம் இந்தியாவின் மேற்கில் ஆழமாக நடந்துள்ளது.

இருவரிடமும் காணப்படும் மிக முக்கியமான ஒற்றுமை கல்வி குறித்ததாக இருந்தது என்பதையும், கல்வியே ஒருவரை விடுதலையடையச் (liberate) செய்யும் என்பதை இருவரும் வலியுறுத்தி உள்ளனர் என்பதையும் உணர முடிகிறது.
நான் பெரிதும் மதிக்கும் நுண்மாண் நுழைபுலம் பெற்ற மார்க்சிய தத்துவ அறிஞர் தோழர் வீ. பா. கணேசன் அவர்கள் தமிழ் உலகத்திற்கு இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை “*வங்கத்து மீகாமனின் வாழ்க்கைச் சித்திரம்*” எனும் பெயரில் படைத்துத் தந்துள்ளார்.
அத்துடன் இரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் “*பன்முகப் பார்வையில் தாகூர்*” எனும் பெயரில் சிறந்த அறிமுகத்தை மிக எளிமையாக படைத்துத் தந்துள்ளார்.
மொழி, பண்பாடு, கல்வியியல், சமூகவியல், மானுடவியல், வரலாறு ஆகிய துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளும் மாணவர்களுக்கும், தமிழ் வாசகர்களுக்கும் மிகப் பெரும் இலக்கிய கொடையே இந்த இரண்டு நூல்கள்.
ரவீந்திரநாத் தாகூரின் பிறப்பு முதல், அவருக்கு விருப்பமில்லாமல் தனது மகனுக்காக அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நொடிவரை, மிகவும் தத்ரூபமாக கண்முன்னே காட்சிப் படுத்தும் அற்புத எழுத்து நடையில் ஒரு மகா கவிஞரின், தத்துவ அறிஞரின் வாழ்க்கையை தமிழில் படைத்துத் தந்துள்ளார் எழுத்தாளர் வீ. பா. கணேசன்.
எந்தெந்தத் தளங்களில் இரவீந்திரநாத் தாகூர் இயங்கி உள்ளார்? அவரின் படைப்புகள் வாயிலாக அவர் தரும் செய்தி என்ன? என்பதை மிகவும் நேர்த்தியாக, அதே சமயம் மிகவும் சுருக்கமாக, விரிந்து பரந்த படைப்புலகத்தை, ஒரு கையிக்கு அடக்கமான நூலில் தந்துள்ளார் வீ. பா. கணேசன் அவர்கள்.
வாழ்க்கை வரலாறு, படைப்புகள் எனத் தனித்தனியான இரண்டு நூல்களாக வெளியிடப் பட்டிருந்தாலும், இரண்டும் ஒரு சேர வாசிக்கப்பட வேண்டிய நூல்கள்.
மிகப் பெரும் ஆய்விற்கு பின்னர், பல்வேறு தரவுகளை வாசித்து , ஒப்பிட்டு, பலருடன் உரையாடல் நிகழ்த்தி, உண்மைகளை உணர்ந்து அதன் விளைவாக தொடர் கட்டுரையாக எழுதி, அதைப் பின்னர் நூலாக தொகுத்து இருந்தாலும்; இரவீந்திரநாத் தாகூரின் வாழ்வில் சில நிகழ்வுகள் குறித்த செய்திகள் மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் மேலும் ஆழமான ஆய்வுகள் வேண்டும், இன்னும் பல தகவல்கள் ஆதாரத்துடன் வெளிக் கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது என்பதை தனது நூலில் அழுத்தமாக பதிவு செய்கிறார் நூலாசிரியர் வீ பா. கணேசன். ஒரு ஆய்வறிஞருக்கான சிறந்த இலக்கணத்தை எழுத்தாளர் வீ. பா. கணேசன் அவர்களிடம் உணர முடிந்தது.
தனது நினைவு இருந்த நொடி வரை கவிதைப் படைத்த மகா கவிஞரை, மக்களை நேசித்த, மக்களால் நேசிக்கப்பட்ட, வங்கத்து மாமனிதரை தமிழ் வாசகர்கள் படித்து உணர்வதற்கு மிகப் பெரும் வாய்ப்பாக இந்த இரண்டு நூல்களும் அமைத்துள்ளன.
“ஒரு குழந்தை முழுமையானதொரு மனிதனாக மாறுவதற்கு நல்வழிப்படுத்தும் ஒரு கருவியே கல்வி” என்ற இரவீந்திரநாத் தாகூரின் கல்விச் சிந்தனையைப் பேசத் தொடங்கும் இந்த நூலின் ஆசிரியர், அவர் சிந்தனையில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சிப் போக்கினை கால வரிசைப்படி பதிவு செய்கிறார்.
“ஒரு குழந்தை எந்த மொழி வழி கற்க வேண்டும் என்பது, அதன் சமூக-கலாசாரச் சூழலைப் பொறுத்து இருக்க வேண்டும்” என்ற இரவீந்திரநாத் தாகூரின் வாதம்; எத்தனை மொழி ஒரு குழந்தை படிக்க வேண்டும், எந்த மொழி வழியில் படிக்க வேண்டும் என்று நிர்வாக ரீதியில் அலசி உத்தரவுப் போடப்படும் இன்றையச் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
1930ல் தான் மேற்கொண்ட சோவியத் ஒன்றியப் பயணம் இரவீந்திரநாத் தாகூரின் கல்விப் பார்வையை விசாலப்படுத்தி இருந்தது. பயணத்தின் ஊடே, ரஷ்யாவில் இருந்து தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில்;
“இங்குள்ள கல்வி முறையில் காணப்படும் சோர்வில்லா முயற்சி, துணிவு, அறிவுத் திறன், தியாக உணர்வு இவற்றில் ஒரு சிறு பகுதி நம் நாட்டில் செயல்பட்டாலும் நாம் பேறு பெற்றவர்களாவோம்” என்று இரவீந்திரநாத் தாகூர் எழுதியிருந்ததை மிகவும் பொருத்தமான இடத்தில் பதிவு செய்கிறார் வீ. பா. கணேசன்.

தேசியக் கல்விக் கொள்கை 2020 ஏன் ஏற்புடையதல்ல என்பதற்கு இரவீந்திரநாத் தாகூர் கூறும் விளக்கமாகவே மேலே கூறப்பட்ட கூற்று நமக்கு உணர்த்துகிறது.
1940 பிப்ரவரி 6ஆம் தேதி ஶ்ரீநிகேதன் ஆண்டுவிழா உரையில்;
“அனைத்து மக்களுக்கும் கல்வி கிடைப்பதற்கான பாதைகளை உருவாக்க வேண்டும். அறிவியல் ரீதியான ஒரு பண்பாட்டை உள்வாங்கி, அதையே பரந்துபட்ட மக்களின் கலாசாரமாக மாற்ற வேண்டும்”என்று கூறிய, இந்திய தேசியக் கீதம் தந்த மகத்தான கல்வியாளர், எழுத்தாளர், மனித நேயர் இரவீந்திரநாத் தாகூர் வாழ்க்கையையும், படைப்புகளையும் தமிழ் வாசகருக்கு சிறந்த முறையில் அறிமுகம் செய்துள்ள வீ. பா. கணேசன் அவர்கள் பெரும் பாராட்டிற்குரியவர்.
*கிழக்கு பதிப்பகம்* வெளியிட்டுள்ள இந்த இரண்டு நூல்களும் *பாரதி புத்தகாலயம்* உள்ளிட்ட பல்வேறு நூல் விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது.
வாங்கி வாசிப்போம்! நமது சிந்தனை விரிவடைய இந்த இரண்டு நூல்களும் உதவும்.
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை