“ஒற்றைத் திருக்குறளால் நோபல் பரிசு பெற்ற மருத்துவர்”
“ஒற்றைத் திருக்குறளால் நோபல் பரிசு பெற்ற மருத்துவர்”
செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழ்ப்பேரவைத் தொடக்க விழாவில் கவிஞர் ஜே.தமிழ்ச்செல்வன் பெருமிதம் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பணி முறை இரண்டு தமிழ்த்துறை ஏற்பாட்டில் தமிழ்ப்பேரவைத் தொடக்க விழா நடைபெற்றது.
கல்லூரிச் செயலாளர் அருள் முனைவர் கே.அமல், சே.ச. ஆசியுரை வழங்கினார். அவர் ஆசியுரையில், வீரமாமுனிவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு போற்றத்தக்கது. அந்த மாமுனிவர் தமிழாய்வுத் துறையின் நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் முன் நின்று ஆசி வழங்கி நடத்துகிறார் என்றே நம்புகிறேன். வாழ்வியல் நெறிகளை உலகுக்குச் சொன்ன மொழி தமிழ் மொழி. தமிழ் மொழியின் சிறப்புகளை, பண்பாட்டுக் கூறுகளை மாணவர்கள் உள்வாங்கி வாழ்வில் உயர வேண்டுமென்கிற நோக்கில் நடத்தப்படுகிற இந்த நிகழ்வு வெற்றி பெற வேண்டும் எனத் தம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் பெஸ்கி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வாசிப்புப் பழக்கம் மாணவர்களின் அன்றாடச் செயலாக மாற வேண்டும் என்கிற கருத்தை எடுத்துக்கூறி, மாணவர் படைப்புகளைத் தொகுத்து ஆளி என்னும் சிற்றிதழில் வெளியிடத் திட்டமிட்டுள்ள பணிமுறை இரண்டின் பேராசிரியர்களைப் பாராட்டி வாழ்த்துரையாற்றினார்.
நிகழ்வுக்குத் தலைமையேற்ற கல்லூரி இணை முதல்வர் முனைவர் பா.இராஜேந்திரன் தலைமையுரையாற்றினார். அவர் தலைமையுரையில், அறம் செய்ய விரும்பு என உலகிற்கு மனதிடத்துடன் சொன்னவர்கள், யாவருக்குமாம் என அடுத்திருப்பவர் முன்னேறச் சொன்னவர்கள், எல்லோருக்கும் உதவ வேண்டும் என ஈகை எனும் அதிகாரத்தைக் தந்தவர்கள் தமிழர்கள். இப்படியான ஆயிரக்கணக்கான விழுமியங்களை வாழ்வியல் நெறிகளாக மாணவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இந்த நிகழ்வின் நோக்கம் என எடுத்துக் கூறினார்.

தஞ்சை உரையாடல் கலை இலக்கிய அமைப்பின் நிறுவனத் தலைவர் கவிஞர் ஜே.தமிழ்செல்வன் இலக்கியங்கள் காட்டும் பாதை என்கிற பெருண்மையில் சிறப்புரை வழங்கினார். பண்டைய இலக்கியங்கள் வீரத்தைப் பற்றிப் பேசும். இடைக்கால இலக்கியங்கள் ஆன்மீகத்தைப் பேசும். இக்கால இலக்கியங்கள்தான் சமகால பிரச்சனைகளையும், காதலையும், அதன் சிக்கலையும் பேசும். 550 வயதான திருச்சி மெயின்கார்டு நுழைவாயில் கம்பீரமாக இருக்கிறது. அதைக் கண்டு நம்மால் உணர முடியும்.
ஆனால் ஒரு சமூகத்தின் அசைவை, பண்பாட்டை, நகர்வை அடுத்த தலைமுறைக்கு எப்படிச் சொல்ல முடியும். இப்படி ஒரு வினா எழுப்பினால் அதற்குப் பதில் தான் இலக்கியம். தமிழர்களின் ஒழுக்கத்தையும், அன்பையும், வீரத்தையும் எப்படி அறிந்து கொள்வது என வினா எழுப்பினால் அதற்குப் பதில் இலக்கியம். ஆல்பிரட் சுவைட்சர் என்ற மருத்துவரின் இசை நிகழ்ச்சி இன்றும் வெகுமக்களால் கொண்டாடப்படுகிறது. பழங்குடியின இனக்குழுக்கள் ஆப்பிரிக்க விலங்குகளால் அழிந்து வருவதை அறிந்த ஆல்பிரட் சுவைட்சர் தம் இசையைக் கைவிட்டு விட்டு ஆப்பிரிக்கா காடுகளில் தாமே ஒரு மருத்துவமனையை நிறுவி பழங்குடி மக்களுக்காக உழைத்தார்.
அவருடைய பணியைப் பாராட்டிய உலக அரங்கு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியது. நோபல் பரிசைக் கரங்களில் பெற்ற ஆல்பிரட் சுவைட்சர் சொன்னார், தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்ற ஒரு திருக்குறள் தான் என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது என்றார். எனவே இந்த விருதை வள்ளுவருக்குச் சமர்ப்பிக்கிறேன் என மேடையிலே அறிவித்தார்.
காந்தியை, லியோ டால்ஸ்டாயை ஒன்றாக இணைத்தது திருக்குறள். இப்படி எண்ணற்ற இலக்கியங்கள் தான் மனிதத்தைக் காப்பாற்றியது. இன்னும் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது. இலக்கியம் காட்டும் பாதையில் பயணிப்போம் என தம் உரையை நிறைவு செய்தார்.
பணிமுறை இரண்டின் வளனார் தமிழ்ப்பேரவை தலைவர் இ.யோகராஜ் நன்றியுரை வழங்கினார்.
கல்லூரித் துணை முதல்வர் சி.பாக்கிய செல்வரதி, தமிழாய்வுத்துறைப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், வணிகவியல் துறை மாணவர்கள் உள்ளிட்ட பலர் தொடக்க விழாவில் பங்கேற்றுப் பயன் பெற்றனர்.
– ஆதன்
மிகச் சிறந்த நிகழ்வாக அமைந்திருக்கிறது தஞ்சை உரையாடல் அமைப்பின் நிறுவனர் தமிழ்ச்செல்வன் அவர்களின் உரையும் முக்கால இலக்கியம் குறித்தும் நல்லதொரு அறிமுகமாக அமைந்திருக்கிறது இது போன்ற நிகழ்வுகள் மாணவர்களிடையே அதிக அளவு நடைபெற வேண்டும் நிகழ்வை ஏற்பாடு செய்த கல்லூரியின் நிர்வாகத்திற்கும் பேராசிரியர்களுக்கும் பங்கேற்ற அனைவருக்கும் மேலும் நிகழ்வை பதிவு செய்த ஆதன் அவர்களுக்கும் உடனடியாக வாசகர்களுக்கும் வெளிப்படுத்திய அங்குசம் இதழிருக்கும்நெஞ்சார்ந்த நன்றிகள்…
@
கவிஞர் .திருவைக்குமரன்