நாம் பேசும் அரசியல் என்பது வெறும் திண்ணைப்பேச்சு ஆகிவிடும் எப்போது தெரியுமா ?
கலைஞர் நோயுற்று மருத்துவமனையிலிருந்த நேரம். நியூஸ் கவரேஜுக்காக அடிக்கடி காவேரி மருத்துவமனை செல்லவேண்டி இருந்தது. அந்த நேரம் மிகுந்த பரபரப்பாக இருந்த நேரம். எப்படியாவது அடித்துப் பிடித்து போய்விட முனைவோம்.
ஒருமுறை அப்படி போகும்போது Wrong Route ல் நான் சென்றதால் டிராஃபிக் போலீஸ் நிறுத்தினார்கள். தோளில் துண்டு போடும் பழக்கம் அப்போது இருந்தது. விதவிதமான ஷால் மாடலில் துண்டு வைத்திருக்கிறேன். அன்று ஒரு ஊதா துண்டு போட்டிருந்தேன். போலீஸ் என் வண்dடியை நிறுத்தினார். ராங் ரூட் ல வரீங்களே அறிவில்லையா ? என்றார். தப்பு முழுவதும் என்னுடையது என்பதால் எந்த எதிர்வாதமும் பேசவில்லை. சாரி சார். கொஞ்சம் அர்ஜென்ட் வேலை அதான் டக்குனு வந்துட்டேன் என்றேன். அப்ப நாங்க எல்லாம் வெட்டியாவா இருக்கோம், எறங்குங்க, ..லைசென்ஸ் கொடுங்க என்றார். ( இதுவரை என் டூ வீலரில் Press என்று எழுதிக்கொண்டது இல்லை. என்னவோ ஒரு மன தடங்கல் அதில் உண்டு. போக, போலீசிடம் நான் பிரெஸ் சார் என்றால் தான் அதிகமாக திட்டு விழும் என்பதால் அப்படி சொல்வதும் இல்லை.)
எனது லைசென்ஸ் விழுப்புரத்தில் எடுத்த லைசென்ஸ் . 2009 ல் என் வீடு பெரியார் நகர் போக்குவரத்து குடியிருப்பில் இருந்தது. அவ்வாறு இருந்தாலும் லைசென்ஸில் ” வழுதரெட்டி போஸ்ட் ” என்று கூடுதலாக ஒரு வரி இருக்கும்.
விழுப்புரம் நகரில் இருப்பவர்களுக்குத் தெரியும். வி மருதூர் , வழுதரெட்டி பகுதிகள் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகள். டிராபிக் கான்ஸடபிள் நிச்சயமாக ஒரு தென்னாற்காடு மாவட்டத்து ஆள். லைசென்ஸ் பார்த்ததும் குதூகலமானர். வாங்க போங்க என்று தொடங்கிய பேச்சு இறங்குடா என்று அடா புடாவில் அரங்கேறியது. என்னடா ஊதா துண்டு, எட்றா என்றார். மறுபடியும் ஏன் ராங் ரூட்டில் வந்தாய் என அர்சசனையை எஸ்.ஐ தொடங்கியிருந்தார். உடனே கான்ஸடபிள் குறுக்கிட்டு, சார் இவனுங்கள தெரியல. வழுதரெட்டியானுங்க, அந்த ஊர்லையே பெரிய காலனி. அந்த அதப்பு என்றார்.

நான் தலித் இல்லை. ஆயினும் அந்த இடத்தில் என்னைய அவர் சகட்டு மேனிக்கு திட்டும்போது மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளானேன். இந்த மாதிரி நேரத்தில் கூச்சமே படமால் நுனி நாக்கு இங்கிலீஷை எடுப்பேன். அப்படி தான் ஆரம்பித்து, Sir, With due respect, what you are trying to do is utterly disgraceful and a racially discriminative offense and accounts to culpable actions against your post. If you want to file for a traffic offense, Kindly go ahead. I know what strings to pull to get me out of the mess. But if you think you can go scot free after instigating a caste-hate speech, then sir you are mistaken என்று கடுகடுத்த குரலில் சொன்னேன். பொத்திக்கொண்டு கேஸ் போடாமல் அனுப்பினார்கள்.
இங்கே என் இடத்தில ஒரு தலித், அதுவும் பெரிய பட்டறிவு இல்லாத, எதிர்த்து பேச தெரியாத ஒரு தலித் இருந்திருந்தால் அவரை எப்படி டீல் செய்திருப்பார்கள் என்று நினைக்க நினைக்க ஆற்றாமையாக இருந்தது. ஒருமாதிரி எரிச்சல் . எரிச்சல் என்பதைவிட வழுதரெட்டி என்ற இடத்திலிருந்து வந்தால் அவன் தலித். அவனை என்ன வேண்டுமானாலும் பேசலாம் எப்படி வேண்டுமானாலும் ஹாண்டில் செய்யலாம் என்ற போலீஸ்காரரின் தடித்தனம் மிகவும் டிஸ்டர்ப் செய்தது.
ஜாதி குறித்து நானோ , போலீசோ எதுவும் பேசவில்லை. ஆனால் இவன் இந்த ஜாதியாக இருப்பான் என்ற Hint டை அந்த ஊரை சேராத எஸ்.ஐ க்கு கடத்த கான்ஸடபிள் பயன்படுத்திய சொல் வழுதரெட்டி “காலனி “.
மெட்றாஸில் இருப்பவர்களுக்கு அண்ணா நகர் ஷாந்தி காலனி , தென்றல் காலனி , வசந்தம் காலனி என்பது உயர்குடி மக்கள் வசிக்கும் ஏரியா. அங்கே தலித் இருப்பார்களா என்று கேட்டால் இல்லை. அங்கிருந்து நாதமுனி தாண்டி பாடி குப்பம் அல்லது தாதன் குப்பம் செல்லவேண்டும். ஷாந்தி காலணியிலிருந்து மிஞ்சிப்போனால் 2-3 கிமீ . ஆனால் இந்த Divide டை துல்லியமாக பார்க்க முடியும். அந்த காலணியும் , இதர ஊர்களில் வழங்கப்படும் காலணியும் ஒன்றல்ல.
தென் பெண்ணை ஆற்றை ஒட்டிய ஊர்களில் இருப்பவர்களுக்குத் தெரியும். உதரணமாக பேட்டை என்று பஸ் ஸ்டாப் ஒன்று இருந்தால் கண்டக்கடரிடம் பேட்டை என்று சொன்னால் அது ஊர். பேட்டை காலனி என்று சொன்னால் அந்த ஊர் அருகே அந்த ஊர்மக்களால் விலக்கிவைக்கப்பட்ட சேரி தான் காலனி. ஆக, காலனி என்பது குடியிருப்பு என்ற பொருளில் பயன்படுத்துவதைத் தாண்டி தலித் மக்கள் மட்டுமே வசிக்கும் பகுதி என்ற குழுவூக்குறி சொல் என்று. சென்னையின் ஷாந்தி காலனியும், சாயிபாபா காலணியும் , செங்கல்பட்டத் தாண்டினால் குறிப்பிடப்படும் காலனியும் ஒன்றல்ல.
காலனி பையன், காலனியான், காலனிக்காரன், காலனி கும்பல் என தினுசு தினுசாக மக்கள் வன்மம் கக்க , எவ்வித கூச்சமும் , குற்றவுணர்வும் இன்றி இயல்பாக குறிப்பிடும் சொல் தான் காலனி.
இதையும் சென்னையின் ஷாந்தி காலனியையும் equate செய்வது என்பது அபத்தம் மட்டுமல்ல, ஒரு பெருங்குற்றம் நடக்கவே இல்லை அப்படியெல்லாம் இல்லை என்று gaslighting செய்வதற்கு ஒப்பான குற்றமும் கூட.
நானும் சேரிக்காரன் தான் ப்ரோ..
எந்த சேரி..?
வேளச்சேரி ..
இப்படி யாராவது சொன்னால் அது எந்த அளவுக்கு அபத்தமோ அதே அளவுக்கு அபத்தமானது தான் காலனி என்பது abusive சொல் அல்ல என்று நிறுவ முயல்வது. வேளச்சேரியும், பண்ருட்டி அருகே இருக்கும் செங்காட்டுசேரியும் ஒன்றல்ல. ஒன்றென நிறுவுவது அரசியல் பிழையும் கூட .
இதை தெரியாமல் செய்கிறீர்கள் என்றால் இனியாவது தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் தலித் இல்லாதவராக இருக்கலாம். தலித் தலைவர்கள், தலித் அரசியல் மீது ஒவ்வாமைகள் இருக்கலாம். அதற்காக ஒரு கொடுஞ்செயலுக்கு வக்காலத்து வாங்கவே கூடாது.
இதில் கரிசனம் கருணை என்று சொல்வதும் கூட ஆபாசம் தான். அடிப்படை மரியாதையற்ற ஒரு சொல் , இழிவு பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்றால் அதை எவ்வாறாகினும் எதிர்த்திடல் தான் மாண்பு, மாட்சி எல்லாமும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நீங்கள் இருக்கும் sophisticated cocoon தாண்டிய ஒரு உலகும் உள்ளது. அதில் ஏற்றத்தாழ்வு உள்ளது. அந்த ஏற்றத்தாழ்வு சூழல் நிலவ ஏதோவொரு வகையில் தலித் அல்லாத உங்களின் பங்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இருக்கிறது என்பதை அறிந்துகொள்வது சமூகநீதி பயிலும் எவருக்கும் இருக்கவேண்டிய அடிப்படை தார்மீகம். அதிலிருந்து தான் மீதி மயிறு மட்டை அரசியல், புரட்சி மீதியெல்லாம்.
ஒரு அரசின் மீது விமர்சனங்கள் வைக்கலாம். திட்டலாம். கடிந்துகொள்ளலாம். அதற்கான ஜனநாயக உரிமை எல்லோருக்கும் இருக்கிறது.
ஆனால் காலனி என்ற அடைமொழி நீக்கம் என்பது தமிழ்நாட்டின் சமத்துவ நெடும்பயணத்தில் ஒரு முக்கியமான விடிவெள்ளி. ஏன் surname ல் ஜாதி பெயர் இல்லாமல் இருக்கிறது என்று வடக்கர்கள் கேட்கும் போது ஒருவித பெருமிதம் நமக்கு வருகிறது ?
சுயமரியாதை அளவில் நாம் evolve ஆகியிருக்கிறோம் என்பதன் குறியீடு தான் ஜாதி அடைமொழி இல்லாமல் இருப்பது. அதேபோல் இந்த காலணி என்ற சொல் கொடும்பொருளில் பயன்படுத்தப்படுவது ஒழியும் என்றால் எந்தவித சின்னஞ்சிறு நடவடிக்கையை எவர் எடுத்தாலும் அதை வரவேற்பது தான் மானமிகு செயல் . even if it is a miniscule move, even if it has got a little political significance, we should stand by it.
அவ்வகையில் இந்த அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை மகத்தானது. அதில் ஒப்புதல் இல்லை என்றால் தாராளமாக விட்டுவிடுங்கள். ஆனால் தயவுசெய்து சாய்பாபா காலனி, வேளச்சேரி என்று மலினமான காமெடி செய்யாதீர்கள்.
ஒரே ஒருமுறையாவது ஒரு ஒடுக்கப்படுபவனின் shoes ல் நின்று இதை யோசிக்காவிட்டால் இதுகாறும் நாம் பேசும் அரசியல் என்பது வெறும் திண்ணைப்பேச்சு ஆகிவிடும்.
– Uma Pa Se, பத்திரிகையாளர்.