அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே ... தொடர்பு எண் - 9488842025 அங்குசம் இதழ் டிசம்பர் 1-15 (2023) இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள்
கனல் தகிக்கும் நெஞ்சத்தோடு வழியனுப்பி வைக்கிறோம், சென்று வாருங்கள் சங்கரய்யா!
தோழர் சங்கரய்யா
பதினேழு வயதில் மாணவர் போராட்டத்தை தலைமையேற்று நடத்தியதற்காக 18 மாதங்கள் சிறைபட்டு, இளங்கலை பட்டம் பெறும் வாய்ப்பை தவறவிட்ட அந்த மாணவன், 102 வயதில் கௌரவ டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொள்ளாமலேயே நம் எல்லோரிடமிருந்தும் விடைபெற்று சென்றுவிட்டார் என்.சங்கரய்யா.
அரசு மரியாதையோடு பிரியாவிடை அளிக்கப்படும் என அறிவித்திருக்கிறார் முதல்வர். தங்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதைக்கு அரசு மரியாதை மருந்தாகிவிடுமா? ஆறா வடுவை விட்டுச் சென்றீரோ சங்கரய்யா?
எதற்காக, உங்களுக்கான டாக்டர் பட்டம் மறுக்கப்பட்டது?
அன்னிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மாணவர்கள் நடத்திய எழுச்சியில் முதல் ஆளாய் நின்றாயே அதற்காகவா? கல்லூரி நாட்களில் 18 மாதம்; அதற்குப் பின்னரும் பின்வாங்கி செல்லாமல் முற்போக்கு கம்யூனிச அரசியல் பேசியதற்காக பல ஆண்டுகள் சிறைவாசம் சென்றாயே, அதற்காகவா? மார்க்சிஸ்டு கட்சியின் ஸ்தாபகர்களுள் நீங்களும் ஒருவர் என்பதற்காகவா? மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றியதற்காகவா? ஜனசக்தி நாளிதழின் முதல் பொறுப்பாசிரியராகவும்; தீக்கதிரின் முதல் ஆசிரியராகவும் ஆனதற்காகவா? 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நிறுவிய தகை சால் தமிழர் விருதை முதன்முதலாகப் பெற்ற பெருமைக்குரியவர் என்பதற்காகவா? தள்ளாத வயதிலும் தடம் மாறாமல், இறுதி மூச்சுவரை சமூக, பொருளாதார சமத்துவத்துக்காக்காக குரல் கொடுத்தாயே அதற்காகவா?
அட, என்ன எழவுக்காக மறுக்கப்பட்டது டாக்டர் பட்டம்?
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக இளங்கலை பட்டத்தை இழந்ததற்காகக்கூட நிச்சயம் வருந்தியிருக்க மாட்டீர் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், இறுதி நாளில்கூட கௌரவமான முறையில் டாக்டர் பட்டத்தோடு உங்களை வழியனுப்பி வைக்க வக்கற்றவர்களாகிப் போனதற்காக தலைகுனிகிறோம். வாழ்நாள் வேதனையை நெஞ்சில் சுமக்கிறோம்.
இறுதி நிகழ்வாய் மூட்டும் தீயில் உம் சிதை முழுதும் வேகாது என்பதை நாங்கள் அறிந்தே இருக்கிறோம். அதற்காகத்தான், உன் சிதைக்கு மூட்டிய தீயிலிருந்து சிறு கங்கை எம் நெஞ்சின் ஓரமாய் இருத்தி வைத்திருக்கிறோம். கனத்த இதயத்தோடு மட்டுமல்ல; கனல் தகிக்கும் நெஞ்சத்தோடு வழியனுப்பி வைக்கிறோம், சென்று வாருங்கள் சங்கரய்யா!