கொலை செய்துவிட்டு தப்பியவர்கள் அடுத்த சில மணி நேரங்களிலேயே சரண் அடைந்தது எப்படி? யார் அந்த உண்மை குற்றவாளி?
கொலை செய்துவிட்டு தப்பியவர்கள் அடுத்த சில மணி நேரங்களிலேயே சரண் அடைந்தது எப்படி? யார் அந்த உண்மை குற்றவாளி? – ஒரு கட்சியின் மாநில தலைவராக இருக்கக்கூடிய ஒருவரை 10 பேர் கொண்ட கும்பல் அவரின் வீட்டிற்கு அருகே சென்று படுகொலை செய்கிறார்கள். படுகொலை செய்தவர்கள் ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலாவின் கூலிப்படை பொறுக்கிகள். அதில் ஒருவன் நெல்லை ராஜா கொலை வழக்கில் தொடர்புடையவன் என்றும் கூறுகிறார்கள்.
வீடியோ லிங்
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் பண மோசடிக்கு ஆதரவாக செயல்பட்ட ஆற்காடு சுரேஷ் என்ற ரவுடியின் கொலைக்கு ஆம்ஸ்ட்ராங் காரணமாக இருக்கலாம் என்ற அடிப்படையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது போலீசின் கணிப்பு.
தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சி பிரமுகர்கள் அத்தனை பேருக்கும் ஏதோ ஒரு முன் விரோதம் காரணமாக இருக்கும் என்பது வெளிப்படையாக தெரிந்த உண்மை.

ஏனென்றால் தமிழகம் அரசியல் பணக்கார ரவுடிகள் கலாச்சாரத்திற்கு புகழ் பெற்றது. ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராய ரவுடி என்று பல அடைமொழிகளைக் கொண்டவர்கள் இன்றைக்கு புகழ்பெற்ற அரசியல்வாதிகளாக, கல்வி வள்ளலாக வலம் வருகிறார்கள்.
பணம், அதிகாரம், செல்வாக்கு என்று அசுர பலத்துடன் வரும் அத்தகைய நபர்களை அவ்வளவு எளிதில் நெருங்கி விட முடியாது என்பது தான் அப்பட்டமான உண்மை. தற்போது படுகொலை செய்யப்பட்டிருக்கும் ஆம்ஸ்ட்ராங் எளிய நபர் அல்ல. தேசிய கட்சியான பிஎஸ்பி-யின் மாநில தலைவர்.
தொழில் ரீதியாக வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், 2000 ஆம் ஆண்டு முதல் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு பிரபலமானார். 2006 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
உபியின் முன்னாள் முதல்வர் மாயாவதியை அழைத்து அமைந்தக்கரையில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்நடத்தி இருக்கிறார். தலித்துகள் சட்டம் படிக்க உதவியதோடு ஒவ்வொரு ஆண்டும், சுமார் 100க்கும் மேற்பட்டோருக்கு சட்டக் கல்லூரிகளில் சட்டம் படிக்க உதவியும் செய்து வந்திருக்கிறார்.

ஆம்ஸ்ட்ராங் சென்னை மாமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறார். குறிப்பாக அவரது தலைமையில் நடந்த போராட்டத்தின் காரணமாக, போதிய பாதுகாப்பு உபகரணம் இன்றி, சரியான ஊதியம், பணியிட பாதுகாப்பு இன்றி பணியாற்றிய சுமார் 2500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசு ஊழியர்களாக அங்கீகரிக்கப்பட்டனர் என்பது @highlight செய்தி.
நீட் தேர்வு ரத்து கோரியும், சிறுபான்மையினர் பாதுகாப்புக்காகவும், தலித் மக்களின் நலன் காக்கவும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி இருக்கிறார். ஏறக்குறைய 17 ஆண்டுகளாக தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு இருந்திருக்கிறார்.
அப்படிப்பட்ட ஒருவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. என்னதான் முன் விரோதமாக இருந்தாலும் ஒரு கட்சியின் தலைவரை படுகொலை செய்வதற்கான துணிச்சலும், தைரியமும் எப்படி வந்தது? அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை அந்த பொறுக்கி கும்பல் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.
இருந்தும் கொலை செய்திருக்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் இருப்பவர்கள் யார்?
ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே அதிமுக பிரமுகர் உட்பட 11 பேரை கடந்த ஆண்டே போலீஸ் கைது செய்துள்ளது.
இதில் ஆம்ஸ்ராங்க் எப்படி உள்ளே வந்தார்?
கைது செய்யப்பட்ட ரவுடி கும்பலுக்கும், ஆருத்ரா பண மோசடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்த ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கும் உண்மையில் தொடர்பு இருந்ததா?
வீடியோ லிங்
அப்படி இருந்திருந்தால் அந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட போதே உண்மை வெளியில் வந்திருக்க வேண்டும் அல்லவா? கொலை செய்துவிட்டு தப்பி சென்றவர்கள் அடுத்த சில மணி நேரங்களிலேயே சரண் அடைந்தது எப்படி?
உண்மையில் கொலைக்கான காரணம் என்ன ? உண்மைக் குற்றவாளியை கைது செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் ஆதரவாளர்கள் போராட்டம் செய்கிறார்கள். எனில் – யார் அந்த உண்மை குற்றவாளி?
பௌத்த வழியில் அன்பை போதித்த, முக்கியமான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு அரசியல் கட்சித் தலைவரை ரவுடிகளோடு முன்விரோதம் என்று முடிச்சு போடுவதை ஏற்க முடியவில்லை.
விரைவில் உண்மைக் காரணங்கள் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இனி இப்படியொரு சம்பவம் நிகழா வண்ணம் தலித்துகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
முகநூலில்: ரஞ்சித்