வெட்டிச் சாய்க்க முடியாத K. ஆம்ஸ்ட்ராங் என்ற ஆலமரம் !
வெட்டிச் சாய்க்க முடியாத K. ஆம்ஸ்ட்ராங் என்ற ஆலமரம் ! – நான் அறிந்த, நான் பார்த்த பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் அன்பிற்குரிய K. ஆம்ஸ்ட்ராங் ஒரு ஆலமரம். தன்னை நாடி வருபவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் அவர் பயன்பட்டார்.
படிக்க விரும்பிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, சுயதொழில் தொடங்க நினைத்தவருக்கு அதற்கான வழிகாட்டுதல், சமூகத் தொண்டாற்றி வறுமை நிலையிலேயே வாழ்ந்து மறைந்த சமூகப் போராளிகளின் இறுதி நிகழ்வுகளை முன் நின்று நடத்தியது என்று அவரின் பல்வேறு பணிகள் பிரம்மிக்க வைக்கிறது. பொதுவாக ஒரு அரசியல் கட்சித் தலைவர் இத்தகையப் பணிகளைத் தனது பணி என்று நினைக்கமாட்டார், அப்படியே நினைத்தாலும் இவற்றை செய்ய நேரம் இருக்காது.
வீடியோ லிங்
இதுவும் அரசியல் பணிதான் என்று செய்து காட்டியவர் அன்புத் தோழர் K. ஆம்ஸ்ட்ராங்.
பாஜக மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத சூழல், மெடிகல் கவுன்சில் ஆஃப் இந்தியா சட்டத் திருத்தம் நிறைவேற்ற போதிய பலம் இல்லை. இந்த வாய்ப்பை எதிர்கட்சிகள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக பல கட்சித் தலைவர்களை நாடினேன். அப்படிதான் சகோதரர் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களை அவரின் செம்பியம் இல்லத்தில் முதன் முதலில் சந்தித்தேன். பகுஜன் சமாஜ் கட்சி தனது உறுப்பினர்களை இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து பேசச் சொல்ல வேண்டும், எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்பதே கோரிக்கை.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் பெகன்ஜி அவர்களிடம் மாநிலத் தலைவர் என்ற முறையில் நீங்கள் பேச வேண்டும். தமிழ்நாடு கோருகிறது என்று அவருக்கு நீங்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று கோரினேன்.
மிகவும் நிதானமாக, பொறுமையாக அனைத்தையும் உள்வாங்கி தன்னால் இயன்ற அளவு அனைத்து வகையிலும் உதவுவதாக கூறினார்.முதல் சந்திப்பிலேயே சகோதரப் பாசத்தை உணர முடிந்தது.
பெரம்பூரில் புத்த விஹார் அமைத்து, சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய விழுமியங்களை மக்கள் உணரச் செய்ய பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டார்.
அன்பான, சிரித்த முகம். சில ஆண்டுகளுக்கு முன் திருமணம், இரண்டரை வயதில் பெண் குழந்தை. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை, ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் மூலமே கிடைக்கும் என்று உறுதியாக நம்பினார். அத்தகைய விடுதலைக்கு ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே அவரின் இலட்சியமாக இருந்தது.
பாபாசாககேப் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அவர்கள் விரும்பிய சமத்துவச் சமூகம் கட்டமைப்பதே அனைவருக்குமான விடுதலையாக அமையும் என்று உளமார நம்பினார். பௌத்த நெறி அதற்கு வழி வகுக்கும் என்பதே அவரின் நம்பிக்கை.
மாறுபட்ட கோட்பாடுகள், அரசியல் நிலைபாட்டில் வெவ்வேறு நிலைகள் இருந்தாலும், “நல்லதை இணைந்து செய்வோம்” என்று சகோதரப் பாசத்துடன் அனைவரையும் அணைத்துக் கொண்டவர் பௌத்த அறிஞர் அன்புச் சகோதரர் K. ஆம்ஸ்ட்ராங் அவர்கள்.
அவரின் கொடூரமான கொலை கோழைத்தனத்தின் வெளிப்பாடு. ஒரு ஆலமரத்தை வெட்டிவிட்டதாக கோழைகள் நினைத்துக் கொள்ளலாம், அதன் முட்டு வேர்கள் எங்கும் படர்ந்து கிடக்கிறது. ஆலமரத்தை யாரும் முழுவதுமாக வெட்டிச் சாய்த்துவிட முடியாது.
ஆலமரத்தின் ஒவ்வொரு பாகத்தினாலும் பயனடைந்த பல நூறு அன்பு நெஞ்சங்கள் இன்று துடித்துக் கொண்டு இருப்பதை உணர முடிகிறது. ஆலமரத்தின் நிழலில் இளைப்பாறிய திக்கற்றவர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளதை உணர முடிகிறது.
யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்பதே இன்றைய வேதனை.
அவரின் உயிராக இருந்த அவரின் துணைவியார், அவரின் கண்ணாக விளங்கிய அவரின் இரண்டரை வயது குழந்தை ஆகியோருக்கு இந்த சமூகம் நன்றி உணர்வுமிக்க சமூகம், நிச்சயம் இந்த சமூகம் உங்களுடன் இந்த பெருந்துயரில் பங்கேற்று உறுதுணையாக இருக்கும் என்ற பெரும் உத்தரவாதத்தை ஆறுதலுக்காக என்று இல்லாமல் உண்மையான தோழமை உணர்வில் இருந்து தருகிறோம்.
அவரை பிரிந்து தவிக்கும் உறவினர்கள், நண்பர்கள், பகுஜன் சமாஜ் கட்சியினர் அனைவருக்கும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
பௌத்த அறிஞர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அன்புச் சகோதரர் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீல வணக்கத்தை செலுத்துகிறேன். அவரின் மக்கள் தொண்டு நிலைக்கும். அவரின் நற்காரியங்கள் என்றும் மற்றவருக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரும்.
ஜெய் புத்தம்!
ஜெய் பீம்!
தோழர் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு
வீர வணக்கம்!
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
சென்னை நாள்: 06.07.2024
வீடியோ லிங்