நாடாளுமன்றத் தேர்தல் களம் – 2024 : திமுகவுக்கு நெருக்கடி தரும் பாஜக ?

இந்தத் தேர்தல் களத்தில் பாஜக திமுகவைத் தன் பிரதான எதிரியாக அறிவித்துக் கடுமையாகப் பிரச்சாரம் செய்து வருகின்றது.

0

நாடாளுமன்றத் தேர்தல் களம் – 2024 : 6 தொகுதிகளில் திமுகவுக்கு நெருக்கடி தரும் பாஜக ?

ரும் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. புதுவை உட்படத் தமிழ்நாடு முழுவதும் உள்ள 40 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. வடநாட்டு ஊடகங்களின் கருத்துக்கணிப்புகளில் திமுக 40 தொகுதிகளையும் வெல்லும் என்றும், திமுக 37 தொகுதிகளிலும் பாஜக ஒரு தொகுதியிலும் அதிமுக ஒரு தொகுதியிலும் வெல்லும் என்ற கருத்துக்கணிப்புகளும் வெளியாகிய வண்ணம் உள்ளன.

வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் திமுகவுக்கு கடுமையான நெருக்கடியை கொடுக்கும் தொகுதிகளாக ஆறு தொகுதிகள் அமைந்திருப்பதை கள நிலவரங்கள் காட்டுகின்றன.

அவை : 1. வேலூர் – திமுக அதிமுக புதிய நீதிக்கட்சி (பாஜக) ; 2. விழுப்புரம் (தனி) – விசிக அதிமுக பாமக ;  3. தருமபுரி – திமுக அதிமுக பாமக ;  4. சிதம்பரம் –  விசிக அதிமுக பாஜக ;  5. கன்னியாகுமரி –  காங்கிரஸ் அதிமுக பாஜக ;  6. இராமநாதபுரம் – இயூமுலீ அதிமுக சுயேட்சை (பாஜக).

- Advertisement -

- Advertisement -

திமுகவின் தேர்தல் பிரச்சாரம் …

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வேலூர் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகத்தைக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி கொண்டார். இதனால் இந்தமுறை ஏசி சண்முகம் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். பாஜக இந்தத் தொகுதியில் ஏசி சண்முகத்தின் வெற்றிக்குப் பல வகையில் வியூகம் வகுத்துப் பிரச்சாரம் செய்து வருகின்றது. ஏசி சண்முகம் முதலியார் வாக்குகளைப் பெற்றுவிடுவார் என்றும், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் வேலூர் தொகுதியில் பாஜக இந்துக்களின் வாக்குகளை ஒருமுகப்படுத்தி வருகின்றது. விசிக பக்கம் உள்ள தலித் வாக்குகளைப் பெறுவதற்குப் பாஜக அப்பகுதி தலைவர்களுக்குப் பெருந்தொகையை வழங்கிச் சரிக்கட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வகையில் வேலூர் தொகுதியில் திமுகவுக்குக் கடும் போட்டியைப் பாஜக ஏற்படுத்தியுள்ளது. என்றாலும் திமுகவை இஸ்லாமியர்களும், விசிக்கவை சார்ந்த தலித் சமூகத்தினரும் கைவிடமாட்டார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலூரில் ஏசி சண்முகம் வெற்றி பெற்றால் அதைப் பாஜக தன்னுடைய வெற்றியாகக் கொண்டாடும் என்பதில் ஐயமில்லை.

இந்தத் தேர்தல் களத்தில் பாஜக திமுகவைத் தன் பிரதான எதிரியாக அறிவித்துக் கடுமையாகப் பிரச்சாரம் செய்து வருகின்றது. ஆனாலும் திமுகவை விடப் பாஜகவின் பார்வை விசிக மீதுதான் அதிகம் இருக்கின்றது. காரணம் விசிக திமுக கூட்டணியில் வலது கரமாக இருக்கின்றது. விசிகவின் கடுமையான பிரச்சாரத்தால் குறிப்பாக இளைஞர்களை இந்து என்ற வலைக்குள் இணைக்கமுடியாமல் பாஜக தவித்து வருகின்றது. சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமா, விழுப்புரத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் அறிவுஜீவியாக இருக்கும் துரை.இரவிக்குமார் இருவரையும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காகப் பல்வேறு முயற்சிகளைப் பாஜக எடுத்து வருகின்றது.

4 bismi svs

தன்னிடம் கூட்டணி அமைத்துக்கொள்ளாத அதிமுகவோடு பாஜக 6+6 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள மாவட்ட அளவில், ஒன்றிய அளவில் உள்ள அதிமுக பிரமுகர்களைச் சந்தித்து, “நீங்கள் வெற்றி பெறுங்கள் அல்லது எங்களை வெற்றிபெறச் செய்யுங்கள்” என்று பேரம் பேசிப் பெரும் தொகையையும் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திக, திமுக பேசும் சனாதன எதிர்ப்பைவிடத் திருமா பேசும் சனாதன எதிர்ப்பு எளிய மக்களிடம் போய்ச் சேருகின்றது. இதனால் விசிகவின் திருமாவும் இரவிக்குமாரும் தோற்கடிக்கப்பட எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு இந்த இரு தொகுதிகளில் கடும் நெருக்கடியைப் பாஜக கொடுத்து வருகின்றது.

தருமபுரி தொகுதி வன்னியர்களின் வாக்குவங்கி மிகுந்த தொகுதி. இத் தொகுதியில் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்ட பாமக தலைவர் அன்புமணி வெற்றி பெற்றார். 2019ஆம் ஆண்டு  நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தார். இந்தத் தொகுதியில் அன்புமணியின் துணைவியார் சௌமியா போட்டியிடுகிறார். பாஜகவைவிடப் பாமக இந்தத் தொகுதியில் வெற்றி பெறவேண்டும் என்ற வேகத்துடன் தேர்தல் பணியாற்றி வருவதைப் பார்க்க முடிகின்றது. இந்தத் தொகுதியில் பாஜகவுக்கான வாக்குவங்கி மிகவும் குறைவு என்பதுதான் ஒரு குறையாக உள்ளது. பாஜக சார்பிலும், பாமக சார்பிலும் அதிமுகவின் மாவட்ட, ஒன்றிய அளவிலான பிரமுகர்கள் தனியாகக் கவனிக்கப்படுகிறார்கள் என்ற தகவல்கள் உள்ளன. இந்தத் தொகுதியில் சௌமியா அன்புமணி வெற்றி பெற்றால், மத்தியில் பாஜக ஆட்சி தொடர்ந்தால் சௌமியா அவர்கள் மத்திய மந்திரியாக இருப்பார் என்று பிரச்சாரம் செய்யப்படுகின்றது. திமுகவுக்குக் காங்கிரஸ் கட்சியின் வாக்குவங்கி இங்கே பெரும் துணையாக உள்ளது என்றாலும் இத் தொகுதியில் திமுகவுக்குப் பாமக+பாஜக இணைந்து பெரும் நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

அதிமுகவின் தேர்தல் பிரச்சாரம் …

இராமநாதபுரத்தில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடுகின்றது. அதிமுகவும், சுயேட்சையாக அதிமுகவிலிருந்த முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக ஆதரவுடன் போட்டியிடுகின்றனர். இத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெறப் பாஜக எல்லா வகையிலும் ஆதரவுகளைத் திரட்டி வருகின்றது. இந்து முன்னணித் தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்களைக் களத்தில் இறக்கி இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. 6 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள முக்கிய அதிமுக பிரமுகர்களைச் சந்தித்து நல்ல கவனிப்பையும் பாஜக செய்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்று, மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் ஓ.பன்னீர்செல்வம் மத்திய மந்திரி என்று அடித்துச் சொல்லிப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக இந்தத் தேர்தலில் வெற்றி பெறமுடியாத நிலையில், பன்னீர்செல்வம் வெற்றி பெற்றால், மத்திய மந்திரியாக இருந்தால் எடப்பாடி வசம் உள்ள அதிமுகவை ஒட்டுமொத்தமாகக் கரைந்து பன்னீர்செல்வம் வசம் வந்துவிட வாய்ப்புள்ளது என்ற கணக்கின் அடிப்படையில் பாஜக தேர்தல் பணிகளை முன்னெடுத்துத் திமுக கூட்டணிக்குக் கடும் நெருக்கடியைக் கொடுத்து வருகின்றது.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் மிகவும் வித்தியாசமானது. காரணம் இங்கே மாநிலக் கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கைவிடத் தேசியக் கட்சிகளுக்கே செல்வாக்கு அதிகம். அந்த வகையில் இங்கே இருமுறை வெற்றிபெற்ற பொன்.இராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகின்றார். இவர் ஒருமுறை மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் பரவலாக அறிமுகம் உள்ளவர் என்பது கூடுதல் பலம். திமுக அதிமுக கூட்டணி இல்லாமல் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாமக, மதிமுக ஆதரவோடு பொன்.இராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

பாஜக வெற்றிக்காக களமிறங்கிய மோடி …

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வசந்தகுமார் மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் வசந்தகுமார் மகன் விஜய் வசந்த், பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போதும் திமுக கூட்டணியில் விஜய் வசந்த் போட்டியிடுகின்றார். கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையில் உள்ளது. தோல்வி அடைந்தால் பாஜகவுக்குப் பெரும் அவமரியாதை என்று கருதிக் களத்தில் பாஜக சூறாவளியாகப் பிரச்சாரம் செய்துவருகின்றது. பொன்.இராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்தபோது செய்த சாதனைகளைப் பாஜக எடுத்துவைத்துப் பிரச்சாரம் செய்துவருகின்றது. மேலும், பொன்.இராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால், மத்தியில் பாஜக வெற்றி பெற்றால் மீண்டும் பொன்னார் அமைச்சராக வருவார் என்ற ரீதியிலும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. காங்கிரஸ் கூட்டணிக்கு வலுவாகத் திமுகவின் பிரச்சாரமும் அமைந்துள்ளது என்றாலும் பாஜக கன்னியாகுமரி தேர்தல் களத்தில் திமுக கூட்டணிக்குக் கடும் நெருக்கடியைக் கொடுத்துவருவதைக் களத்தில் காணமுடிகின்றது.

வேலூர், சிதம்பரம், விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம், கன்னியாகுமரி தவிர்த்த 34 தொகுதிகளில் திமுகவின் வெற்றிக்கொடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கின்றது. பாஜக கடும் நெருக்கடி கொடுக்கும் இந்த 6 தொகுதிகளிலும் திமுக தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றிக்கொடியை உயர்த்திப் பிடிக்குமா? என்பது ஜூன் 4ஆம் தேதி தெரிந்துவிடும்.

ஆதவன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.