இரத்தக்குழாய் மற்றும் தமனிகளில் ஏற்படும் ”அனிருசம் எனப்படும் தமனிக்கொப்புளம்” – மரியானா அன்டோ புருனோ
1.இரத்தக்குழாய்களில், தமனிகளில் ஏற்படும் வீக்கத்திற்கு தமனிக்கொப்புளம் என்று பெயர். இதை ஆங்கிலத்தில் அனிருசம் aneurysms என்று அழைப்பார்கள். மூளைக்குள் இருக்கும் தமனிகளில் சில நேரங்களில் இது போன்ற வீக்கங்கள் ஏற்படுவதுண்டு. இதை விட்டு விட்டால் எந்நேரம் வேண்டுமானாலும் இது வெடித்து அதனால் மூளைக்கும் இரத்தக்கசிவு ஏற்படலாம். சிறிதளவு மட்டுமே இரத்தம் கசிந்தால் சிகிச்சை அளித்து அந்த நபரை காப்பாற்ற முடியும். அதிக அளவு இரத்தம் கசிந்தால் அது உயிருக்கு ஆபத்தாக முடியும்.

எனவே இது போன்ற வீக்கம் இருப்பதை கண்டு பிடித்தவுடன் அறுவை சிகிச்சை செய்து கிளிப் ஒன்றை அங்கு பொறுத்தி வீக்கம் வெடிக்காமல் செய்ய வேண்டும். சில நேரங்களில் மூளையின் உள்ளே, எளிதில் அறுவை சிகிச்சை செய்ய முடியாத இடங்களில் வீக்கங்கள் இருந்தால் குருதி குழாய் வழியாகவே சுருள்கள் (coil) மற்றும் குருதி வழி திருப்பி (flow diverter) ஆகியவை மூலம் சிகிச்சை அளிக்கலாம்.
இவை அனைத்தும் மிகவும் நுணுக்கமான, நவீன கருவிகள் மற்றும் மிகுந்த திறன் தேவைப்படும் சிகிச்சை முறைகள். பொதுவாகவே மூளையில் செய்யப்படும் அறுவை சிகிச்சை தேவைப்படும் படிப்பு, பயிற்சி, திறமை ஆகியவை அதிகம். அதனால் தான் அறுவை சிகிச்சை செய்யப்படும் பல மருத்துமனைகளில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை.
இது போன்ற அறுவை சிகிச்சைகளை செய்ய
- அறுவை அரங்கில் நுண்ணோக்கி (Operating Microscope)
- நுண் அறுவை சிகிச்சை செய்யும் கருவிகள் (Micro surgery instruments)
- மூளை அறுவை சிகிச்சை நிபுணர் (Neurosurgeon)
- மயக்கவியல் நிபுணர் (Anaesthesiologist)
- அறுவை அரங்க செவிலியர் (Theatre Nurse)
- அறுவை அரங்க நுட்பனர் (OT Technician)
தேவை என்பதால் மூளை அறுவை சிகிச்சை செய்யப்படும் பல மருத்துவமனைகளில் கூட தமனிக்கொப்புளத்திற்கான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதில்லை. பல நாடுகளில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை. இந்தியாவிலும் கூட சில மாநிலங்களில் செய்யப்படாததால் தான் நோயாளிகள் சென்னை வருகிறார்கள்.
- விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி 2010ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தில் இருக்கும் பல மருத்துவக்கல்லூரிகளை விட அது புதிது தான்.
- மூளையில் உள்ள பெருமூளை நடுத்தமனியில் (MCA Middle Cerebral Artery) ஏற்பட்ட சிக்கலான முக்கூறு (Trifurcation) தமனிக்கொப்புளத்தால் (Aneurysm) பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு விழுப்புரம் அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மூளை முதுகுத்தண்டு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மரு.பல்லவன், மரு.சந்தோஷ், மரு. ராஜ்கவுதம் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.
தமிழக அரசு மருத்துவத்துறையில் இருக்கும் நவீன கருவிகள், மற்றும் மருத்துவர்களில் திறமை, அர்ப்பணிப்பு ஆகியவற்றில் ஆழத்தையும் அகலத்தையும் இது பறைசாற்றுகிறது.
இதே போல் மூளையின் உட்கழுத்துத் தமனியில் (Internal Carotid Artery) ஏற்பட்ட தமனிகொப்புளத்திற்கு (aneurysm) சில நாட்கள் முன்னர் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சென்னையின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதே பிரச்சனைக்கு, தனது வீட்டின் அருகிலேயே, முற்றிலும் இலவசமாக ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
189 வயதான மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியிலோ, அல்லது மதுரை, கோவை போல் தமிழகத்தின் ஓரிரண்டு இடங்களில் மட்டும் இது நடக்கவில்லை.
தமிழகத்தில் 25க்கு மேற்பட்ட இடங்களில் இது போன்ற நவீன உயர்தர அறுவை சிகிச்சைகள் தினந்தோறும் நடந்து கொண்டு தான் உள்ளன.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பல நாடுகளில் இந்த அறுவை சிகிச்சையை செய்யும் வசதி இல்லை. சில நாடுகளில் ஓரிரண்டு நிலையங்களில் மட்டுமே இதை செய்ய முடியும். அதுவும் அமெரிக்கவில் இதற்கு கட்டணம் $138,000.
தனது வீட்டில் இருந்து 50 கிலோ மீட்டருக்குள் இருக்கும் ஒரு மருத்துவமனையின் மூளையில் ஏற்பட்ட தமனிக்கொப்புளத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் வசதி உள்ளதும் அதுவும் இலவசமாக செய்து கொள்ளலாம் என்பதும் தான் தமிழக மருத்துவத்துறையின் சிறப்பு .
சில நாடுகளில் இந்த அறுவை சிகிச்சைக்கும் காலம் மிகவும் அதிகம் என்பதால் தமனிக்கொப்புளம் வெடித்து விடுகிறது.
Mariana Anto Bruno, Neurosurgeon,
Senior Assistant Professor,
Kalaignar Centenary super specialty hospital.