அங்குசம் செய்தி எதிரொலி : பெண் போலீசுக்கு மிரட்டல் விடுத்த போதை ஆசாமிகள் சிறையிலடைப்பு !
ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளரு நானு உன்னால முடிஞ்சத பாரு… பெண் போலீசுக்கு மிரட்டல் !
“ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளரு நானு உன்னால முடிஞ்சத பாரு ! பெண் போலீசுக்கு மிரட்டல் ! “ என்ற தலைப்பில் அங்குசம் யூடியூப் சேனலில் வீடியோ பதிவோடு செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம். தனியார் பேருந்தை வழிமறித்து அப்பேருந்தின் ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டியும் அடிக்கப் பாய்ந்த போதை ஆசாமிகளை தட்டிக்கேட்ட, பெண் போலீசாரையும் அவமரியாதை செய்திருந்ததை அந்த செய்தியில் பதிவு செய்திருந்தோம். அங்குசம் செய்தியின் எதிரொலியாக, மேற்படி சர்ச்சையில் சிக்கிய இரு ஆசாமிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டையில் கடந்த மே-16 ஆம் தேதி அப்பகுதியை சேர்ந்தவரின் இறுதி ஊர்வலத்தின் போது, தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று கடக்க முயன்றபோது தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அப்பேருந்து பட்டுக்கோட்டையிலிருந்து மீண்டும் தஞ்சாவூருக்கு திரும்பி வரும் வழியில், மேற்படி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற போதை ஆசாமிகள் இருவர் மீண்டும் அப்பேருந்தை வழிமறித்து அதன் ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டனர். பேருந்தில் 50-க்கும் அதிகமான பயணிகள் இருந்த நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு செய்யாதீர்கள் என்று அந்த போதை ஆசாமிகளிடம் அறிவுரை சொன்னதற்காக, அதே பேருந்தில் பயணித்த ஒரத்தநாடு போலீஸ் ஏட்டு சுப்புலட்சுமி என்பவரை அந்த போதை ஆசாமிகள் அவமரியாதை செய்தனர்.
”ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளரு நானு உன்னால முடிஞ்சத பாரு. போலீஸ்னா வீடியோ எடுப்பியா? 100-க்கு போன் பன்ன நீ யாரு? முடிஞ்சா எஃப்.ஐ.ஆர். போடு” என்றெல்லாம் சவால் விட்டதோடு, ராகுல்காந்தி என்ற நபர் பேருந்தில் ஏறி அப்பெண் போலீசை அடிக்கவும் பாய்ந்தான். பயணிகள் தடுத்து அவனை கீழே இறக்கிவிட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவை அங்குசத்தில் வெளியிட்டதையடுத்து, போலீசு உயரதிகாரிகளின் கவனத்திற்கு இந்த விவகாரம் சென்றதையடுத்து, அதிரடியாக மேற்படி தகராறில் ஈடுபட்ட சூரக்கோட்டையைச் சேர்ந்த பன்னீர் செல்வம் மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை தஞ்சாவூர் தாலுகா போலீசார் கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள். போலீஸ் ஏட்டு சுப்புலட்சுமி வீடியோ ஆதாரத்துடன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறார்கள்.
நாம் வெளியிட்டிருந்த வீடியோவில், ” ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளரு நானு உன்னால முடிஞ்சத பாரு” என்பதாக தெளிவாகவே பேசி மிரட்டல் விடுத்திருந்தான் பன்னீர்செல்வம். இது தொடர்பாக, தஞ்சாவூர் தாலுகா இன்ஸ்பெக்டர் சோமசுந்தரத்திடம் பேசியபோது, “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இதுபோன்ற பேசுவதற்கு விருப்பம் இல்லை.” என்பதாக நறுக்கென்று பேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
பெண் காவலர்களின் அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் சேவையை கவுரவிக்கும் வகையில், காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியாகத்துடன் இனைந்து காவல்துறையில் பெண்கள் என்ற 11ஆவது தேசிய மாநாட்டை தமிழக அரசின் சார்பில் நடத்தியிருந்தார்கள். அம்மாநாட்டில் பங்கேற்று பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ” தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு காவல் நிலையங்களில் 43% பெண் காவல் அதிகாரிகள் தலைமை வகிக்கின்றனர்” என்பதாக, பெருமையாக பதிவு செய்திருந்தார். இந்நிலையில்தான், பொதுமக்கள் மத்தியில் பெண் போலீஸ் காவலர் ஒருவர் போதை ஆசாமிகளால் அவமரியாதை மற்றும் மிரட்டலுக்குள்ளான சம்பவமும் நடைபெற்றிருந்தது.
இந்தபின்புலத்திலிருந்துதான், எதிர்காலத்தில் தமிழகத்தில் இப்படி ஒரு சம்பம் நிகழாதிருக்க; போலீசுக்கு எதிரான மிரட்டலை எவரும் மேற்கொள்ளாது தடுக்க வேண்டும்; சம்பந்தபட்ட குற்றவாளிகளின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அந்த செய்தியை வெளியிட்டிருந்தோம்.
ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளரு நானு உன்னால முடிஞ்சத பாரு… பெண் போலீசுக்கு மிரட்டல் !
சாராய போதையைக் காட்டிலும் கஞ்சா போதையில்தான் தான் இன்னது செய்கிறோம் என்பதையே மறந்து சுயநினைவிழந்து சவடால் பேசுகிறார்கள், அல்லது குறிப்பிட்ட அமைப்பு, சாதிய கட்சி, அரசியல் கட்சி என்ற செல்வாக்கை காட்டி போலீசாரை மிரட்டும் போக்கும் தலைத்தூக்க தொடங்கியிருக்கிறது. போலீசார் தங்களது உறுதியான நடவடிக்கையின் வழியே. இதுபோன்ற நபர்களை தண்டிக்கத் தவறும்பட்சத்தில், “நமக்கு ஏன் வம்பு என்று பொதுமக்களை போலவே, போலீசாரும் ஒதுங்கி செல்லும் போக்கிற்குத்தான் இட்டுச்செல்லும்.” என்பதே, நாம் இங்கே அழுத்தமாக பதிவு செய்ய விழையும் செய்தியுமாகும்.
— ஆதிரன்.