கலகத்தலைவன் கழகத்தலைவராவது எப்போது ?
கலைஞரைத் திராவிட இயக்கத்தின் இன-மொழி உணர்வு பொது வாழ்க்கைக்கு ஈர்த்தது. கலைஞரின் மகனான மு.க.ஸ்டாலினை மக்கள் அறிய பொதுவாழ்வுக்கு இழுத்து வந்தவர் எமர்ஜென்சியை நடைமுறைப்படுத்தி மிசா சட்டத்தில் கைது செய்த அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள். கலைஞரின் பேரனும் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதியை அரசியலுக்கு கொண்டு வந்தது யார்?
![கலைஞர் - உதயநிதி - ஸ்டாலின்](https://angusam.com/wp-content/uploads/2022/11/uth-e1669446959796.jpg)
மெல்ல… மெல்ல… ஆரம்பம்
கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு, சாக்லேட் பாய் போல நண்பர்கள் வட்டாரத்தில் கலந்திருந்தவர் உதயநிதி. சென்னை நுங்கம் பாக்கத்தில் ஸ்நோ பவுலிங் என்ற பொழுதுபோக்கு நிலையத்தைத்தான் அவர் தொடங்கினார். அதன்பிறகு, ரெட் ஜெயண்ட் பட நிறுவனத்தைத் தொடங்கி சினிமா தயாரிப்பாளராகி குருவி, ஆதவன் போன்ற திரைப்படங்களை எடுத்தார். பட விநியோகத்திலும் அந்த நிறுவனம் ஈடுபட்டது. அதுவே, அன்றைய எதிர்க்கட்சிகளின் வாயில் போட்ட அவலாக மாறி, கலைஞர் அரசுக்கு கூடுதல் தலைவலியாகவும் அமைந்தது. சினிமா துறையை தி.மு.க ஆக்கிரமித்துவிட்டது என்ற எதிர்ப்பிரச்சாரம் கடுமையாக இருந்த நேரத்திலும், நேரடி அரசியலுக்கு உதயநிதி வரவில்லை.
![உதயநிதி - குடும்பத்துடன்](https://angusam.com/wp-content/uploads/2022/11/v.jpg)
ஆரம்ப அரசியல்
அவருடைய அரசியல் ஆர்வம் என்பது தன்னுடைய தந்தை போட்டியிடும் தொகுதியில் தேர்தல் பணிகளில் ஓரளவு ஈடுபடுவது, தேர்தல் நாளில் உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுவது என்ற அளவில் தான் இருந்தன. 2011ல் தி.மு.க. எதிர்க்கட்சியாகிப் பல போராட்டக் களங்களை சந்தித்த போதுகூட, உதயநிதி அந்த இடங்களுக்கு வரவில்லை. அவர் வழக்கம்போல சினிமா தயாரிப்பு, விநியோகம் என்ற அளவிலேயே இருந்தார்.
“என் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்” என்று ஒரு கலந்துரையாடலில் மு.க.ஸ்டாலின் சொல்லக்கூடிய அளவுக்கு உதயநிதி அரசியலுக்கு வெளியேதான் இருந்தார். கலைஞர் உடல்நலன் குன்றியபோது மு.க.ஸ்டாலின் தோளில் முழு பொறுப்பும் ஏறியது. கலைஞர் இறந்தபிறகு, கட்சியின் மொத்தப் பொறுப்பையும் ஏற்றுத் தலைவரானார் மு.க.ஸ்டாலின்.
சும்மா வந்துட்டு போனா போதும்…
இந்த சமயத்தில்தான், ஸ்டாலினை நன்கறிந்த தி.மு.க. நிர்வாகிகளான மா.சுப்ரமணியன் போன்றவர்கள் தங்கள் மாவட்டத்தில் நடத்தும் நலத்திட்ட உதவிகள், விளையாட்டுப் போட்டி பரிசளிப்புகள் போன்றவற்றில், “சும்மா வந்துட்டுப் போனா போதும்” என்று சொல்லி உதயநிதியை மேடையேற்றினார்கள். உதயநிதி அங்கே அரசியல் பேசவில்லை என்றாலும், அவருக்கான வாழ்க முழக்கங்கள் எழுந்தன. கழகத்தின் மூன்றாம் தலைமுறையாக வரவேண்டும் என மேடையில் மற்ற பேச்சா ளர்கள் வலியுறுத்தினர்.
‘க்ளிக்’ ஆன அரசியல் பேச்சு
2018 பிப்ரவரி மாதம் ஈரோட்டில் நடைபெற்ற திமுக மாநாட்டில் முதல்முறையாக உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு இளைஞர்களிடையே ஆர்வத்தையும், உற்சாத்தை யும் ஏற்படுத்தியது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் பரப்புரை செய்தார் உதயநிதி. தாத்தாவின் தமிழ் வீச்சாகவோ, அப்பாவின் குறிப்புகளாகவோ இல்லாமல் இன்றைய தலைமுறையினருடன் உரையாடுவது போல அவருடைய பேச்சு அமைந்தது. அது க்ளிக் ஆனது. தேர்தல் களத்தில் தி.மு.க அணிக்கு கிடைத்த மகத்தான வெற்றி, உதயநிதியின் நேரடி அரசியல் என்ட்ரிக்கு ஹைவேஸ் ஆனது.
குருவித்தலையில் பனங்காய்…
மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்ததால் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகினார். தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக்கு கிடைத்த வெற்றியால் உதயநிதி இளைஞரணிச் செயலாளர் ஆனார். குருவித் தலையில் பனங்காய் என்ற அளவில் விவாதங்கள் நடந்தன. அது அவரது அப்பா 25 வருடங்களுக்கு மேல் வகித்த பதவி. அதற்குள் இவருக்காக என்று கட்சிக்குள்ளும் குரல்கள் கேட்டன.
நானும் அப்பா போலத்தான்….
அந்த நேரத்தில்தான், குடியுரிமை திருத்தச் சட்டத்தை கிழித்தெறிந்து, “நானும் என் தாத்தா, அப்பா போலத்தாங்க பாஸ்” என மீடியாக்களுக்கும் கட்சியினருக்கும் புரிய வைத்தார் உதயநிதி. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தி.மு.க. கூட்டணி நடத்திய மாபெரும் பேரணியில், கூட்டத்தில் ஒருவராக அவர் கலந்துகொண்டது தொண்டர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்தியது. Down to earth என்கிற அளவில் உதயநிதி எளிமையான அரசியல்வாதியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.
![பொய் பெட்டி நிகழ்ச்சி](https://angusam.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-26-at-1.07.46-PM.jpeg)
பொய் பெட்டி மூலம் பிரச்சாரம்
சமூக வலைத்தளங்கள் வாயிலாக தி.மு.கவுக்கு எதிரான கருத்துகள் இளைய தலைமுறையினரிடம் காட்டுத் தீயாகப் பரவிக் கொண்டிருந்த நேரம் அது. வதந்திகள், அவதூறுகள் என அன்றாடம் ஏதாவது ஒன்று பரவும். அந்த நேரத்தில், இளைஞரணி சார்பில் ‘பொய்ப் பெட்டி’ என்ற நிகழ்ச்சியை மாதந்தோறும் நடத்தி, எதிர்த்தரப்பின் குற்றச்சாட்டுகளை உடைத்தெறியச் செய்தார் உதயநிதி.
இளைஞர் அணியின் தீவிரம்
கொரோனா காலத்து ஊரடங்கு நேரத்திலும் பொய்ப்பெட்டி நிகழ்ச்சியும், தி.மு.க.வின் கொள்கை மற்றும் சாதனைகள் விளக்கமும் காணொளிகளாக இளைஞரணி சார்பில் தொடர்ந்து வெளியிடப்பட்டன. கொரோனா நேரத்து உதவிகளுக்காக ஹெல்ப்லைன்
![பிரச்சாரம் -](https://angusam.com/wp-content/uploads/2022/11/s.jpg)
செம வைரலான பிரச்சாரம்…
2021 தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி போட்டியிட்டதுடன், தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்தார். “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்து விட்டேன்” என்று ஒற்றை செங்கல்லைக் காட்டி அவர் செய்த பிரச்சாரம் செம வைரலானது. தனது தாத்தா 3 முறை போட்டியிட்ட ஒரே தொகுதியான சேப்பாக்கத்தில் எளிதில் வென்றார் உதயநிதி. அவரது அப்பா தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
![களத்தில் உதயநிதி](https://angusam.com/wp-content/uploads/2022/11/734916.jpg)
தொகுதியில் உலா..
தொகுதியில் உள்ள குடிசைவாசிகள், மீனவர் பகுதிகள் ஆகியவற்றுக்கு நேரில் சென்று, அவர்களின் வாழ்நிலையை உணர்ந்தார் உதயநிதி. வெற்றி பெற்றதற்குப் பிறகுதான் பெரும்பணி காத்திருக்கிறது என்பது அப்போதுதான் உதயநிதிக்குப் புரிந்தது. அந்த நேரத்தில்தான், திரைப்படத்துறை மறுபடியும் அவரை ஈர்த்தது.
சேப்பாக்கம் தொகுதியில் யூ-டியூப் சேனல் கேமராக்கள் அவரைப் பின்தொடர்ந்தன. கோடம்பாக்கம் கேமராக்கள் அவரைச் சுற்றி நின்றன. மீண்டும் திரைப்பட நடிப்பில்-தயாரிப்பில்-விநியோகத்தில் கவனம் குவித்தார். தொகுதி மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைத் தீர்ப் பதற்கானக் கட்டமைப்பையும் பலப்படுத்தினார். இளைஞரணியில் புது ரத்தம் பாய்ச்சத் திட்டம் தீட்டினார்.
திமுகவினரின் இன்றைய பிரச்னை
ஆளுங்கட்சியாகிவிட்டாலும் நிர்வாகி களுக்கும் தொண்டர்களுக்கும் அந்த உணர்வு ஏற்படவில்லை. தங்களுக்கான வாய்ப்புகள் சரியாக அமைய வில்லை என்றும், கட்சி நிலையைத் தலைமையிடம் சொல்வதற்கு வழியில்லை என்பதுமே தி.மு.க.வினரின் இன்றைய முக்கிய பிரச்சினை.
![உதயநிதி](https://angusam.com/wp-content/uploads/2022/11/uth-1.jpg)
ஒரே நம்பிக்கை உதயநிதியே…
அறிவாலயத்தில் கழகத் தலைவரை சந்திக்க முடியவில்லை. முதல்வர் வீட்டுக்கு சென்று மனு கொடுக்க முடியவில்லை. தலைமைச் செயலக அதிகாரிகளோ தி.மு.க. வெறுப்பாளர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில், அவர்களின் ஒரே நம்பிக்கை உதயநிதிதான்.
கட்சி தலைவரே நினைத்தாலும்…
தி.மு.க.வின் எதிர்காலத் தலைவர் என்று நிர்வாகிகளாலும் தொண்டர்களாலும் எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்புபோல அவரை சந்திக்க முடியவில்லை என்பது தொண்டர்களையும் நிர்வாகிகளையும் விரக்தி யடையச் செய்கிறது. வெறுப்பும் புலம்பல்களும் வெளிப்படுவதைக் காண முடிகிறது. தி.மு.க.வைப் பொறுத்தவரை அந்தந்த மாவட்டக் கழக அமைப்புகள் வலிமையானவை. மாவட்டச் செயலாளரை மீறி ஒரு செயலை கட்சித் தலைவரே நினைத்தாலும் அத்தனை எளிதாக செய்து விட முடியாது. உதயநிதியும் அதனை உணர்ந்திருக்கிறார்.
புது ரத்தம் பாயுது
பழம் பெருசுகளை நம்புவதைவிட, புது ரத்தங்களை எதிர்பார்க் கிறார் உதயநிதி. இளைஞ ரணி சார்பில் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறையை அவர் நடத்தி முடித்திருப்பது ஒரு புதிய திருப்பமாகும். அடுத்த கட்டமாக ஒன்றியம், ஊராட்சி என கொள்கைப் பயிற்சிப் பாசறை வகுப்புகள் தொடரும் என அறிவித்திருப்பதும் தி.மு.க.வின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை தரக்கூடியதாக உள்ளது.
பாடுபட்டால் பலன் உண்டு
இளைஞரணி செயலா ளராக இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டிருக்கும் உதயநிதி, அணிக்காகப் பாடுபட்ட மாவட்ட அமைப் பாளர்கள் சிலரை மாநிலத் துணைச் செயலாளர் களாக நியமித்திருப்பது அவருடைய அரசியல் பார்வையைக் காட்டக் கூடியதாக இருக்கிறது. கட்சி சீனியர்களின் வாரிசுகள் முட்டி மோதிய துணைச் செயலாளர் பதவிகளில் எளியவர்கள், கடும் உழைப்பாளிகள், அரசியலுக்கு முதல் தலை முறையினர் ஆகியோரை நியமித்துள்ளார். பாடுபட்டால் பலன் உண்டு என்பதை இந்த நியமனங்கள் வெளிப்படுத்துகின்றன.
கூடுதல் கவனம் தேவை
தி.மு.க.வின் முழுமையாக இத்தகைய நியமனங்கள் அமையவேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எதிர்பார்ப்பு. அதற்கு உதயநிதி இன்னும் கூடுதலாக அரசியலில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த பார்முலாவை பின்பற்றினால்….
45 வயதை நிறைவு செய்யும் அவருக்கு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அதே நேரத்தில், நாடாளு மன்றத் தேர்தல் போன்ற சவாலான களங்களும் காத்திருக்கின்றன. அரசியல் மிகுதி, சினிமா மீதி என்ற ஃபார்முலாவைப் பின்பற்றினால் கலகத் தலைவன் ஹீரோ உதயநிதி கழகத் தலைவருக்கு உறுதுணையாக இருப்பதுடன், அந்த இடத்திற்கு அடுத்து வருவதற்கு அவரே பொருத்தமானவர் என்ற நம்பிக்கை கட்சி கடந்து மக்களிடமும் வெளிப்படும்.
— திருமொழி